Saturday 29 November 2014

“மேளம் கொட்டு….. தாலி கட்டு…” பாகம்.2


 

இலக்கினாதிபதி என்கிற நானும், என் குடும்பம் என்கிற இரண்டாமதிபதியும், காரக்கனான சுக்கிரன் இம் மூவரும் கூடி, ஏழாமிடம் எனும் மனைவியின் (கணவனின்) வீட்டில் இருக்க, ஜாதகர் ஆணாக இருந்தால், மனைவியின் மேல் மேல் அதிகப்பித்துப் பிடித்தவராக இருப்பார். இதேபோல் பெண்களின் ஜாதகத்தில் இருந்தால் கணவன் மேல் பித்துப் பிடித்தவராக இருப்பார்.
நீங்கள் ஆணோ,பெண்ணோ உங்களின் ஜீவனமும்,தொழிலும் பத்தாமதிபதியைக் கொண்டு தானே நிர்ணயம் செய்யப் படுகிறது. பத்தாமதிபதியும், உங்கள் வாழ்க்கைத் துணையைக் குறிக்கும் ஏழாமதிபதியும், உங்களைக் குறிக்கும் இலக்கினாதிபதியும் ஏதோவொரு வகையில் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருந்தால், உங்கள் முன்னேற்றம், தொழில், உயர்வு, பணி அனைத்திலும்   வாழ்க்கைத் துணையே முக்கியப் பங்கு வகிப்பாள்.

உங்களின் பத்தாமதிபதி வாழ்க்கையைத் துணையைக் குறிக்கும் கிரகமான ஏழாமதிபதியுடன் கூடி ஆறில் இருக்க, உங்களின் வருமானத்தை அதிகம் செலவழிக்கும், மனைவியாகவோ, கணவனாகவோ இருப்பார். இதேபோன்ற கிரக அமைப்பில் ஆறாமிடத்திற்குப் பதில் உங்களின் விரையத்திலே (12) இருக்க, நீங்களே வருமானத்தை அழிப்பவராக இருப்பீர்கள்.   

உங்களின் ஏழாமதிபதி பலமிக்க கிரகமாக இருந்து, சனியுடன் தொடர்பு கொண்டு எட்டில் இருக்க, வாழ்க்கைத் துணை   நோயாளியாக இருக்கும். இத்தோடு உங்களின் சுகத்தைக் குறிக்கும் நான்காமதிபதியும் கெட்டுப் போனால், ஜாதகருக்கு நோயாளியைக் கட்டிக்கொண்ட புண்ணியத்துடன் சுகமற்றவராகவும் இருப்பார்.

 உங்களின் ஏழாமதிபதி கேதுவின் சாரத்தைப் பெற்றிருந்தால், அல்லது ஏதேஒருவகையில் தொடர்பில் இருந்தாலும், திருமணம் செய்வதில் தடையேற்படும்.

இதே போல, உங்களின் குடும்பாதிபதியும் கேதுவின் தொடர்பை பெறாமல் இருப்பது நல்லது. சாதாரண மனிதனுக்கு குடும்பம் நடத்த போதிய ஞானம் இருந்தால் போதும். அதீத ஞானம் குடும்ப வாழ்வுக்கு ஆபத்தைத்தான் தரும். இரண்டில் கேது இருந்தால் குடும்ப வாழ்வு சரியிருக்காது.  
இங்கு சொல்லப்படும் ஜோதிட விளக்கங்கள் அனைத்தும்  அடிப்படை ஜோதிடத்தைக் கற்பவர்களுக்கானது. இவ்வழியில் பல சூட்சுமங்கள் புரிபடும். குறைவாக விளக்கினாலும், தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.   

உங்களின் வாழ்க்கைத்துணை தந்தை வழியில் வந்தவரா? தாயின் வழியில் வந்தவறா? அல்லது மற்ற வழிகளில் வந்தவரா? என்பதை எப்படி அறிவீர்கள்.
சூரியன் தந்தைக் காரகன் என்றும், சந்திரன் தாய்க்காரகன் என்றும் நமக்குத் தெரியும். இப்போது உங்களின் வாழ்க்கைத் துணையைக் குறிக்கும் ஏழாமதிபதியோ அல்லது காரகன் சுக்கிரனோ சூரியனின் தொடர்போ, சாரமோ, இணைவோ பெற்றிருந்தால், தந்தைவழியில் வாழ்க்கைத்துணை அமையும். 

தந்தையைக் குறிக்கும் ஒன்பதாமிடத்தின் அதிபதி சுக்கிரன் அல்லது உங்களின் ஏழாமதிபதியுடன் இணைந்தோ, சாரம்பொற்றோ, தொடர்பு கொண்டோ இருந்தால், உங்களுக்கு வரும் வாழ்க்கைத்துணை தந்தை வழியில் வருவார். 

சந்திரன் தாய்க்கு காரகனாவதால், உங்களின் வாழ்க்கைத் துணையைக் குறிக்கும் ஏழாமதிபதியோ அல்லது காரகன் சுக்கிரன், சந்திரன் தொடர்போ, சாரமோ, இணைவோ பெற்றிருந்தால், தாய்வழியில் வாழ்க்கைத் துணை அமையும்.

தாயைக் குறிக்கும் நான்காமதிபதி சுக்கிரன் அல்லது உங்களின் ஏழாமதியுடன் இணைந்தோ, சாரம் பெற்றோ, அல்லது தொடர்பில் இருந்தால், உங்களுக்கு வரும் வாழ்க்கைத்துணை தாய்வழியில் வருவார். 

 

1 comment:

  1. அற்புதம் தொடருங்கள் உங்கள் பணியை

    ReplyDelete