.
கடைச்சங்கக் காலத்துக்கும் முற்பட்ட இடைச்சங்க காலத்தில் தோன்றிய தமிழனின் காலப்பெட்டகம். இன்றிலிருந்து சுமார் 2500 ஆண்டுகால வரலாற்றைத் தொட்ட தமிழனின் சிகரம். தமிழின் தொன்மையான நூல். திராவிட வாழ்வியல் முறையை, மொழியை, நாகரீகத்தை, பண்பாட்டு வழிமுறைகளை பதிவு செய்ய, தமிழன்னை கருவறையில் இருந்து ஈன்றுதந்த எத்தனையோ நூல்களில் முதல் நூல். அதுதான் தொல்காப்பியம். தமிழனின் வாழ்வியலை வகுத்துத் தந்தவர் தொல்காப்பியர்.
திருவள்ளுவர் தன் குறளில் அறம், பொருள் இன்பம் என்று மூன்றாகப் பிரித்து இருந்தாரோ, அவர்க்கு முன்னோடியான தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என மூன்றுபெரும் பிரிவுகளாகப் பிரித்துத் தருகிறார்.
தொல்காப்பியத்தைப் புரட்டிக் கொண்டிருக்கும்போது, அதில் இரண்டு பாடல்கள் கண்ணில் பட்டன. அந்தப் பகுதி எதுவென்றால், பொருளதிகாரத்தில் மெய்பாட்டியலில் புறனடையில் 25வது பாடலாகும். அதில் சாதிபேதமற்று “வர்ணாசிம” கிடுக்கிக்குள் சிக்காத திராவிட ஆண்மகனுக்கு வாழ்க்கைத்துணை அமைத்துதரும் முறையை விளக்குகிறார். ஒரு ஆணுக்கு மணமுடிக்க என்ன தகுதி இருக்கவேண்டும்.
பெண்ணுக்கு பொருத்தமானவன் எப்படி இருக்கவேண்டும் என்று தொல்காப்பியரும் பத்துப்பொருத்தங்களை ஒரு பாடலில் தந்திருந்தார். அதுமட்டுமல்லாமல், மணமக்களுக்கு இருக்கக் கூடாத பண்புகள் என்ன? என்று இன்னொரு பாடலிலும் கூறியிருக்கிறார். உண்மையில் எனக்கு வியப்பு மேலிட்டது.
உலகம் முழுவதும் திருமணப் பொருத்தங்கள் பார்த்துதான், தங்கள் வாழ்க்கையையை துவக்குகிறார்களா? எழுபத்தி ஐந்து சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் பொருத்தம் பார்த்து திருமணம் முடிப்பதில்லை. அதனால்தான், திரு. பொ. சங்கரன்பிள்ளை அவர்கள் தமது “திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி” என்கிற நூலில், “மேல்நாடுகளில் காதல் திருமணங்கள் முறிவடைவதற்கும், நமது சமுதாயத்தில் பொருத்தம் பார்த்துச் செய்து வைத்த திருமணங்கள் நிலைப்பதற்கும் காரணம், இந்த நாட்டின் பண்பாடேயன்றிப் பார்க்கப்பட்ட இந்தப் பொருத்தங்களால் அல்ல” என்கிறார். “திருமணம் செய்ய இருக்கும் ஆண்பெண் இருவரிடையே மனப்பொருத்தம் அமையின், ஜாதகப் பொருத்தங்கள் பார்க்கவேண்டியதில்லை” என்கிறார் உத்திரகாலாமிருதத்தில் காளிதாசர். திரு. வி.கே சுவாமி அவர்கள், தனது “ திருமணப் பொருத்தங்களும் சில திருத்தங்களும்” என்கிற நூலில், பத்துப் பொருத்தங்களையும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
பல குறைகளை வைத்திருக்கும் திருமணப் பொருத்தங்களை ஜோதிடர்களும் பார்த்தே ஆகவேண்டுமா? வாழையடியாய் வாழப்போகும் திருமண உறவை, நொடியில் பார்க்கலாம் என்று புத்தகம் போடலாமா? அற்புதமான சாத்திரத்தை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தலாமா? சிந்திப்போம். இப்போது,
தொல்காப்பியர் தரும் திருமணப்பொருத்தப் பாடலைக் காண்போம்.
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவு நிறுத்த காமவாயில்
நிறையே அருளே உணர்வோடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. 25
1) பிறப்பே – திராவிடச் சமூகத்தில் சாதீயப் பிரிவுகள் இல்லை. இங்கே பிறப்பு என்பது அவன் சார்ந்த தொழில் குடியைப் பொறுத்தது. அதில் நற்குடியில் பிறந்த என்கிற அர்த்தம் கொள்ளவேண்டும்.
2) குடிமை – நற்குடியில் பிறந்திருந்தால் மட்டும் போதாது. அந்த சமுகத்தில் ஒழுக்கம் உடையவனாக இருக்கவேண்டும்.
3) ஆண்மை _ ஆளுமைத் திறன் உள்ளவன். எவருக்கும் அஞ்சாதவன். மண்நோக்கிப் பாராதவனாகவும், கூர்த்த மதி படைத்தவனாகவும் இருக்கவேண்டும்.
4) ஆண்டோடு – தலைவியின் வயதையொத்து தலைவனின் வயது இருக்கவேண்டும்.
5) உருவு – தலைவன் தலைவி இருவரின் உருவமும், வளர்த்தியும், உடல் கட்டமைப்பும் இணையாக இருக்கவேண்டும்.
6) நிறுத்த காமவாயில் – நிறுத்த என்றால் ஆட்படுதல், காத்தல், நிலைப்படுத்தல் என்று அர்த்தமாகும். காமத்தீயில் ஆட்படும்போது, அதை அணைப்பவன் வரும்வரை கற்பைக் காப்பாற்றி, நிலைப்படுத்த, தன் தோழியிடமோ, தோழனுடனோ பகிர்வது இன்று நேற்று அல்ல. காலங்காலமாக நடந்து வரக்கூடிய விடயம்தான். தலைவன் தலைவியின் காம உணர்வு எப்படிப்பட்டது, அதீத உணர்வுள்ளவர்களா? மிதமான உணர்வுள்ளவர்களா? என்பதை அறிய, அவர்களின் நட்புவட்டங்களின் உதவியைத்தான் நாடுவார்கள்.
7) நிறையே – நெறிபிறழாதவன்.எதிலும் மனநிறைவோடு மாட்சிமை குறையாமல், மனக்கட்டுப்பாடுடன் இருத்தல்.
8) அருளே – அருளுடையவராக, பெரியோரை மதித்து அவர்வழியில் நடப்பராக இருப்பவர்.
9) உணர்வோடு- மன உணர்ச்சிகளை கோபக்குறியோடு வெளிப்படுத்தாமல், சமன்படுத்தும் வல்லமை உள்ளவராக,
10) திருவென – தலைவன், தலைவிக்கு உண்டான செல்வ நிலைகளைப் பார்த்தல்.
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே – தலைவன் தலைவி இருவருக்கும், அல்லது இருவீட்டாருக்கும் இந்த பொருத்தங்களில் எத்தனை ஒத்துவருகிறது என்பதை, முறையாக அளந்து, கலந்து பேசி மன ஒப்பமாக வேண்டும் என்கிறார்.
இந்த பாடல் தொல்காப்பியர் எழுதி சுமார் 2500 வருடங்கள் ஆனதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த பாடலே தெரியாமல், இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளையும், தங்கள் பொண்ணுக்கோ, பையனுக்கோ வரன் பார்க்கும் போது, கவனிக்கிறோமா இல்லையா? ஜோதிடப் பொருத்தம் பார்த்தும், தங்கள் பையனுக்கும், பொண்ணுக்கும் இது போன்ற பொருத்தங்களும் பார்க்கிறோமே எப்படி? இன்றையகாலத்தில் ஜோதிடவழி திருமணப்பொருத்தம் பார்க்காதவர்களும், இது போன்ற பொருத்தங்களை பார்ப்பது எப்படி?
ஒரு திருமணத்திற்கு செல்கிறோம். அங்கே நடக்கும் பேச்சுக்களைக் கேட்டாலே, தொல்காப்பியர் சொன்ன பத்துப் பொருத்தங்கள் அலசி ஆராயப்பட்டு இருக்கும். “ பொண்ணுக்குப் பையன் பொருத்தமானவனா தெரியல”, “பையன் ஒழுக்கமானவன் இல்லை. கொண்டு செலுத்திடுவான்னா” “பையன் முரட்டுத்தனமா இருக்கான். பொண்ணு பாவம் குருவிக் குஞ்சாட்டம் இருக்கு” பொண்ணு வசதியானது. பையனுக்குப் படிப்பு மட்டும்தான். ஆனா, வசதி இல்ல. அதனால பொண்ண தந்து இழுத்துக்கிட்டாக” இது போன்ற நம் காதுபடவே, “பட்டாசுகள்” கொளுத்திப் போடப்பட்டிருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் தொல்காப்பிய நூலை எல்லோரும் கற்றுணர்ந்து அதன்படி தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொள்பவர்கள் அல்ல. இலக்கணமும் இலக்கியங்களும் அந்நியப் பட்டுப்போய் உள்ளது. நம் மக்கள் பாடலைப் படித்து புரிந்து அதன்படி நடப்பவர்கள் அல்ல. அதன்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளபவர்களும் அல்ல. பின் எப்படி பாடலில் கூறிய கருத்துப்படி, வரன் தேடுகிறார்கள்.
ஜோதிடரை நாடி திருமணப்பொருத்தங்கள் பார்ப்பவர்கள், இது போன்ற எழுதப்படாத பொருத்தங்களை எப்படிப் பார்க்கிறார்கள். இந்த மக்கள் என்னவிதமான கருத்தோட்டங்களில் வாழ்கிறார்களோ, அதை தொல்காப்பியர் குறிப்பிடுவதால், இது போன்ற தமிழ் நூல்கள் உயிர்ப்போடு இருக்கின்றன. தொல்காப்பியன் காலத்தில் வாழ்ந்த தமிழனின் மரபணுக்களில் பொதிந்திருக்கும், வாழ்வியல் தத்துவங்கள் தான் இன்றைய தமிழனின் மரபணுவிலும் புகுந்திருக்கிறது. அதனால்தான், காலமாற்றத்துக்கு ஏற்ப ஜோதிட சாத்திரத்தை பலர் ஏற்றுக் கொண்டிருந்தாலும், திருமணப்பொருத்தம் மட்டும் பார்க்காமல், தொல்காப்பியர் கூறும் பத்துப் பொருத்தத்தையும் அறியாமலே பார்க்கிறார்கள்.
இனி,
மணமகன், மணமகள் இருவரிடையே இருக்கக் கூடாத பனிரெண்டு குணங்கள் எவை என்று தொல்காப்பியர் வரையறுத்துக் கூறுகிறார். அதையும் பார்ப்போம்.
நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போடு ஒப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர் 26
1) நிம்பிரி- மனதுக்குள் பொறாமையை வளர்த்து வஞ்சக எண்ணம் உள்ளவன்.
2) கொடுமை- பிறருக்கு கேடு செய்யும் தீவினை எண்ணம் கொண்டவன்.
3) வியப்பு- தன்னைப் பெரியவனாகப் பாவித்துக் கொண்டு, அதன்படி நடத்தல்.
4) புறமொழி- அடுத்தவனைப் பற்றி இல்லாததும், பொல்லாத்துமாக பேசித் திரிதல்.
5) வன்சொல் – மனதுக்குள் சூழ்ந்திருந்த வஞ்சினத்தை வார்த்தைகளில், வரம்பு மீறி பேசுபவன்.
6) பொச்சாப்பு – எந்த செயலிலும் தன்முனைப்பு இல்லாமல், முயற்சியின்றி இருத்தல்,
7) மடிமையொடு – சோம்பேறித்தனம் உள்ளவன்.
8) குடிமை- இவள் தன்னை விட தாழ்ந்த குடியைச் சேர்ந்தவள் என்று நினைப்பவன்.
9) இன்புறல்- உன்னைவிட அதிக ஆனந்த்ததை அடைய வேண்டியன் என்றிருத்தல்
10) ஏழைமை- அறிவின்றி செயல்படுவதால், ஏழ்மையை நோக்கி குடும்பத்தை நகர்த்துபவன்.
11) மறப்போடு- எதுவும் நினைவில்லாமல் மறந்துவிடுவது.
12) ஒப்புமை- தன்னால் முன்பு காதலிக்கப்பட்ட பெண்ணுடன் ஒப்புமை காட்டிப் பேசுபவன்.
என்றிவை இன்மை என்மனார் புலவர் என்று, தலைமகனுக்கும், தலைமகளுக்கும் ஆகாத பண்புகள் என்கிறார் தொல்காப்பியர். இந்த ஒவ்வாத பனிரெண்டு குணங்களைக் கொண்டவர்கள் தங்களின் இல்லற வாழ்வை மிக எளிதாய் இழந்து விடுவார்கள். இப்படிப் பட்ட மனநிலையுள்ளவர்களை இளம்வயதிலே இனம்கண்டு தாய்தந்தையர்களும்,சமூகமும் அவர்களை நல்வழிப்படுத்தி, சமூகத்தின் தொடர்சங்கிலிக்குள் இணைத்துக் கொள்ளவேண்டும்.
கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே. 27
கண்ணினால் கண்டு படிப்பதனாலும், காதால் கேட்டு மகிழ்வதினாலும் மெய்ப்பாட்டின் இப்பகுதி ஆராய்ச்சிக்கு மிக அருமையானது. அறிவுள்ள மக்கள் விரும்பிக் கற்பது என்கிறார் தொல்காப்பியர். நீங்களும் படியுங்கள். தொல்காப்பியனின் மரபணுக்கள் தான், நம்மிடமும் உள்ளன.
நாம் வாழுகிற வாழ்க்கையை அவன் சொல்கிறான். அவன் சொன்னதை எதுவும் நாம் படிக்கவில்லை. படிக்கவில்லையென்றாலும், அவன் காட்டிய வழிகளில்தான் வாழ்கிறோம். அந்த வகையில் பெருமைப் படலாம். இந்த கட்டுரையைப் படிப்பவர்களின் ஒருவர் தொல்காப்பியம் வாங்கி மெய்ப்பாட்டைப் படித்தால், தொல்காப்பியத்திற்கு கிடைத்த வெற்றியாக பாவிக்கிறேன்.
முத்துப்பிள்ளை.
4/7/1.
வடக்கு வெள்ளாளர் தெரு
ஆத்தூர்.
அஞசல் 624701
கைபேசி 91501 06069.
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.