Tuesday 3 May 2016

மாந்தியின் மகிமைகள்


நம்முடைய ஜோதிடக் கணிப்பில் ஒன்பதுக் கிரகங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்தை, “மாந்தி எனும் ஒற்றைக் கிரகத்துக்குத் தருவதே இல்லை.
எந்தக் காரக உறவுகொண்ட கிரகத்துடன் மாந்தி இணைகிறதோ, அந்த காரக உறவுகளைப் பாதிப்படைய செய்யும். உதாரணத்திற்கு, மாந்தியுடன் சூரியன் கூட, தகப்பனைக் கடுமையாகப் பாதிக்கிறது. இதே போல் சந்திரன் என்றால் தாயைப் பாதிக்கிறது. மேலும் சுக்கிரனுடன் மாந்தி கூடும் போது கட்டிய மனைவிக்கு தேக நலத்தைக் கெடுத்து, ஜாதகர்க்கு வேசிகளின் சகவாசத்தை தந்துவிடுகிறது.. மாந்தியுடன் சனி கூட ஆயுள்தோடத்தையும், இராகு, கேதுவுடன் கூட அக்னி, நஞ்சுப் பயத்தையும் தருகிறது.
தானிருக்கும் பாவகத்தை மாந்தி கெடுப்பது, அல்லாமல், தன் முன்பின் பார்க்கும் பார்வையால், அந்த பாவகத்தையும், அதிலிருக்கும் கோள்களையும் கெடுக்கும்.

உங்களின் இந்தப் பிறப்பைக் குறிக்கும், இலக்கினதிபதியும், மாந்தியும் கூடி, முற்பிறப்பையும், இனி பிறக்கப் போகும் பிறப்பைக் குறிக்கும் இடங்களான ஐந்து, ஒன்பதாமிடங்களில் ஒன்றில் அமர, அந்தப் பிறப்பே சூனியமாக்கப்பட்டுவிடும். அப்படியானால், இந்தப் பிறப்பைக் குறிக்கும் இலக்கினத்தில் இலக்கினதிபதியும், மாந்தியும் அமர இப்பிறப்பில் அனைத்துவித தடைகளையும்  சந்திக்க வேண்டிவரும்.

உங்களின் ஜாதகத்தில் மிகப்புனிதமான ஐந்து, ஒன்பதாமிடங்களில் ஒன்றில், இலக்கினதிபதியும், மாந்தியும் அருகருகே இருந்து, சூரியன் பார்த்தால், பிதுர் சாபம் என்கிற தகப்பனுக்குப் பீடை ஏற்படும். இதில் சூரியனுக்குண்டான பக்கப்பார்வைகளும் தீமை தரும் என்றாலும், நேர் பார்வை அதிக சாபத்தைத் தந்துவிடும்.

இதேபோல், சப்தமத்தில் சந்திரன் பார்க்க, மாதுரு தோஷமும், செவ்வாய் பார்த்தால், இரத்த உறவுள்ள சகோதரர்களால் சாபமும், புதன் பார்த்தால் மூத்த அண்ணனால், குரு நிந்தையால் சாபமும், வியாழன் என்கிற குரு பார்த்தால் குலதெய்வ தோஷமும், கோவில் சொத்தையும், ஊர்ப்பணத்தை கொள்ளையிட்ட தோஷமும், சுக்கிரனால் பார்க்கப்பட்டால், கன்னிப் பெண்ணின் தோஷமும், சனியால் பார்க்கப்பட்டால், தனக்குக் கீழ் பணிபுரியும் பணியாள், அல்லது வேலையாட்களின் சாபமும் ஏற்படும்.

இந்த தோஷங்களை அறிவதன் மூலம் தங்களின் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்ளுங்கள். நன்றி.   

எந்த காரக உறவுகள் கொண்ட கிரகத்துடன் குளிகன் என்கிற மாந்தி சேர்ந்தாலும், முன்பின் ராசிகளில் பார்த்தாலும், அல்லது ஒரே நட்சத்திரப் பாதமோ அல்லது ஒரே பாகைகளில் நின்றாலோ, அந்த காரக உறவுகள் கடுமையாகப் பாதிக்கும்.


ஜாதகக் கட்டத்தில் உள்ள பனிரெண்டு வீடுகளில், ஒரு சிலவீடுகளில் மட்டும் குளிகன் எனும் மாந்தி இருக்க நன்மையான பலன்களே ஏற்படுகிறது. அவைகள் எதுவென்றால், மூன்று, ஆறு, பதினொன்று என்கிற மூன்று வீடுகள் மட்டுமே. இதிலும் மூன்றில் குளிகன் இருப்பவர்களுக்கு காம இச்சையும், அதனால் போகவெறியும் கூடுதலாக இருக்கும். அதனால் காமத்தை அடக்கப் பழகினால் போதும், மற்றைய பலன்கள் ஜெயமாகவே முடியும். சகோதரர்களிடம் சுமூக உறவை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஆறில் மாந்தியிருக்க, எதிரிகள் அழிவர். மந்திரமாய நாட்டம் உண்டாகலாம்.பதினொன்றில் மாந்தியிருக்க, திடீர் தனயோகம் ஏற்படும் 
உங்கள் ஜாதகத்தில் மாந்தி நின்ற வீட்டுக்குடையவன், இலக்கினத்திற்கு கேந்திர, திரிகோணங்களில் நின்றாலோ, அல்லது மாந்திக்கு கேந்திர, திரிகோணங்களில் நின்றாலோ செல்வவளம் பெருகும்.

மாந்தி என்கிற சனியின் துணைக்கோள், தான் நிற்கும் வீட்டையும், பார்க்கும் வீட்டையும் பாழ்படுத்தும்

கிரகங்களின் காரக உறவுகளாக, சூரியன் என்றால் தந்தைக்குரியவன், சந்திரன் என்றால் தாய்க்குரியவன் என்ற அடிப்படைச் செய்திகளை அறிந்து வைத்திருப்போம். பொதுவாக, ஒரு காரக உறவுக்கிரகம், அதே காரகப் பாவகவீடுகளில் அமர, அக்காரக உறவுக்கிரகத்தால் நன்மை ஏதும் ஜாதகனுக்கு ஏற்படுவதில்லை. (உ.ம்) தந்தையைக் குறிக்கும் சூரியன், தந்தையைக் குறிக்கும் பாவகமான ஒன்பதில் அமர தகப்பனால் நன்மை ஏற்படப் போவ்தில்லை. இதேபோல் தான் சந்திரன் நான்கினில் அமர, செவ்வாய் மூன்றினில் அமர, குரு ஐந்தினில் அமர ஜாதாகர்க்கு நன்மை ஏர்படப் போவதில்லை. இதேபோன்று தான் மற்றைய கிரகங்களுக்கும் உண்டாகிறது.

காரக உறவுக்கிரகத்துடன் மாந்தி கூடி, அதே காரகப் பாவகத்தில் அமர, அந்த உறவே ஜாதகர்க்கு இல்லாமல் போய்விடவும் வாய்ப்புள்ளது. (உ.ம்) இலக்கினத்திற்கு ஒன்பதில் சூரியனுடன், மாந்தி அமர்ந்தாலும், ஜாதகன் தந்தையால் கைவிடப்பட்டவனாக இருப்பான். இதேபோன்றுதான், மற்றையக் கிரகங்களுக்கும்…. மேலும்,

இலக்கினத்திற்கு இரண்டாமிடம் வாக்குஸ்தானமாகும். பேசுவதற்கான அதாவது, வாக்கின் காரகக் கிரகமான குருவுடன் மாந்தி கூடி, அதே இரண்டாமிடத்தில் அமர, ஜாதகனின் பேச்சு ஈனத்தனமான, கண்டனத்துக்குரியப் பேச்சாக இருக்கும். இதேபோல, மற்றைய காரகங்களுக்கும் காணவேண்டும்.                                                                                                                                                                                       முத்துப்பிள்ளை. 91501 06069, 0451-2556525

Wednesday 3 February 2016

கவியரசர் கண்ணதாசன்


பாட்டுக் கோட்டை



கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் தான் எழுதிய பாடலுக்கான சம்பளத்தைப் பெற, படத் தயாரிப்பாளரை சந்திக்க சென்றார். உள்ளே பேச்சுக்குரல் கேட்டது. மளமளவென அலுவலகத்துக்குள் நுழைந்தார். அங்கே படமுதலாளி, அடுத்தப் படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்க, பட்டுக்கோட்டையார் வாசலிலே நின்றார். ஏறெடுத்தப் பார்த்த பட முதலாளி, தன் கண்களால் ஏற இறங்கப் பார்த்து விட்டு, வந்த நோக்கம் என்ன என்பது போல, நெற்றியைச் சுருக்கிப் பார்த்தார். உடனே, கவிஞர், “தங்கள் படத்திற்கு எழுதிய பாடலுக்கான சம்பளத்தை வாப்fகிப் போக வந்தேன்” என்றார். அதற்கு படமுதலாளி, “ நாளைக்கு வாரும் தர்றேன்” என்றார். கவிஞருக்கு என்ன துன்பமோ, இன்றே பணத்தை வாங்கியே தீரவேண்டும் என்பது போல, நின்று கொண்டே இருந்தார். மீண்டும் பார்த்த பட முதலாளி, “ என்ன நின்னுண்டு இருக்கேள். போ .. போ ,, போய்ட்டு நாளை வாரும். இல்லைன்னா நின்னுண்டே இரும்” என்று கூறுகிறார். முகத்தில் கோபத்தைக் காட்டாத கவிஞர், அங்கே கிடந்த தாளை எடுத்து வேகமாக ஏதோ எழுதி, “ முதலாளி” முன்னே எறிந்துவிட்டு சென்று விடுகிறார். அந்த தாளில்,

தாயால் வளர்ந்தேன்
தமிழால் அறிவு பெற்றேன்
நாயே! … நேற்று உன்னை
நடுத்தெருவில் சந்தித்தேன்
நீயார் என்னை
நில்லென்று சொல்ல”  

என்றிருந்தது  கவிஞனின் கோபத்தினைக் கண்ட முதலாளி ஒரு நிமிடம் ஆடியே போய்விட்டான்.


நீ கவிஞன் டா! நீ… நீ… கவிஞன் டா

Monday 25 January 2016

மனத்துறவும், மனிதத்தின் நிலையும். 1 ஜோதிடக்கவிஞர் முத்துப்பிள்ளை 91501 06069,87548 73378, 89405 29429, 0451. 2556525



இந்த மனிதப்பிறவியில் அவனின் வாழ்க்கை எவ்விதம் அமையவேண்டும் என்பது, முன்பே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. அப்படி தீர்மானிக்கப்பட்டதை, அவனுக்கு உணர்த்தவும்  தவறவில்லை. இதை தீர்மானித்தவனும், அதை வெளிப்படுத்தியவனும் ஒருவனே! அவனை இறைவன் என்று மேம்படுத்திச் சொன்னாலும், இயற்கை என்று தன் வாழ்வியல் சூழலோடு இணைத்துச் சொன்னாலும், ஏதோவொன்று உணர்த்தியது என்றுதானே அர்த்தம்.

பிறவிச் சங்கிலியில் பிணைக்கப்பட்ட மனிதன், தன் பகுத்தறியும் தன்மையால் அண்டவெளி இரகசியங்களை அறியமுயல்கிறான். அறிந்ததை பகுத்தறிந்து விடையும் தேடுகிறான்.

இறைவனுக்கும், மனிதத்துக்குமான இடைவெளியை ஒன்பது கோள்களையும், இருபத்தியேழு நட்சத்திரக் கூட்டங்களைக் கொண்டுமே நிரப்பப்பட்டுள்ளது. மனிதத்தைப் பற்றிய இறைவன் வகுத்தச் சூட்சுமங்களை, பதினெட்டுச் சித்தர்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது. இவர்களிடமிருந்தே ஜோதிடப் பேரொளி உலகெங்கும் பரவியது.

இதற்கு முந்தைய பிறவிகளில் தான் கற்றதையும், கற்றுக் கொடுத்ததையும், இந்தப் பிறவியில் தான் கற்றதையும், மற்றவர்களுக்கு கற்றுத் தந்தவன் மனிதன் மட்டுமே!

அறம் சார்ந்து வாழவேண்டும் என்பதே மனித இரகசியமாகும். இல் + அறமும், துற + அறமும் மனித வாழ்வியலின் குறியீடுகளாகும். ஒரு மனித வாழ்வில் இல்லறமும், துறவறமும், ஏதோ இப்பிறவியில் “திடும்” என நிகழ்ந்திடுவதில்லை. இப்பிறவியில் நுகரப்படும் அல்லது அனுபவிக்கப்படும் இன்ப துன்பங்கள், இப்பிறவிக்குண்டான வினைகள் என்று நினைத்தால் அது தவறு. இவைகள் ஏழேழுப் பிறவிகளின் கர்மாத் தொகுப்பாகும்.

முன்பிறவிகளின் கர்மாக்களின் வரவு, செலவுகள், இப்பிறவியில் பூர்வபுண்ணியங்களால் சரிபார்க்கப்படும். சென்ற பிறவியின் கர்மாக்கள், இப்பிறவியில் ஜீவனால் அனுபவிக்கப்படுகிறது.

ஒரு மனிதனுக்குள் ஆசைகள் ஊற, ஊற கர்மாக்களும் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும். ஆசைகள் அழிந்தால், கர்மங்கள் அழியும். கர்மம் அழிந்தால், மனம் ஒடுங்கும். மனம் ஒடுங்கினால், பரவெளி நிசப்த்தத்தில் ஜீவன் நிலைக்கும். அந்த பிரபஞ்சப் பேரொளியில் ஜீவன் பயணிக்கும்.
சென்றபிறவிகளில் தேடித்தேடிச் சேர்த்த கர்மங்கள் யாவும், அப்பிறவியிலே தொலைந்து விடாது. அவைகள் யாவும் இப்பிறவியிலும் தொடர்ந்து வரும். இந்த பிறவி வாசனையை நுகராத, ஆத்மாக்கே இல்லையெனலாம். மனிதக்கர்மங்கள் மீறாத தர்மங்கள் செய்திருந்தால், அவைகள் இப்பிறவியிலும் தொடரும்.

ஒவ்வொரு பிறவியிலும் சேர்க்கப்படும் பாவக் கர்மங்கள் கூடகூட, பரப்பிரம்மத்தோடு இணைய வேண்டிய, தூய ஆத்மாக்கள் சிதைக்கப்பட்டு அழிவதை சந்திக்கும். இதற்கு நம் பிறவியும் ஒரு காரணமாக இருந்து விடக் கூடாது.

உலகில் தோன்றிய சிந்தனையாளர்களும் அவர்களின் வார்த்தை வெளிப்பாடுகளும், உரைகளும், மனித மனங்களை செம்மைப் படுத்தும் வழிகளாகவே பார்க்கப்பட்டன. அவர்களின் சிந்தனா மொழிகள் அனைத்தும், ஆத்மாவை அழிவில் இருந்து காக்கவே பயன்பட்டன. ஆனால், சடங்குகளை கைகளில் எடுத்த மனிதன், சாத்திரங்களை குப்பையென புறம் தள்ளினான்.

பிறவித் துன்பங்களுக்கு பரிகாரங்கள் மூலம் வழிகாண முயன்றான். ஜென்மாதிஜென்மப் பாவங்களை மந்திர மொழியால் வென்று விடலாம் என புத்திக்குள் புகட்டப்பட்டன. ஆனால்,

பிறவித் துன்பங்களுக்கு கர்மாவே காரணம். அதனால், பரிகாரம் தீர்வல்ல. நம் கர்மவினைகளுக்கு பரிகாரம் செய்யும் அதிகாரம் படைத்தவனுக்குத்தான் உண்டே தவிர, மனிதனுக்கு இல்லை. மனிதத் தோற்றத்தில் வெள்ளை, கருப்பென நிறமி வேறுபாடுதான் உண்டே தவிர, ஆத்மாவுக்குள் வெள்ளை கருப்பென்று எதுவுமில்லை. ஆத்மாவில் அடைபட்டுள்ள இருவினைகளில் (நல்வினை, தீவினை) கூடுதல் குறைச்சலே “கர்மா சுத்தத்தை”க் காட்டும்.

எனக்குள் இருக்கும் ஆத்மாவை, என் கர்மவினைகளால் (நல்வினை, தீவினை) தான் கழுவ முடியும். புனித நீர் தெளிப்பதாலும், புரியாத மந்திரங்களை துப்புவதாலும், பூர்வஜென்ம வினைகள் தீர்ந்து விடாது.

இப்பிறவியில் அனுபவிக்கும் நல்லக் கர்மாவோ, தீயக் கர்மாவோ, ஏதோவொரு பிறவியின் வெளிப்பாடுகள் தான். இப்பிறவியில் உயர்ந்த நிலையை அடையும் ஆத்மா, பல்வேறு பிறவிகளில் உயர்வான (முக்தி) நிலையை அடைய, மிகப் பெரும் போராட்டமே நடத்தியிருக்கும்.

இந்த “சனாதன மதம்” இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று கர்மாக் காண்டம். மற்றொன்று ஞானக்காண்டம். கர்மம் என்பது வினை செய்வது. ஞானம் என்பது துறவு மேற்கொள்வது.
கர்மம் என்பது உலக இன்பத்திற்கும், இகவாழ்விற்கும் இட்டுச் செல்வது. ஞானம் என்பது துறவு நெறியில் நேரடியாக அகவாழ்விற்கு இட்டுச் செல்வதும் ஆகும். பிறருக்கு தீங்கு செய்ய ஞானவாழ்வு வாழ்பவர் அஞ்சுவார். காரணம், பிறர்க்கு தீங்கு செய்ததற்கான விலையை, இப்பிறவியிலோ, அடுத்தப் பிறவியிலோ தீர்க்கவேண்டும் என அவர்க்கு தெரியும். பிறர்க்கு இக, அகவாழ்விலோ  தான் நலம்பெற வேண்டும் என்றால், பிறர்க்கு தீங்கு செய்யும் வினைகள் செய்யாமல் இருப்பதே நன்று. தனக்கும் பிறர்க்கும் நன்மை பயக்கும் வினைகளை செய்ய வேண்டும். நல்ல கர்மவினை ஒருவனை முக்திக்கு அழைத்துச் செல்லும். தீயகர்மவினை ஒருவனை ஆத்மா அழிவிற்கு இட்டுச் செல்லும்.

சென்ற பிறவியில் தேடித்தேடிச் சேர்த்த தீயக்கருமங்கள் இப்பிறவியில் பிறப்பெடுத்த நமக்குத் தெரியாது.ஆறலால், அவைகளை விட்டுவிடலாம். ஆனால், இப்பிறவியில் எந்ய்யும் கர்மங்கள் அல்லது வினைகள் யாவும், நாம் அறிந்ததுதானே. அதனால், தீயக்கருமங்களை,  தீயக் கருனங்களினால் உண்டாகும் ஆசைகளை அறிந்து தடுத்தோமேயானால், நல்லவினைகள் கூடும். மனம் வயப்படும். பரப்பிரம்மத்தோடு ஜீவன் இணையத் துடிக்கும்.

இப்பிறவியில் ஆன்மீகக் கர்மாக்களை ஜீவனுக்குள் கோர்த்து பரமாத்மாவோடு இணையத் துடிக்கும், ஓர் ஆதீனத் துறவியின் பிறப்பு ஜாதகத்தை ஆராய்வோம்.


இராகு





                  
       இராசி
இல
சந்திரன் செவ்வாய்
சனி
சூரி-புதன் குரு
சுக்கிரன்
கேது- மாந்தி



விதி; 1

இலக்கினத்துக்கு பனிரெண்டாம் வீடு புதனுடைய வீடாகி, அந்த வீட்டைப் புதன் காணபுண்ணியங்கள் நிரம்பச் செய்தவனாவன்.

விளக்கம்;
இவருடைய ஜாதகத்தில் கடகம் இலக்கினமாகி, புதன் வீடு பனிரெண்டாம் வீடாகிறது. இந்த வீட்டை தனுசுவில் இருக்கும் புதன் காண்கிறார்.

விதி; 2

சூரியன் நல்லக்கோள்களுடன் கூடி உச்சமானாலோ, அல்லது கூடினாலோ, பார்த்தாலோ இளம் வயதில் துறவறம் பூண்டு, ஞானவாழ்வில் அடியெடுத்து வைப்பார்.

விளக்கம்;

ஆத்மக்காரகன் சூரியன், ஜீவக்காரகன் குருவுடனும், புத்திக்காரகன் புதனுடனும் கூடி அமர்ந்துள்ளார்கள். இவர் ஏழு வயதிலே துறவு மேற்கொண்டார்.

விதி; 3

சந்திரன், சனி நின்ற ராசிகளை, இலக்கினாதிபதி காண தீட்ஷிதனாக விளங்குவான். மேலும், செவ்வாய் நிற்கும் இராசி, சனியின் திரேகாண ராசியாக இருந்து, அந்த ராசியை சந்திரனும், சனியும் காண, அச்சாதகர் துறவியாக இருப்பார்.

விளக்கம்;

கர்மக்காரகன் சனி வீட்டான மகரத்தில் செவ்வாய் அமர, மனோக்காரகன் சந்திரன் கூடியுள்ளார். வக்கிரம் பெற்ற சனி தன் பலனை கடக வீட்டிலிருப்பது போல பாவித்து தன் பலனை செய்வதால், சிம்மத்தில் வக்கிரம்பெற்ற சனி கடகத்தில் நிற்பதாகவே அர்த்தமாகிறது. அதனால் கடக லக்கினாதிபதியான சந்திரன் மகரவீட்டில் நின்று, கடகத்தைப் பார்ப்பதால், வக்கிர சனியையும் காண்பதாகவே ஆகிறது.

விதி; 4

குரு, சனி, செவ்வாய் கூடி நிற்க அல்லது பார்த்திருக்க துறவியாக வாழ்வார்.

விளக்கம்;

சனி வீட்டில் செவ்வாய் நின்று, சனியை காண்கிறார். தன் ஒன்பதாம் பார்வையாக குரு, சனியை காண்கிறார்.

விதி; 5

பத்தாம் வீட்டினில் ஒரு கோள் நிற்க, விண்ணுலகத் தேவர்கள் வியந்து போற்றும் அளவுக்கு துறவற வாழ்வில் சிறந்து இருப்பார்.

விளக்கம்;

கால புருஷனின் பத்தாம் வீட்டினில் சந்திரன், சுக்கிரன் அமர்ந்துள்ளனர். பிறப்பு ஜாதகத்தில் பத்தில் இராகு அமர்ந்து, கேது சாரம் பெற்றுள்ளார்.   

சந்திரராசிக்கு பத்தாம் வீட்டினில் ஞானவான் கேதுவே அமர்ந்து, அன்றாடம் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்துபவராக உள்ளார்.

விதி; 6

இலக்கினத்திற்கு பத்தாமதிபன் நல்லக்கோளுடன் கூடினாலும், அல்லது பத்தாமதிபனுக்கு இரண்டுபுறமும் நல்லக்கோள் இருந்தாலும், நித்தம் சிவபூசை செய்பவராக இருப்பார்

விளக்கம்;

இலக்கினத்திற்கு பத்தாமதிபதியான செவ்வாயுடன் கூடியுள்ளார். இன்னும் அதிபட்சமாக செவ்வாய்க்கு இருபுறமும் நல்லக்கோள்களே அமர்ந்துள்ளனர்.

விதி; 7

செவ்வாய், சனி, குரு, புதன், சூரியன் இந்த ஐவரும் கூடியிருக்க, அல்லது ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள, தேடுதற்கரிய சன்மார்க்கம் வழியை அறிந்தவனாகி, ஞானச் சிந்தனையுள்ள சிவயோகியாக இருப்பார்.

விளக்கம்.

சூரியன், குரு, புதன் கூட, சனியை குரு காண, சனி வீட்டினில் செவ்வாய் அமர, இப்படி ஒன்றுக்கொன்று தொடர்பில் தான் உள்ளனர்.

விதி; 8

பத்தாம் வீட்டோன் நல்லவருடன் கூட, செல்வங்களாலும், பிரம்மவித்தையாலும் மேனானப் பலன்களே நடக்கும்.

விளக்கம்;

பத்தாமதிபன் செவ்வாய் சந்திரனுடன் கூடியுள்ளார்.

விதி; 9

ஒன்பதாம் அதிபதி ஆட்சி, உச்ச கேந்திரம் பெற ஞானமார்க்கம் சித்திக்கும். அந்த ஒன்பதாம் அதிபதி யாரோ அவராலே உபதேசம் பெறுவார்.

விளக்கம்;

ஒன்பதாமதிபனான குரு ஆட்சி பெறுகிறார். இவர்க்கு இவரின் மேன்மைமிகு “குரு மகா சன்னிதானம்” அவர்களே தூறவறம் மேற்கொள்ள மேன்மை தந்து ஆசி தந்தருளினார்.

விதி; 10

சூரியன், சந்திரன், செவ்வாய், மற்றும் குரு ஆகிய கிரகங்கள் பத்தாம் வீட்டில் இருந்தாலும், அல்லது பத்தாம் வீட்டோடு தொடர்பு கொண்டிருந்தாலும், இந்த சாதகர் எந்நாளும் அழிவில்லா துறவற வாழ்வில் சிறந்திருப்பார்.

விளக்கம்;

பத்தாமதிபதி செவ்வாயுடன் சந்திரன் கூடியுள்ளார். மேலும், சந்திரன், செவ்வாய்க்கு சூரியன் சாரம் வழங்கி, குருவின் வீட்டினில் அமர்ந்துள்ளார். இப்படி ஒன்றுக்கொன்று தொடர்பில் தான் உள்ளனர்.

விதி; 11

பத்தினில் கேது இருப்பதும், பத்தாமிடத்தைப் பார்ப்பதும், அறநிலையத்துறை அதிகாரியாகவோ, அறங்காவல் குழுத் தலைவராகவோ, ஒரு மடதின் அதிபதியாகவோ இருப்பார்.

விளக்கம்;

இராசிக்கு பத்தாம் வீட்டினில் கேது உள்ளார். மேலும், இலக்கினத்திற்கு பத்தினில் இருக்கும் இராகுவிற்கு கேது சாரம் வழங்குகிறார். இவரும் ஒரு ஆதீன மடத்தின் அதிபதியாக உள்ளார்.

விதி; 12

இலக்கினத்திற்கு நான்காம் வீட்டினில் கேதுவுடன், மாந்தியும் கூடியிருக்க, குடியிருக்க வீடுவாசலும் இல்லாதவராக இருப்பார்.

விளக்கம்;
இலக்கினம் கடகம். நான்காம் வீடு துலாம். இதில் கேது, மாந்தி. இன்றுவரை இவர் பெயரில் அசையா சொத்துக்கள் என்று எதுவுமில்லை. ஒரு அன்பரின் கல்விநிலையத்தில் தங்கியுள்ளார்.

விதி; 13

சூரியனுக்குப் பின்னே அசுரகுரு சுக்கிரனும், தேவகுரு வியாழனும் அமர்ந்திருக்க, “பாலை யோகம்” என்று பெயர். அதன் பலன் என்னவென்றால், வெகுவான கவிகளை படிக்க வல்லவன். பலநூற்களை கற்றுத் தேர்ந்தவன். சொற்பொழிவில் பெரும் வித்தகன். நெடுநாள் பூமியில் வாழ்பவன்.

விளக்கம். இவரின் ஜாதகத்தில் சூரியனுக்குப்பின்னே பாகை அடிப்படையில் குருவும், இராசியின் அடிப்படையில் சுக்கிரனும் பின்னுக்கு உள்ளனர். இவர் பல முன்னவர் பட்டங்களைப் பெற்றவர். கணக்கற்ற நூற்களைக் கற்றவர். எண்ணற்ற பட்டப்படிப்பும் படித்தவர். ஆன்மீக சொற்பொழிவாளர். அபாரத் திறமையுடையவர்.

இந்த ஆதீனக் கர்த்தாவின் ஜாதகத்தில், இன்னும் பல விதிகள், என் ஊனக்கண்களுக்கும் தெரியாமல் விரவிக் கிடக்கலாம். நீங்களும் இவரின் ஜாதகத்தினை ஆய்வு செய்யுங்கள். நன்றி.


ஜோதிடக்கவிஞர் முத்துப்பிள்ளை 91501 06069,87548 73378, 89405 29429, 0451. 2556525
கட்டுரை ஆக்கம். 05. 11. 2009       

Thursday 12 November 2015

ஜோதிடத்தில் “நான்” என்பது யார்?. முத்துப்பிள்ளை. 91501 06069, 87548 73378, 89405 29429



இந்த நாள், இந்த நேரம், இந்த நொடியில், இந்த இடத்தில், பிறக்கும் என்மேல் விழும் “நான்” என்கிற குறியீடு தான் இலக்கினமாகும். பஞ்சபூதங்களின் கலவையில், “மனம்” புகுத்தப்பட்டு, ஆன்மா ஈடேற்றத்திற்கான கர்மாப்பிணைப்புகளுடன் ஜீவன் உதிக்கிறது. அண்டங்களின் அணுத் தாக்கலில், அனுதினமும் வினைகள் நடந்தேறி வருகின்றன. இயக்கம் எங்கோ நடக்க, இங்கே இயங்குதல் நடக்கிறது. கர்ப்பவாயில் இருந்து உதிர்த்து விடப்பட்டு, தொப்பூள் கொடி நறுக்கப்பட்டவுடன், நாம் அண்டத்தில் தனித்து விடப்பட்டு, கிரகவீச்சுகளாலும், நட்சத்திர வாயுக்களாலும், தாது, கனிமங்களாலும் இயங்க வைக்கப்படுகின்றோம்.

இந்த சக்தியின் வேதிக்களின் கூடுதல் குறைச்சலே நம் கர்மாக்களையும், மனதையும் ஆன்மா ஓட்டத்திற்காக ஜீவனோடு இழுத்துச் செல்கின்றன. இங்கேதான் “நான்” என்கிற இலக்கினம், காலதேவனின் அண்டத்தில் அடங்கிய பன்னிரண்டு மண்டலங்களிலும் புகுந்து வெளி வருகிறது. ஒவ்வொரு மண்டலங்களிலும், ஒவ்வொருவிதமான தாக்கங்கள் ஜீவனுக்குள் ஏற்படுகின்றன. இங்கே ஆத்மா, மனம், கர்மா மூன்றும், ஒன்றுக்கொன்று இயங்குவதும், இயங்க மறுப்பதுமான நிலை ஏற்படுவதால், “நான்” என்கிற இலக்கினத்திற்கு கிடைக்கவேண்டிய நற்பலன்கள் கிடைத்தும், இயங்க மறுப்பதால் கிடைக்காமலும் போய்விடுகின்றன.

கேந்திரம் என்கிற 1, 4, 7, 10 என்கிற இராசி மண்டலத்திலும் ,

பணபரம் என்கிற 2, 5, 8, 11 என்கிற இராசி மண்டலங்களிலும்,

ஆபோக்கிலீயம் என்கிற 3, 6, 9, 11 என்கிற இராசி மண்டலங்களிலும்,

துர்ஸ்தானம் என்கிற 12 என்கிற இராசி மண்டலத்திலும்,

ஆத்மா, மனம், கர்மா என்கிற மூன்றையும் இழுத்துச் செல்லும் போது ஜீவன்பெறப்போகும், இலாப, நட்டங்களைச் சொல்வதுதான் ஜோதிடம்.

உங்களின் இலக்கினதிபதி ஆண்கிரகமாகி இலக்கினத்திலே இருந்தால், உடல்பலமுள்ளவன், தன் சுயபுத்தியால் இயங்கக்கூடியவன், தனக்கென கொள்கை கோட்பாடுகளைக் கொண்டவன், மனதில் சஞ்சல மிக்கவன், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்டவன். பிறர் மனை நோக்குபவன்.

உங்களின் இலக்கினதிபதி இரண்டிலோ, பதினொன்றிலோ இருந்தால், அதிக வருமானம் கொண்டவன். படித்தவன். பல கலைகள் கற்றவன். நல்லது, கெட்டது அறிந்தவன். தன்மையான குணம் கொண்டவன். மனதுக்குள் அறச்சிந்தனைகள் மிகுந்த, மனிதத் தனமையுள்ளவன். வாழும் மனிதர்களில் உதாரணமாக, இவைச் சொல்லலாம்.

உங்களின் இலக்கினதிபதி மூன்றிலோ, ஆறிலோ இருக்க, தரத்திலும், அறிவிலும், பணத்திலும் எவ்வளவு பெரிய இடத்தில் இருப்பவனையும், குறிபார்த்து தாக்கி அழிப்பதில் வல்லவன். நல்லறிவும், நற்சுகமும், ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் வாழும் நிலையும் உருவாகும்.

உங்களின் இலக்கினதிபதி நான்கிலோ, பத்திலோ இருக்க, பெற்றவர்கள் அன்பும் அரவணைப்பும் அதிகமிருக்கும்.சகோதர்கள் ஆதரவும், தொழில் மேன்மையும் பெருகும், உடலழகும் உள்ளவனாகவும் இருப்பான்.

உங்களின் இலக்கினதிபதி ஐந்தினில் இருக்க, கவுரவம் மிக்கவன். அதிக மக்கட்பேறு கொண்டவன். முதல் குழந்தை உடல்நலம் பாதிப்போ, இழப்போ ஏற்படும். அதிக கோபம் உள்ளவனாவன். அரசு ஆதரவும், அதில் பணியும் ஏற்படும்.

உங்களின் இலக்கினதிபதி ஏழாமிடத்தினில் இருக்க, மனைவி நட்டமும், விரக்தியுள்ளவனும், அடிக்கடி தேசாந்திரம் செல்பவனாகவும், வறியவனாய் இருப்பான். ஆனால், சுபக்கிரகம் பார்த்தால் நன்மையும், பாவக் கிரகங்கள் தீமையானப் பலன்களும் கிடைக்கும்.

உங்களின் இலக்கினதிபதி எட்டு, பனிரெண்டாமிடங்களில் இருக்க, மறைவான சாத்திரங்களை நிறைவாகக் கற்றவனும், சிற்பவித்தைக் கற்றவனும், அதிகக் கோபமுள்ளவன், பிறமகளிரை விரும்பிப் புணர்பவனாக இருப்பான்.

உங்களின் இலக்கினதிபதி ஒன்பதாமிடத்தினில் இருக்க, பாக்கியம் மிக்கவன், எல்லோரிடமும் அதிகாரம் மிக்கவன். இறைபக்தி மிக்கவன், நாவன்மை மிக்கவன், மக்கட்செல்வமிக்கவன்.

உங்களின் இலக்கினத்திற்கு இரண்டுக்குடையக் கிரகம், இரண்டாமிடத்தினிலே இருந்தால், பார்க்கிறப் பொருட்களின் மேலும் ஆசை கொண்டு, அதை அடைய முயற்சி எடுப்பான். தன்னைப் போல் எவனுமில்லை என்கிற கர்வம் கொண்டவன். ஒன்றுக்கும் மேற்பட்டப் பல பெண்களை அடைவான், அல்லது அவர்களோடு குடும்பம் நடத்துவான். புத்திரர் இருக்காது. ஒருவேளை இருந்தாலும் உதவாக்கரையாக இருப்பான்.
 
இரண்டுக்குடையவன் மூன்றாமிடமான வீரியஸ்தானத்திலும், நான்காமிடமான சுகஸ்தானத்திலும் இருந்தால், வெற்றிக்கு மேல் வெற்றியை அடைபவனாகவும், அறிவுத்திறன் கூடியவனாகவும், கஞ்சத்தனம் மிக்கவன், தன் முயற்சி இருந்தால் போதும், வாழ்வில் மாற்றங்களைக் காண முடியும் என்கிற நம்பிக்கை கொள்வதால், இறைசக்தி மேல் பற்று இல்லாதவனாகவும் இருப்பான். அடுத்தவன் மனைவியின் மேல் வெறி கொண்ட புணர்ச்சி ஆசை கொண்டவன்.

இரண்டுக்குடையவன் ஆறில் இருந்தால், பகைவர்களால் செல்வ இழப்பைச் சந்திப்பார். எதிரிகளிடம் பணிந்து ஊதியம் பெறும் நிலையும், விருப்பமே இல்லாமல் அலுவல் செய்யும் நிலையும் ஏற்படும். மலத்துவாரங்களிலோ, அடிவயிறு, மற்றும் நெஞ்சுப் பகுதியிலும் வலி அல்லது நோய் இருக்கும்.

இரண்டாமதிபதி ஏழாமிடத்தினில் இருந்தால், மருத்துவமுறைகள் தெரிந்தவன். பிறர் மனை நோக்குபவன். இவனைப் போலவே இவன் மனைவியும் இருப்பாள். அன்னையின் மேல் அவதூறு கருத்துக்களும் இருக்கும்.

இரண்டாமதிபதி எட்டாமிடத்தினில் இருந்தால், சொத்துக்கள் சேரும். பூமி, செல்வம் உள்ளவன். மனைவினால் அளவான சுகம் கூட இருக்காது. மூத்த சகோதரனால் ஆதரவிருக்காது.

இரண்டாமதிபதி பாக்கியஸ்தானமெனும் ஒன்பதிலோ, இலாபஸ்தானமெனும் பதினொன்றிலோ இருக்க, செல்வச்செருக்குடன் வாழ்பவன். அதிகமாக தானதர்மங்களில் ஈடுபடுபவன். தன் வாழ்நாள் முழுதும் சுகபோகமாக வாழ்பவன். உடல் உறுதியுள்ளவனாக இருந்தாலும், இளவயதிலே நோய் தாக்கம் அதிகமிருக்கும்.

இரண்டாமதிபதி ஜீவனஸ்தானமெனும் பத்தினில் இருந்தால், காம எண்ணம் அதிகமிருக்கும். சமூகசெல்வாக்குடையவனும், அதிகம் படித்தவனும், அனுபவமும் மிக்கவனும், பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பவனும், மக்கட் செல்வம் குறைவாய் பெற்றவனுமாகவும், அதிகச் செல்வங்களைக் கொண்டவனுமாக இருப்பான்.

இரண்டாமதிபதி பனிரெண்டாமிடத்தில் இருந்தால், அன்புடையவன், இனியதன்மை கொண்டவன், வறுமை உள்ளவன். அரசாங்கத்தால் ஊதியம் பெற்று அதனால், ஜீவனம் நடத்துபவனாகவும் இருப்பான். தன் கொள்கை எதுவோ, அது மட்டுமே சிறப்பானது என்று இறுமாப்புடன் இருப்பான்.


இரண்டாமதிபதி இலக்கினத்திலும், ஐந்தாமிடத்திலும் இருந்தால், தன் குடும்ப மேன்மைக்காக ஓடாய் உழைப்பான். அதிக செல்வங்கள் உடையவன். பிறர் முயற்சிக்கு பேருதவி புரிபவனாகவும் இருப்பான். ஆனால், இவன் பழிபாவம் சுமந்தவனாக வாழ்ந்து முடிப்பான்.   

Thursday 5 November 2015

பருவம் படுத்தும் பாடு. 1

  
நான் பிறந்தேன். வளர்ந்தேன். படித்தேன். பருவம் வந்தது. திருமணம் முடித்தேன். குடும்பத்தில் இருந்தேன். குழந்தை பிறந்தது. அவன் வளர்ந்தான். படித்தான். பருவம் வந்தது. திருமணம் முடித்து வைத்தேன். பின் அவன் குடும்பம் நடத்தினான். குழந்தை பிறந்தது. பின் அதுவும் வளர்ந்தது .. .. .. .. இந்த சக்கரம் போன்ற வாழ்க்கையின் முடிவுகள் என்பது இவைகள் தானா? இதற்குள் தான் மனிதன் ஏதோவொன்றை தேடிக் கொண்டே இருக்கிறான்.

இந்த சக்கர வாழ்க்கை அனைவருக்கும் ஒன்றுபோல் பலன் கிடைத்து விடுகிறதா? என்றால், அதுவும் இல்லை. ஒருவனுக்குப் பிறப்பே சரியில்லை. இன்னொருவனுக்கு வளர்ப்பு சரியில்லை. சிலர் பருவம் வருவதற்கு முன்பே, “பழுத்து” விடுகின்றன. பலருக்கு ஆசையிருக்கும். வெளிப்படுத்த தெரியாமல், தனக்குள்ளே புதைத்துக் கொள்வார்கள். பலருக்கும் இணை தேடும் ஆசையும் இல்லாமலே இருக்கும். பலருக்கு திருமணமில்லை. முடிந்தாலும் விவாகரத்து. வாழ்ந்தே இருந்தாலும் வறுமை. வேண்டாம் என்பவர்களுக்கு வரிசையாய் பிள்ளைகுட்டிகள். பணத்தை வைத்துக்கொண்டு தவமிருப்பவர்களுக்கு, “டெஸ்ட் டியூப் பேபி”. சொத்து உள்ளவனுக்கு வளர்ப்புப்பிள்ளை. அதுவுமில்லாதவனுக்கு காணுகிற குழந்தைகள் அனைத்தும் தன் பிள்ளைகள்.

ஆம். நண்பர்களே! நாம் ஒரு சில பாவகங்களை மட்டும் கையிலெடுத்து, அதை பற்றிய சிறு விளக்கங்களை தர இருக்கிறேன்.

குடும்ப வாழ்க்கையில் முழுமையாய் ஈடுபட பல பாவங்கள் உறுதுணை செய்ய வேண்டும் என்றாலும், முக்கியமாக மூன்றாம் பாவகமும், அதன் அதிபதியும் பலமுடன் இருக்க வேண்டும். ஒருவர் மற்றவர் மேல் ஆதிக்கம் செலுத்தும் பாக்கியத்தை உடையவராக அடையாளம் காட்டும் இடமும் அதுதான். ஒரு ஆணின் வீரியம், பெண்ணின் வீடான ஏழாமிடத்திக்கு, ஒன்பதாமிடமாக (பாக்கிய ஸ்தானம்) வருவது, ஒருவருக்கு வீரியம், ஜெயம். அவரின் இணைக்கு அது பாக்கியம். என்று கூறி, அடுத்த தொடரில் சந்திப்போம். நன்றி.

இந்த இகவாழ்க்கையில் புதிதாய் எதுவும் இல்லை. புதிதாய் தெரிந்தாலும், அது புதியதின் மறு உருவாக்கமாகத்தான் இருக்கும். எந்த வினைகளும் உங்களுக்குள் இருந்துதான் உருவாகி பரிமளிக்கிறது உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும், பிரபஞ்ச வெளியிலும் இருப்பதால், உங்களின் ஜாதகத்தில் கிரக, நட்சத்திரப் பலத்தைப் பொறுத்தே  கிடைக்கின்றன. உங்களின் சூரியன் பலப்பட்டு இருந்தால், ஆளுமையும், அதிகாரமும் செல்லுபடியாகும். இல்லையென்றால், “புழு” கூட எதிர்த்து நிற்கும்.

இலக்கினம் எனும் “எனக்கு” எதிரே, (அதாவது இலக்கினத்திற்கு ஏழாமிடம்) என் சமூகமும், அந்த சமூகத்தில் இருப்பவர்களையும் காண்கிறோம். அதில் இருந்து வரும் “பெண்ணே” என்னை ஆள்பவளாக வருவாள். சமூகத்தின் பிரதிநிதிதான் மனைவியாக வருவதன் மூலம், என்னைப் பற்றிய மதிப்பீடுகளும் சமூகத்திற்கு தெரியவரும்.

“நான்” என்கிற இலக்கினதிபதியும், சமூகப் பிரதிநிதி என்று சொல்லும் ஏழாமதிபதியான “மனைவியும்” ஒன்றுக்கொன்று உறவாகவோ, உறவானவர்களின் இல்லங்களில் இருப்பதோ, நல்லோர் பார்வை பெறுவதோ. கணவன், மனைவிக்குள் இணக்கமான சூழலை உருவாக்கும். மாறாக, ஒன்றுக்கொன்று பகை பெற்று, பகைவர் வீட்டினில் அமர, அல்லது பாவர்கள் காண வாழ்க்கை முழுதும் பொருந்தி வாழாத தம்பதிகளாக வாழ்ந்து மடிவர்.

உங்களின் இலக்கினம் மகரமானால், அதன் அதிபதி சனி என்பவர் “நீங்கள்” தான். அதேபோல், மகரத்திற்கு (உங்களுக்கு) ஏழாமிடமான கடகம், உங்களின் சமூகத்தில் இருந்து வரும் சந்திரன்  “மனைவியைக்” குறிக்கும் அல்லவா? இப்போது, இவர்கள் இருவரும் இணைந்தால் தானே இல்லறம் சிறக்கும். இவர்கள் பாவர் பார்வை, சேர்க்கை அல்லது பாவர் வீடுகளில் அமர்வது, பாவர்கள் சாரம் பெறுவது என்று இல்லாமல், நல்லோர் சேர்க்கை, பார்வை, சாரம், அல்லது நல்லோர் வீடுகளில் இணைவது போன்ற நிலைகள் இருந்தால் மட்டுமே, இல்லறம் சிறக்கும். இல்லையென்றால், “கட்டிய கடனுக்கு” வாழ்க்கையை நகர்த்த வேண்டி வரும்.

சனியென்பவர் “கர்மா” வழிநடப்பவர். சந்திரன் என்பவர், “மனம்” போன போக்கில் வாழ்பவர். கர்மா நிலையானது. சலனப்பட்டு அலைவது மனமாகும். கர்மா நிர்ணயிக்கப்பட்டதை அனுபவித்து தீர்ப்பது. ஆனால், மனம் அப்படியல்ல. காண்பதை எல்லாம் அனுபவிக்க, பின்னே செல்வது.

இதேபோல், செவ்வாய் - சுக்கிரன், புதன் - குரு, சூரியன் - சனி, சந்திரன் - சனி என்று ஒன்றுக்கொன்று எதிர்மறையான கிரகங்களே வாழ்க்கைத் துணையாக வந்து வாய்க்கும். இந்த எதிர்மறைக் கிரகங்கள் அமர்ந்திருக்கும் இடங்களைப் பொறுத்தே வாழ்க்கையின் நிம்மதி பொதிந்திருக்கும்.        

நாம் நிம்மதியைப் பற்றி சிந்திக்கும் போது, மனதைச் சொல்லாமல் இருக்க முடியாது. மனமென்று ஒன்று இருப்பதால்தான் அவன் மனிதனாக இருக்கிறான். அது வெறுமனே கிடந்தால், அவன் ஞானி. கண்ட குப்பைகளையும் மனதுக்குள் அள்ளிப் போட்டிருந்தால், அவன் ரோகி.

இலக்கினத்திற்கு நான்காமிடம் என்பது மனதைக் குறிக்குமிடமாகும். அங்கே, ஜாதகரின் அசையும் சொத்துக்களையும், கையிருப்புப் பணத்தையும் சொல்லும், சொந்த ஊரையும், உறவுகளையும், குறிப்பாக தாயைப் பற்றியும் அறியுமிடமாகும். அதுவே, இலக்கினத்திற்கு ஏழாமிடமான மனைவி ஸ்தானத்திற்கு, நான்காமிடம் என்பது மனைவியின் மனதைச் சொல்லும் இடமாகும்.

உங்களின் (ஆணாகிய)  நான்காமிட அதிபனும், உங்களின் (ஆணாகிய) பத்தாமிட அதிபனும், இலக்கினத்திற்கு உறவாகவும், நட்பு, சம, உச்ச, ஆட்சியதிபர்களின் சாரமும் பெற்று உகந்த இடத்தினில் அமரவேண்டும். இவர்கள் (4+10) ஒன்றுக்கொன்று முரண்பாடுடைய கிரகங்களாக இருந்தால், கணவன், மனைவிக்குள் வேற்றுமை வளர்ந்து பிடித்தமில்லாமல் வாழ்வார்கள்.

உங்களின் (ஆண்) தாயாரைக் குறிக்கும் நான்காமதிபனும், உங்களின் மனைவியைக் குறிக்கும் ஏழாமதிபனும், உங்களின் தொழிலையும், உங்களின் மனைவியின் மனதைக் குறிக்கும் பத்தாமதிபனான மூவரும் உறவாடி நிற்க, மாமியார், மருமகள் பிரச்சனையில்லை. உங்களின் தொழிலும், வினைகளும் சிறப்பாக நடக்கும். அதேபோல், உங்களின் உறவினர்களுக்கும், உங்கள் இல்லத்தரசிக்குமான பாசப்பிணைப்புகளும் அதிகமாக இருக்கும். உங்களின் கையிருப்பை கரைக்காத மனைவியாகவும் வருவாள்.    
தொடரும்.
முத்துப்பிள்ளை. 91501 06069, 87548 73378, 89405 29429


மனதின் முடிச்சுகள்.



இக்கட்டுரை கடந்த இரண்டு நாட்களாக, எனக்குள் கேட்கப்பட்ட கேள்வியின் விளைவாகக் கிடைத்தப் பதில்கள் தான் இக்கட்டுரை.

மனம் (mind) என்பது என்ன? அது ஜோதிடத்தில் எந்த பாவகத்தில் இடம் பெறுகிறது. இதைப் பற்றி சிந்திக்கும் போது, ஜோதிடம் மட்டுமே மனதைப் பற்றிப் பேசவில்லை. நம் இலக்கண, இலக்கியங்களும், வேதாந்தமும், புத்தரின் தம்மபதமும், மற்றும்  அறிவியலும் மனதைப் பற்றி விரிவாக விரித்துரைத்துள்ளனர்.

மனம் என்பது என்ன? அதற்கு உரு உண்டா? அது நம் உடலில் எங்குள்ளது?

மனம் என்பது நம் சிந்தனை, நோக்குதல், தன் உணர்ச்சி வெளிப்படுத்துதல், உறுதி, கற்பனை போன்றவற்றில் இருந்து வெளிப்படுகின்ற அறிவு, (intellect)  மற்றும் உணர்வு சார்ந்த அமைப்புகளின் தொகுப்பாகும்.

மனித இயல்புகளில் எவையெவையெலாம் மனம் என்பதை உருவாக்குகின்றன என்பதே ஒரு விவாதப் பொருளாகும். சிலர் ஞாபகம் வைத்துக் கொள்வதையும், அதையொட்டி தர்க்கம் செய்வதையும், அறிவின் மேனிலை செயல்பாடுகள் என்றும் கூறுகின்றனர். இதன்படி காதல், வெறுப்பு, பயம், களிப்பு, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் உருவாவதாகச் சொல்லுகின்றனர். வேறுசிலர், பகுத்தறிவும், உணர்வும் என்றும் கூறுகின்றனர். இதைத்தான் தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், “ஆறாம் அறிவே மனம்” என்கிறார். அதாவது புலன்களோடு பகுத்தறியும் அறிவே மனம் என்கிறார் தொல்காப்பியர்.

இதையே நம் ஐயன் திருவள்ளுவரும், தனது “சிற்றினம் சேராமை” எனும் பொருட்பால் 48 வது அதிகாரம் முழுக்க மனதைப் பற்றியே கூறியுள்ளார்.

வேதாந்த மார்க்கத்தில், மனம் என்பதை நான்கு வகையாகப் பிரித்துள்ளனர். அவைகள்  மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகும்.

மனம்;

எதையும் உறுதியாக தீர்மானிக்க இயலாமல் போனால் அந்த நிலைக்கு குழம்பிய மனநிலை என்பர்கள். ஒருவன் சந்தேகப் பட்டால் எழும் நிலைக்கு மனம் என்று பெயர்.

சித்தம்;

நம் வாழ்வில் பார்த்தவைகள், கேட்டவைகள், உணர்ந்தவைகள் என நமக்குக் கிடைக்கும் அனுபவங்களை சேமிக்கும் நிலையமாக திகழ்வதை சித்தம் என்கிறோம்.

புத்தி;

“இது என்ன பொருள்” என பகுத்தறியும் நிலைக்கு புத்தி என்று பெயராகிறது. இதையெல்லாம் எப்போது அறிய முடியாமல் போகிறதோ, அப்போது புத்தி தடுமாறி, சித்தம் கலங்கியது என்று அர்த்தமாகிறது.

அகங்காரம்;

இந்த மூன்று நிலைகளிலும் (மனம், சித்தம், புத்தி) அனைத்தையும் அறிந்தபின் உருவாவது “நான்” என்கிற உணர்வுக்கு, மன அகங்காரம் என அழைக்கப் படுகிறது.

“பூட்டைத் திறப்பது கையாலே- நல்ல
மனம் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே- இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே!” என்றார் மகாகவி.

“மனம் அலை பாயக் கூடியது. நிலையற்றது. நினைத்த இடத்திற்கு செல்லக் கூடியது. மனதை கட்டுப் படுத்துவது கடினம். ஆனால், கட்டுப்படுத்துவது நல்லது. கட்டுப்படுத்தப்பட்ட மனம் இன்பத்தின் உறைவிடமாகும்.” என்கிறார் புத்தர்.

இதுபோல பலரும் மனம் என்கிற “வஸ்து” இருப்பதாக சொன்னால், அதற்கு “உரு” வேண்டுமே! உருவமில்லாத ஒன்றை காற்றைப் போலவும், கடவுளைப் போலவும், ஓளியைப் போலவும், ஒலியைப் போலவும் உணர்வால் தான் அறிய முடியும் அல்லவா? அந்த உணர்வில் ஏற்படும் சலனம் தான் மனமாகும். அது நிலையற்றது. ஆனால், சக்தி மிக்கது. மனதை அடக்கியவனை விட, அதற்கு அடங்கியவன் தான் அதிகம்.

இந்த மனதைப் பற்றி விஞ்ஞானமும் ஆய்வு செய்தது. அது மனிதன் இதயத்தின் கீழோ, அல்லது மூளையின் அடிப்பகுதியிலோ இருக்கலாம் என்கிறது.

சகல வாழ்வியல் நுட்பங்களையும், உடலியல் கூறுகளையும், அங்க அளவீடுகளையும் வெளிப்படுத்தும் ஜோதிடத்தில் மனம் என்பது குறீயீட்டுச் சொல்லாக இல்லாமல், அது தனிமனித வாழ்வின் போக்கையும் தீர்மானிப்பதாக உள்ளது.

காலதேவனுக்கு உயிர் இருப்பதால் தான், ஆத்மாவும், அதையொட்டி மனமும், கர்மாவும் இயங்க முடியும். இலக்கினத்தில் இருந்துதான் ஒவ்வொரு பாவமும் இயங்கும். அதாவது, இலக்கினம் என்பது இரயில் எஞ்ஜினைப் போன்றது. மீதமுள்ள பதினொரு இராசிகளும், எஞ்ஜினில் இணைக்கப்பட்ட இரயில் பெட்டிகளாகும். எஞ்ஜின் நன்றாக இருந்தால்தான் பெட்டிகளும் குறிப்பிட்ட பாவக வேலைகளை சரியாகச் செய்யும்.

அதனால், இலக்கினமும், இலக்கினதிபதியும் ஒவ்வொரு பாவகத்திலும் தன் பங்கைச் செலுத்தும். நம் ஜோதிட சாத்திரத்தில் மனதைக் குறிக்கும் கிரகமாக சந்திரனைக் குறித்துள்ளனர். இவர் நிலையற்று, தேய்வதும், வளருவதுமாக இருநிலைகொண்டும் உள்ளதாலும், நம் மனதில் அடிக்கடி மாற்றங்களைத் தருவதாலும் சந்திரனே காரகனாகிறான்.

என் நண்பர் கூறியது போல், “தன்முனைப்பும், வெற்றிபெற வேண்டிய வீரியம் இல்லையென்றால், மன ஒருமைப்பாடும், மன தைரியமும் இருக்காதே” என்பதைப் போலவும்.

காலதேவனின் நான்காம் பாவகம் மனதுக் காரகனான சந்திரனின் வீடாக இருப்பதால், அங்கே மனதின்  வாடையும்” இருக்கும் என்பதைப் போலவும்,

விதி, மதி, கதி என்கிற மூன்று நிலைகளும், ஒரு மனிதனை இயக்கும் சக்தியாக இருக்கும்.

மனம் என்பது இரண்டு நிலைகளைக் கொண்டது. அது மேல்மட்ட மனம் என்றும், ஆழ்மனம் என்றும் உள்ளது. அலைபாயக் கூடியது மேனிலையாக உள்ளது. அது நீரின் மேல்மட்டத்தைப் போன்றது. “ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும்” என்கிற இலக்கியப் பாடலைப் போல, மனம் அலை பாயும். அது காலதேவனின் நான்காமிடமாகும். 

காலதேவனின் மதிநுட்பத்தையும், மதி மயங்குதல், புத்தி, ஆழ்ந்த ஞானம், ஆழ்ந்த சிந்தனைகளைக் குறிக்குமிடமான ஐந்தாமிடமும் மனதின் காரகங்களை தனக்குள் வைத்திருப்பதால், நீரின் அடியாளத்தைப் போல அமைதியாக சலனமற்று, ஆழ்மனமாக அமைந்திருக்கும்.

எந்த பாவகமும் நல்ல நிலையில் பலன் தரவேண்டும் என்றால், உயிர், ஆன்மா, மனம், கர்மா இவைகள் தொடர்பு அவசியம், உங்கள் ஜாதகத்தில் பலம்பெற்று இருக்கவேண்டும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால், மனம் என்பது, பனிரெண்டு பாவகங்களிலும் தன் வேலையை சரியாக செய்து வரவேண்டும். இதில் எந்த முரண்பாடுகளும் இருக்கக் கூடாது.

முத்துப்பிள்ளை. 91501 06069, 87548 73378, 89405 29429.