Friday 14 August 2015

மனிதனின் மரணநாளின் மர்மங்கள் 4. முத்துப்பிள்ளை






ஆத்மக்காரகன் ______ சூரியன்,
மனோக்காரகன் ______சந்திரன்,
ஜெயக்காரகன் _______செவ்வாய்,
புத்திக்காரகன் _______ புதன்
ஜீவக்காரகன் ________குரு,
கர்மக்காரகன் ________சனி,
 ஞானக்காரகன் _______கேது,

இவர்களின் அருட்பார்வை இல்லாமல், எவரும் சொர்க்கவாசலைத் தொட்டு விடவும் முடியாது.

தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம், ஆறாம் அறிவான மனதை அடக்கி நிலை தடுமாறாமல் வாழ்ந்தால், மனச்சிதைவு ஏற்படாது என்கிறது. தமிழின் மற்றொரு தொன்மையான நூலான திருக்குறளில், பொறாமை, ஆசை, சினம், கடுங்கோபம் இந்நான்கையும் தவிர்த்தாலே மனச்சிதைவு ஏற்படாது என்கிறார் திருவள்ளுவர்.

மனதின் திறனை நல்ல உணர்வாலும், நல்ல எண்ணத்தாலும் வளர்க்காதவன், எந்த செயல்களிலும் முரண்பட்டுக் கொண்டேதான் இருப்பான். மனம் தடுமாறும் போது, சிதைவு எனும் புதைகுழியில் சிக்குவான். அதனால் கலங்குவான். அடங்க மறுக்கும் மனம் எந்த செயலிலும் ஒருபிடிப்பு இல்லாமல் இருக்கும்.

நம்மில் எல்லோருக்கும் மனம் வசமாவது இல்லை. மனம் வசப்பட்டவனால் மட்டுமே இறைவனை அடைய முடியும். மனதை நிலை நிறுத்த முடியாதவனால், இறைவனை அடையும் தூரத்தை, எளிதில் கடக்கவும் முடியாது. ஒன்றின்மேல் மனம் நிலைகொண்டால் மட்டுமே துணிவு கிட்டும். ஆத்மா பலப்படும். கர்மங்கள் கரைந்து விடும். கர்மம் தொலைந்துவிட, முக்தி கிட்டிவிடும். முக்தி கிட்டி விட்டால், பிறவிச் சங்கிலி அறுபட்டுவிடும் அதைத்தான், “மாயத்தை விட்டவனால் தான் காயத்தை விட முடியும்” என்றான் ஞானி.

“பிறப்பறுத்து ஆண்டு கொண்ட கூத்தனை நாத்தழும்பேற” துதித்த மாணிக்கவாசகப் பெருமான் போன்றவர்களால் தான், பிறப்பறுத்து முக்தி நிலையை எட்டமுடியும். இதுபோன்ற நல்வினைகளை எல்லாம் விட்டுவிட்டு, தனிஷ்டாபஞ்சமிக்காகக் குறிப்பிடும் நட்சத்திரங்களில் இறந்தால், அவர்களின் ஆத்மாவை எமதர்மராஜாவின் தலைநகரான எமப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப் படுவார்கள். அப்படி அழைத்து வரப்படுபவர்களுக்கு பசிதீர, பூமியிலிருந்து படைக்கப்படும்  உணவை, இறந்தவர்களின் ஆத்மா உண்கிறது என்றும், தாகம் அடங்க பூமியில் படைக்கப்படும் தண்ணீரே இறந்தவர்க்கு வழங்கப்படுகிறது என்றும்,மேலும், இருட்டான நரகப் பாதையில் நடப்பதற்கு, பூமியில் இருந்தே வெளிச்சம் காட்டப்படுகிறது என்பதாகவும், புராணங்களிலும் படித்துள்ளேன். கட்டுரைகளையும் படித்துள்ளேன். பலர் பேசக் கேட்டும் உள்ளேன். இதுபோன்ற கட்டுரைகளும், கருத்துக்களும், மக்களின் மூடநம்பிக்கையை வளர்க்கத்தான் உதவும். அறியாமையை நீக்க உதவாது.

இறைவனின் திருவடியைப் பற்ற நினைப்பவர்கள், தங்களின் மனதை நிர்வாணமாக வைத்துக்கொள்வது நல்லது. மனம் நிர்மலமாக இருக்க, சுத்தமாக இருக்க ஜோதிடமும், சில விதிகளைத் தந்துள்ளது. அதை இங்கே காண்போம். 
 
1.  இலக்கினத்துக்கு மறைவு ஸ்தானங்களான 6, 8, 12 மிடங்களிலோ, பாக்கிய ஸ்தானமான 9 மிடத்திலோ, சூரியன், சந்திரன் கூடி நின்றாலோ, அல்லது சந்திரன் நின்ற இடத்திலிருந்து மறைவு ஸ்தானங்களில் சூரியன் நின்றாலோ மனநலம் பாதிக்கும்.
2.  பொதுவாக இலக்கினத்துக்கு இரண்டாமிடத்தில் சந்திரன் நின்றாலும், இவரை பாவக்கிரகங்கள் கண்டாலும் மனம் குழம்பும்.
3.  சூரியன் சந்திரனை இராகு காண, தற்கொலை சிந்தனை மேலோங்கும்.
4.  சூரியன், ச்ந்திரனை செவ்வாய் காண, மனநலம் பாதிக்கும்.
5.  சூரியன், சந்திரனை சனி காண, பயத்தாலே மனநலம் பாதிக்கும்.
6.  சூரியன், சந்திரனை, கேது காண, அன்மீக எண்ணத்தாலே மனநலம் பாதிக்கும்.
7.  கேதுவோடு பாவக்கிரகங்கள் கூட, தற்கொலை எண்ணம் இருக்கும்.
8.  இலக்கினத்துக்கு ஐந்து, எட்டாமிடங்களில், ஒருவர் மாறி ஒருவர் அமர்ந்தாலும், செவ்வாய், சனி, இராகு, கேது முதலிய பாவக்கிரகங்கள் கண்டாலும் மனநலம் பாதிக்கும்.
9.  சூரியன், சந்திரன், புதன் இவர்களுடன் மந்தன் என்று அழைக்கப்படும் சனியின் மகனான மாந்தி கூடினாலும், அல்லது தனித்தனியே இவர்களுடன் கூடினாலும் மனநலம் பாதிக்கும்.
10.           பாவக்கிரகங்களுடன் புதன் கூட, மனம் சஞ்சலத்தால் புத்தி தடுமாறும்.
11.           பாவக்கிரகங்களுடன் சூரியன் கூட, ஆத்மாவில் தடுமாற்றம் ஏற்படும்.
12.           பாவக்கிரகங்களுடன் மனதுக்காரகன் சந்திரன் கூட, மன நோயால் பாதிக்கும்.
13.           சந்திரன், புதன் இவர்கள் நின்ற ராசிக்கு முன்னே, பின்னே பாவக்கிரகங்கள் நின்று, இவர்களுக்கு பாவக்கர்த்தாரி யோகம் ஏற்பட்டாலும்,
14.           இலக்கினத்துக்கோ, இராசிக்கோ சனி, செவ்வாய் இராகு  இரண்டு, பனிரெண்டில் நின்றாலும்,
15.           ஒன்று, ஐந்தில் சனி, இராகு நின்றாலும்,
16.           சூரியன், சந்திரன், புதன் மூவரும் இலக்கினத்துக்கு மறையக்கூடாது. மேலும், தங்களுக்குள்ளும் மறையக்கூடாது.
17.           இலக்கினத்துக்கு நான்காமதிபதியுடன் சனி, செவ்வாய், இராகு கூட, மனம் பேதலிக்கும்.
18.           இலக்கினத்துக்கு நான்காமதிபதிபதி மறைவிடங்களில் அமர்ந்திருந்தால், எதிரிகளாலும், நோயாலும், கடனாலும், விரயத்தாலும், உடல் நலம், மனநலம் பாதிக்கும்.
19.           இலக்கினத்துக்கு நான்காமிடத்தில் சனி நிற்க, எந்நேரமும் அவமானங்களாலும், மனக்கவலையுள்ளவனாக இருப்பான்.
20.           இலக்கினத்துக்கு ஏழினில்,
             “வள்ளல் இந்த இரவியைச் சனியும் தான் நோக்க
                  வழுத்திட்டேன் மனைவியால் அவதூறு குற்றம்.
             மெள்ளவே வந்துவிடும் கவலை வாய்க்கும்” 
21ஆறினில் புதன்
             “வித்தகர்க்கு மனக்கவலை உண்டேன் பாரே”
22இலக்கினத்தில் சந்திரன்
              “மனவருத்தன், மனக்கிலேசன்”
23இலக்கினத்தில் சனி
              “மனோவியாதி உடையவன்”
24பத்தினில் சூரியன்
              “எந்தையே ஆயுள் மட்டும் கவலை உள்ளவன்”
25இலக்கினத்தில் சூரியன்
               “விடுவதுமில்லை பயித்திய ரோகி”

இது போன்றக் கிரக அமைப்புகள் எவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்கள் தங்கள் மனதை செம்மைப் படுத்த வேண்டும். அதன்பின் இறைவனை அடையும் வழியினைத் தேடலாம்.

வானமண்டலத்தில் சிதறிக்கிடக்கும் நட்சத்திரக் கூட்டத்தில் ஜோதிடம் தனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட 27 நட்சத்திரக் கூட்டத்தின் 108 பாதங்களில் 20 பாதங்கள் தனிஷ்டாபஞ்சமி எனும் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களுக்குள் உள்ளது. இந்த ஐந்து நட்சத்திரங்களை மட்டும் இறக்கக் கூடாத நட்சத்திரங்கள் எனக் குறிப்பிடப்படுவது ஏன்? என சிந்தித்தப் போது,

காலபுருடனின் முதல்ராசியான மேடம், அவனின் உயிர்ராசியாகும். இதன் அதிபதி செவ்வாய் ஆகும்.
காலபுருடனின் பத்தாம்ராசியான மகரம், அவனின் கர்மராசியாகும். இதன் அதிபதி சனியாகும்.

காலபுருடனின் பதினோராம்ராசியான கும்பம், அவனின் பாதகராசியாகும். இதன் அதிபதி சனியாகும்.

காலபுருடனின் பனிரெண்டாம்ராசியான மீனம், அவனின் மோட்சராசியாகும். இதன் அதிபதி குருவாகும்.

இப்போது காலபுருடனின் உயிர், தர்மதேவன் சனி எனும் கர்மத்தில் துவங்கி, அவன் ஜீவன் மோட்சத்தில் முடிவு பெறுகிறது.

காலபுருடனின் உயிர் செவ்வாய் இராசியில் உள்ளதாக அறிந்தோம். அதேபோல் கர்மஸ்தானத்தில் செவ்வாய் நட்சத்திரம் (அதாவது அவிட்டம்) உள்ளது. இந்த செவ்வாய் கர்மஸ்தானத்தில் தான் உச்சம் அடைகிறது. அதனால் தான் காலபுருடனின் உயிர் கர்மத்தில் உச்சம்பெற்று, 11ம் இடமான லாபஸ்தானத்தில் லாபம் அல்லது பாதகம் அடைந்து, 12ம் இடமான மோட்சத்தில் முடிவு பெறுகிறது. அதனால்தான், காலபுருடனின் உயிர் கர்மத்தில் பதிவாகி, சாதகபாதகங்களை லாபத்தில் ஆய்வு செய்து அடையும் மோட்ச, நரகநிலையை சயனஸ்தானத்தில் நிச்சயிக்கப் படுகிறது. இந்த மூன்று ராசிகளில் தொடர்புடைய நட்சத்திரங்கள் ஐந்தும், அதாவது, அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரையிலான நட்சத்திரங்கள் தனிஷ்டாபஞ்சமியில் இடம்பெற்றுள்ளன.

தனிஷ்டாபஞ்சமிக்கான ஐந்து நட்சத்திரங்களுக்கான விளக்கங்களைக் கண்டோம். இனி மீதமுள்ள எட்டு நட்சத்திரங்களில், “ அழகு ரோகிணி”யைத் தவிர்த்து மீதமுள்ள ஏழு நட்சத்திரங்களுக்கான விளக்கங்களைக் காண்போம்.



             காலற்ற
        நாள்.    சூரியன்                    
           நட்சத்திரங்கள்                                
              உடலற்ற
        நாள்.  செவ்வாய்
          நட்சத்திரங்கள்.
             தலையற்ற
             நாள்.  குரு
           நட்சத்திரங்கள்.
          1. கார்த்திகை
         1. மிருகசீரிடம்
           1. புனர்பூசம்
          2. உத்திரம்
         2. சித்திரை
            2. விசாகம்
          3. உத்திராடம்
         3. அவிட்டம்
            3. பூரட்டாதி
 

இந்த  ஒன்பது நட்சத்திரங்களில் அவிட்டமும், பூரட்டாதியும் தனிஷ்டாபஞ்சமி எனும் ஐந்து நட்சத்திரங்களில் வந்துவிட்டதால், இதைத் தவிர்த்து மீதம் உள்ள கார்த்திகை, உத்திரம், உத்ராடம், மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம் ஆகிய ஏழு நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கும் அதிக தோஷத்தைத் தருகின்றன.

காலற்ற, உடலற்றன தலையற்றன நாளில்
கோலக்குய மடவார்த் தமைக் கூடின் மலடாவார்
மாலுக் கொழு மனை மாளிகை கோலினது பாழாம்
ஞாலத்தவர் வழிபோகினது நலமெய்திடராவமே.
       
 காலற்ற, உடலற்ற, தலையற்ற சூரியன், செவ்வாய், குரு ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில், ஒரு பெண்ணோடு முதன்முதலாக உடலுறவுக் கொண்டால், அச்சாதகர் மலடாவார். இந்த ஒன்பது நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் காலிமனையில் வீடோ, மாளிகையோ கட்ட, பூமி பூஜை செய்து , வேலை தொடங்கினாலோ, தொலைதூரப்பயணம் மேற்கொள்ளவோ கூடாது. பூமி பூஜை செய்தால் கட்டியவீடு பாழாகும். தொலைதூரப் பயணம் மேற்கொண்டால், போனவன், போனவன் தான். திரும்பி வரமாட்டான் என்கிறது பாடல்.
         
அதேபோல், இந்த நட்சத்திரங்களில் இறந்தவர்கள் , “வீடுபேறு” எனும் மோட்சநிலையை அடையாமல், வழிமாறி நரகப் பயணம் மேற்கொண்டு விடுவார்கள். ஒருமனிதனின் பிறப்பிற்கும், வாழ்க்கைக்கும் நட்சத்திரங்கள், கிரகங்கள், ராசிமண்டலங்கள் மூலம் ஒளி காட்டிய நம் முன்னோர்கள் நம் இறப்புக்கும், அதன்பின் நிகழப்போகும் பூடக நிலைக்கும் வழிகாட்டுகின்றனர்.

இப்போது “அழகு ரோகிணி” யை ஏன் இந்த இறக்கக் கூடாத நட்சத்திரங்களில் சேர்த்தார்கள் என்பதைக் காண்போம்.

வானில் உள்ள நவக்கிரகங்களில் சந்திரன் மட்டுமே, சூரியனிடமிருந்து ஒளியை வாங்கி பூமிக்குப் பிரதிபலிக்கும். ஜோதிடம் தேர்ந்தெடுத்துக் கொண்ட 27 நட்சத்திரப் பாதைகளில் தான், ஒவ்வொரு கிரகமும், தங்களுக்குள் நிர்ணயிக்கப் பட்ட கால அளவுகளின் படி சுழன்று கடந்து செல்கின்றன. நாம் வாழும் பூமியின் துணைக்கோள்தான் இந்த சந்திரன். இது பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகமாகும். பூமிக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்டத் தூரம் 3, 64, 400 கிலோமீட்டராகும். ஒரு அமாவாசைக்கும், மறு மறு அமாவாசைக்கும் இடைப்பட்ட நேரம் 709 மணி ஆகும். இதேபோல, மெளர்ணமி காலங்களில் பூமி நோக்கி இருக்கும், சந்திரனின் நிலப்பகுதியின் ஈர்ப்புச் சக்தியோடு, பூமி ஈர்க்கப்படும். அப்போது, ஏற்படும் இழுவைத்திறன் சமன்பாட்டால், பூமியில் இருக்கும் நீர், சந்திர இழுப்பில் இழுபட, பூமியின் ஈர்ப்புவிசையால், கடல் நீரைத் தன்னோடு இழுக்க, இந்த ஈர்ப்புப் போட்டியால் பெளர்ணமி காலத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்படுகிறது.

நம் த்மிழர்கள் நிலவை பலபெயரிட்டு அழைப்பதைப் போல, ரோமானியர்கள், “லூனா” என்றும், கிரேக்கர்கள், “ஆர்ட்டமிஸ்” என்றும் அழைகின்றனர். சந்திரனில் மிக மெலிதான வளிமண்டலம் உள்ளது. இதன் பகல் பொழுதின் வெப்பநிலை 100  டிகிரி செல்சியஸ். இரவுநேர வெப்பநிலை 173 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

கிரகங்களின் வரிசைப்படி  சூரியன், பூமி,  சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி, என்கிற வரிசைப்படி அடுத்தடுத்து கிரகங்கள் நிற்கின்றன. இதில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும், பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் கிரகணம் ஏற்படுகிறது. அதாவது சூரியனின் ஒளி பூமியின் மேல் விழ, பூமியின் நிழல், சந்திரனின் மேல் விழ கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிலை ஏற்பட சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும், ஒரே நேர்கோட்டில் வரவேண்டும். அப்போது தான் முழுச் சந்திரக் கிரகணம் ஏற்படும். இல்லையென்றால், பாதி, அல்லது கால்பங்கு சந்திரக் கிரகணம் ஏற்படும்.

வளர்பிறை நிலவும், தேய்பிறை நிலவும் நிலவின் இயக்கத்தைப் பொறுத்தே நடக்கிறது. இயற்கை விதிப்படி வளர்பிறை நிலவைக் காண, மாலைவேலையில் மேலைவானத்தில் காணலாம். அதே போல் அதிகாலையில் கீழை வானத்தில் தேய்பிறை நிலவைக் காணலாம்.

சூரியனிடமிருந்து சந்திரன் ஒளியைப் பெறுகிறது. அந்த ஒளிக்கதிர்கள் பிறையின் முனைகளைச் சேர்க்கும். அந்த நேர்கோட்டு செங்குத்தாகவே இருக்கும். ஆனால், நாம் நேர் கோட்டை பார்க்கவில்லை. நாம் வளைவு கோட்டையே பார்க்கிறோம்.

காலபுருடனின் நான்காம் ராசியாக கடகம் உள்ளது. இது சந்திரனின் வீடாகும்.இது நீர் ராசியாகவும், சரராசியாகவும் உள்ளது. சரராசிக்குப் பதினோராம் வீடான ரிடபமே, சந்திரனின் உச்ச வீடாகவும் உள்ளது. இந்த வீட்டில் தான் ரோகிணி நட்சத்திரம் உள்ளது. ஆனாலும், சந்திரனுக்கு பாதகத்தைத் தரும் வீடாக ரிடபம் உள்ளதாகவும் கூறலாம். இந்த வீடே சந்திரனுக்கு மூலத்திரிகோண வீடாகவும் உள்ளது. கடகத்தை லக்கினமாகப் பெற்றவர்களுக்கு ரிடப அதிபதியான சுக்கிரன் கடும்பாதகத்தையே செய்வான்.

காலபுருடனின் மாரகத்தைக் கூறுமிடமாக ரிடபம் வருவதாலும், ரிடபத்தில் இருக்கும் கார்த்திகை, மிருகசீரிட நட்சத்திரமும் இறப்பு தோஷ நட்சத்திரமாகவே வருவதால், இவர்களுக்கு இடையில் உள்ள ரோகிணியும் இறப்பு தோஷ நட்சத்திரமாகக் கருதப்படுகிறது.  

என்னதான் விஞ்ஞான விளக்கமும் ஜோதிட விளக்கமும் தந்தாலும், புராண விளக்கங்களுக்கு இணையாக வேறு எந்த விளக்கமும் வராது.

தட்ஜாபிரஜாபதி எனும் மன்னனுக்கு 60 பெண்மகவுகள் இருந்தனர். தந்தையின் அனுமதி பெறாமல் மூத்தவள் தாட்சாயிணி, உலகைப் படைத்தவனான சிவபெருமானை மணந்து கொள்கிறாள். காசியபர் 13 பெண்களை மணந்து கொள்கிறார். ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரப் பெண்களை பேரழகு மிக்க சந்திரன் மணந்து கொள்கிறான்.

இவர்களோடு வாழ்ந்து வரும் சந்திரன், தன் அழகுக்கு இணையான ரோகிணியுடன் அதிகமான நேசபாசத்துடன் மையல் கொண்டு அவளுடன் மட்டுமே கூடி சுகித்து வாழ்ந்து வந்தான். தங்கள் எல்லோரையும் மணந்து எல்லோரிடமும் சரிசமமாக வாழ வேண்டிய, தங்கள் கணவன், ரோகிணியிடம் மட்டும் கூடிவாழ்வதைக் கண்டு மனம்வெதும்பிய மற்ற 26 நட்சத்திரப் பெண்களும் தங்கள் தந்தையான தட்ஜா பிரஜாபதியிடம் முறையிட்டனர். எங்கள் எல்லோருக்கும் கணவனான சந்திரன் எங்களோடு வாழாமல், எங்கள் உடன் பிறந்தவளான ரோகிணியிடம் மட்டும் வாழ்ந்து இன்பம் துய்த்து, எங்களை இன்னும் கன்னியாகவே வைத்துள்ளான். இவனுடன் இங்கு இருப்பதை விட, பிறந்த வீட்டிலே வாழ்ந்து மடிந்து விடுகிறோம் எனக் கூட்டாக்கூறி, கண்கள் கலங்கி அழுவதைக்கண்ட தட்ஜாபிரஜாபதிக்கு கண்கள்  சிவக்க, மீசைத் துடிக்க, சந்திரனை காணப் புறப்பட்டார். சந்திரனின் தவறான வாழ்க்கை முறையினை எடுத்துக் கூறி, தன் மகள்கள் அனைவரிடமும் சமமாக வாழும் படி வேண்டினார்.

அதற்கு சந்திரன் மிக அலட்சியமாக, தன் மாமனார் தட்ஜா பிரஜாபதியிடம், “ என் அழகுக்கு நிகரானவ்ள் ரோகிணி ஒருத்தியே. அதனால் அவளோடு மட்டுமே வாழ்வேன். மற்ற 26 நட்சத்திரப் பெண்களுடன் இணைந்து வாழ என்னால் முடியாது”. என்றான். சந்திரனின் எடுத்தெறிந்து பேசியதைக் கேட்ட தட்ஜா பிரஜாபதிக்கு கோபம் தலைக்கு ஏறியது. உலகைக் காக்கும் சிவப்பெருமானுக்கே சவால் விட்டவராச்சே. உன் அபரிதமான அழகுதானே, தன் மகள்களின் வாழ்வை சீரழித்துவிட்டது. அந்த அழகே இல்லாமல் செய்து விட்டால், சந்திரனின் ஆணவமும் அழியும் என்று நினைத்தவர், “ நிரந்தரமில்லா அழகின் மாயத்தில் சிக்கியுள்ள சந்திரா, உன் அழகு நாள் ஒன்றுக்கு ஒரு கலை வீதம் குறையக் கடவது” என சாபம் தருகிறார்.

அதுவரை எப்போதும் நிறைமதியாக இருந்தவன், இந்த சாபத்தால், ஒரு நாள் கழிந்ததும், ஒரு கலைவீதம் இழக்க, சந்திரனின் தேஜஸ் தேய ஆரம்பித்தது. கொஞ்சம், கொஞ்சம் கருத்து வரும் சந்திரன், தன் அழகையெல்லாம் இழக்கப்போகும் கடைசி நாளில், தன் மூத்த சகலையும், தட்ஜாபிரஜாபதியால் மருமகன் என அங்கிகரிக்கப் படாத, முக்கண்ணனான சிவபெருமானையும், தாட்ஜாயினையையும் சந்தித்தான். அவனின் கருத்த உருவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது வரை நடந்த விபரம் அத்தனையும் ஒன்று விடாமல் சந்திரன் ஒப்புவித்தான்.

அதன்பின் சந்திரன் மேல் இருந்த சாபத்தை நீக்கி, சிவபெருமான் அருள்பாலித்தார். அன்று முதல் நாமொன்றுக்கு ஒரு கலைவீதம் வளர ஆரம்பித்தான். இப்படி தேய்ந்து வரும் காலம், தெய்பிறை காலமாகவும், வளர்ந்து வரும் கால வளர்பிறைக் காலமாகவும் ஆனது.

என்றுமே முழுமதியாக இருந்தவன், ரோகிணியின் மேல் இருந்த தீராத மையலால் தேய்ந்து போகலானான். இப்படி தேய்ந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொருத்  திதியாகவும் கூறப்பட்டது. அதேபோல், வளர்ந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திதியாகவும் கூறப்பட்டது. இதுவே திதிகள் உருவானக் கதையாகும்.

இப்படிதிதிகள் உருவாக ரோகிணி எனும் நட்சத்திரம் காரணமாக இருந்ததால், கிழக்கு திசைகளின் அதிபதிகளான சூரியன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களின் நட்சத்திரங்களோடு சந்திரனின் காரக நட்சத்திரமான ரோகிணியும் இணைந்து, இவைகளில் யார் இறந்தாலும், கடுமையான தோஷம் தரும்.

இப்படி சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கி மீண்டும் சந்திரனுக்கு உயிர் கொடுத்தார் சிவப்பெருமான். அதனால் பிறைச்சந்திரனை தன் தலையில் சூடிக்கொள்கிறார். இதனால் தான் சிவனுக்கு , “சந்திர மெளலீசுவர்” எனும் பெயர் ஏற்படக் காரணமாகியது.

சிவபெருமான் 26 நட்சத்திரப் பெண்களுக்கு வாழ்வளித்ததும், திதிகள் உருவாகக் காரணமாக அமைந்ததும், இரவுகாலத்தில் நிலவற்ற வானத்தைக் காண்பதற்கும், தனக்குக் கிரீடமாக சந்திரனைச் சூடிக் கொள்வதும், அமாவாசை, பெளர்ணமி எனும் அதீத ஈர்ப்புச் சக்தியை வெளிப்படுத்துவதன் மூலம் ப்லகீனமான உயிர்களை கவர்வதன் மூலம் வினைகளைச் செய்கிறான்.

சந்திரனின் மனைவி ரோகிணி, சிவபெருமானின் மனைவி தாட்சாயினிக்கு தங்கையாக இருப்பதால் சிவபெருமானுக்கு கொளுந்தியாளாக ஆகிறாள். அவளுக்கு சிவன் மாமனாகிறார்   அல்லவா?சந்திரனின் சாபத்தை நீக்கி, தன் தலையில் சூடிக்கொண்டதாலும், அதுவரை ரோகிணிக்கு கிடைத்து வந்த முழுமையான இன்பத்தை, கிடைக்கவிடாமல் செய்ததாலும், சிவபெருமான் சந்திரனை எச்சரித்து, மற்ற 26 நட்சத்திரப் பெண்களுடன் வாழவேண்டும் என அறிவுரை வழங்கி, அதன்படி சந்திரனை செயல்பட வைத்ததாலும், தன் சகலையின் சொல்படி, சந்திரனும் மற்ற நட்சத்திரப் பெண்களுடன் வாழ்ந்து வரலானான். தன் மடியே கதியென்று கிடந்த சந்திரன் எல்லா மனைவியரிடமும், ஒருநாள் தங்கிச் செல்வதைப் போல, தன்னிடமும் தங்கிச் செல்வதைக் கண்ட ரோகிணியால், தன் மாமன் சிவபெருமான் மேல் ஆத்திரம் ஏற்பட்டது. தன் கோபத்தால், எந்த விளைவுகளும் ஏற்பட்டுவிடாது என்பதை அறிந்த ரோகிணி, பூமியில் தன் நட்சத்திர சாரத்தில் பிறக்கும், அதாவது ரோகிணியில் பிறக்கும் ஆண்பெண் இருபாலரின் மாமன்மார்களுக்குக் கண்டத்தைத் தந்து விடுகிறது.

ஆய்வு.
முத்துப்பிள்ளை
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு.
ஆத்தூர். 624 701       
        ஆத்துர். வட்டம்.       
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி. 91501 06069. 8754873378

மனிதனின் மரணநாளின் மர்மங்கள்.3. முத்துப்பிள்ளை




        
 இந்த இருபாடல்களையும் தவிர்த்து 108 ம்  நம்பர் திருக்கோவில் அனுஷ்டான வாக்கிய பஞ்சாங்கத்தில் தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்கள், ஒவ்வொன்றிற்கும் உள்ள நட்சத்திரக் கால அளவை நான்கு சமபங்காக்கி, அதில்  முதல் பாகத்தில் மரணம் ஏற்படில் 10 மாதமும், இரண்டாம் பாகத்தில் மரணம் ஏற்படில் ஆறுமாதமும், மூன்றாம் பாகத்தில் மரணம் ஏற்படில் ஐந்து மாதமும், நான்காம் பாகத்திலும், திரிபாத நட்சத்திரங்களிலும் மரணம் ஏற்படிலும் மூன்று மாதம் வரையிலும் வீட்டைஅடைத்து  விளக்கேற்றி வழிபட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிஷ்டா பஞ்சமி எனும் தோஷ நட்சத்திரங்களில் இறந்தவர்கள் நரகத்திற்குத்தான் செல்வார்களா? அவர்களின் ஆத்மாவின் நிலை என்ன? குறிப்பிட்டக் காலங்களில் உறவினர்கள் விளக்கேற்றி வழிபட்டால் சொர்க்கம் செல்வார்களா? ஆத்மாவைப் பற்றி ஞானியர்களின் கருத்தென்ன? குறிப்பிட்ட இந்த நட்சத்திரங்கள் மட்டும், யாரும் இறக்கக் கூடாத நட்சத்திரமாக ஏன் சொல்லப்பட்டுள்ளன? விரிவாகக் காண்போம்.

தனிஷ்டாபஞ்சமி என்னும் இறக்கக் கூடாத நட்சத்திரங்களும், திரிபாத (மூன்று பாதங்கள்), அர்த்த (இருபாதம்), ரோகிணி உள்ளிட்ட 13 நட்சத்திரங்களில் ஒருவர் இறந்தால், அவர் ஆத்மா சொர்க்கம் செல்வதில் தடையேதும் ஏற்படுமா? அல்லது நரகம்தான் கிட்டுமா? இது போன்ற மரணத்திற்குப் பிறகு நிகழப்போகும் சூட்சுமமான கேள்விகளுக்கு யூகமானப் பதில்களைத் தான் தரமுடியும்.

ஒருவன் வாழும் காலங்களில் மறுமை எனும் சொர்க்கக் கனவு காணவேண்டும்.சொர்க்கத்தை அடையவேண்டும் என்கிற ஆழ்மனப் பதிவே, அவனை நெறிமுறைத் தவறாத வாழ்க்கையை வாழவைக்கும். எவனொருவன் அமைதியும், மனத்தாழ்ச்சியுடன் வாழ்கிறானோ, அவனால், “இறை” எனும் பேரொளியில் எளிதாய் கலக்கமுடியும். இதையெல்லாம் விட்டுவிட்டு வாழும்போது மனம் போனப் போக்கில் வாழ்ந்துவிட்டு, சாகும்போது தனிஷ்டாபஞ்சமி எனும், அவிட்டத்தில் சாகப்போகிறோமோ, நரகத்தில் தள்ளப்ப்டடு விடுவோமோ என ஆத்மாவுக்காக அழுது புலம்பக் கூடாது.

வாழும்போது நீதி நெறி தவறாமல் வாழ்ந்தவன், தனிஷ்டாபஞ்சமி எனும் இறக்கக் கூடாத நட்சத்திரத்தில் இறந்தாலும், அவன் சொர்க்கத்திற்கே செல்லுவான்.

இந்த பூவுலகில் ஓர் ஆத்மா ஏழு பிறவிகள் எடுப்பதாகவும், இந்த ஏழுபிறவிகளுக்கும் 360 வருடங்களை ஆயுட்காலமாக ஆண்டவன் தந்துள்ள்ளாரெனவும், நம் பெரியவர்களால் கூறப் படுகிறது. இந்தக் கூற்றே உண்மையானதாகவே இருந்தாலும், நம் மொத்த ஆயுட்காலமான 360 வருடங்கள், நம் ஆத்மா ஈடேற்றத்துக்கான கால அளவுகள் ஆகும். இதில் நம் கர்மவினைகளை எல்லாம் அழித்து, இழந்த உறவுகளை எல்லாம் ஒன்றாக்கி வாழ்ந்து விடுவோமேயானால், நம் ஆத்மா, “ இறை” எனும் “நிறை” யில் இணைந்துவிடும்.

ஆயிரம் பேர் ஓடிவரும் மராத்தான் ஓட்டப்பாந்தயத்தில், கடைசியில் ஓடிவரும் ஒருவன் எல்லோரையும் பின்தள்ளிவிட்டு முதல் ஆளாக வருவதைப்போல, ஏதோவொரு சில ஆத்மாக்கள் தான் கர்மவினைகளை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, முதல் ஆளாய் இறைவனின் பேரொளியில் கலக்கின்றன.

வாதுக்குச் சண்டைக்குப் போவார்; வருவார்; வழக்குரைப்பர்;
தீதுக்கு உதவியும் செய்திடுவார்; தினம் தேடி ஒன்று
மாதுக்கு அளித்து மயங்கிடுவார்; விதி மாறும் மட்டும்
ஏதுக்கு இவர் பிறந்தார் இறைவா கச்சி ஏகம்பனே.
       
ஓயாமல் பொய் சொல்வார்; நல்லோரை நிந்திப்பர்; உற்றுப்பெற்ற
தாயாரை வைவர்; சதி ஆயிரம் செய்வர்; சாத்திரங்கள்
ஆயார்; பிறர்க்கு உபகாரம் செய்யார்; தமை அண்டினோர் கொள்
றீ(ஈ)யார்; இருந்தென்ன? போயென்ன? காண் கச்சி ஏகம்பனே.

கல்லார் சிவகதை; நல்லோர் தமக்குக் கனவிலும் மெய்
சொல்லார்; பசித்தவர்க்கு அன்னம் கொடார்; குரு சொன்னபடி
நில்லார்; அறத்தை நினையார்; நின் நாமம் நினைவில் சற்றும்
இல்லார்; இருந்தென்ன? இறந்தென் புகழ் கச்சி ஏகம்பனே.

என்று மனித உருத்தாங்கிய, மிருக ஜென்மங்களைப் பற்றி திருவெண்காட்டுச் சித்தர்கூறுகிறார்.
       
 இதுபோன்ற வாழ்க்கை முறைகளை பின்பற்றியவர்களால், எந்த நட்சத்திரத்தில் இறந்தாலும், அவர்கள் நரகத்திற்குத்தான் செல்வார்கள்.
        
 தன் இயல்பான நிலையில் ஆத்மா முழுமையடைவது தான் மோட்ச நிலை.
        முழுமையடையாத இன்பநுகர்ச்சியை ஆத்மாவுக்குள் அடக்க நினைப்பது, நரகநிலைதான்.
        
        பிறவி அற்றுப்போவதுதான் மோட்ச நிலை.

மூத்திரக்குழிக்கும் மலக்குழிக்கும் அருகே உள்ள கருக் குழியில், ஆத்மா அடைபடுவது தான் நரகநிலை.

“பிறவாமை வேண்டும். பிறப்புண்டேல், உன்னை என்றும் மறவாமை வரம் வேண்டும்” என்றார் மாணிக்கவாசகப் பெருமான்.

“ஒரு பேரீச்சம் பழத்துண்டைக் கொண்டேனும், உங்களை நரக நெருப்பில் இருந்தேனும், காத்துக்கொள்ளுங்கள்” என்றார் (ஸல்) நபிகள் நாயகம்.

“நல்ல கனி தராத மரம் எல்லாம், வெட்டுண்டு நெருப்பில் எறியப்படும்.” என்றார் ஏசு மகான். நல்ல கனி என்பது ஆத்மாவையும், நெருப்பு என்பது நரகத்தையும் குறிக்கும்.

நமக்கு ஞான வழிகளைத் திறந்து விட்ட ஞானவான்களை எல்லாம் புறக்கணித்து விட்டோம். சொர்க்கவாசல்களில் நுழையவிடாமல், நம் ஆத்மாவுக்கு நாமே கர்மவினைகளால் அடைப்பை ஏற்படுத்திவிட்டோம்.

நம் ஆடம்பரச் செலவுக்காகவும், பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும், மருத்துவச் செலவுக்காகவும், குடும்பத் தேவைகளுக்காகவும் நாம் கடன்பெறலாம். அவ்வாறு வாங்கியக் கடனை அடைக்கமுடியவில்லை என்றால், நம் சந்ததிகள் எப்பாடுபட்டேனும், அந்தக் கடனைக் கட்டியே தீருவார்கள். ஆனால், நாம் பட்டிருப்பதோ, “ஆத்மாக்கடன்” இதை நம் சந்ததிகளால் அடைக்கமுடியுமா?

என் தகப்பனின் ஆத்மக்கடனை திதி கொடுப்பதால் தீர்ந்து விடுமா? தீர்ந்து விடும் என்றால், என் முன்னோர்களின் ஆத்மக் கடனுக்காகத் தினம்தோறும் திதிகளாகத் தந்துகொண்டே இருக்கவேண்டும் அல்லவா? அப்படியானால் என் அன்றாடக் கடமைகளை நிறைவேற்றுவது எப்போது?

என் ஆத்மக்கடன் இன்னொருவர் திதி கொடுப்பதால், தீர்ந்து விடும் என்றால், நான் ஏன் என் ஆத்மாவுக்காக வாழவேண்டும்.
       
எழும்பாமல் வாசனையைக்
கொன்றோன் ஞானி:
ஏகாமல் வாசனையை
அடித்தோன் சித்தன்

கர்மவினைகளைக் கொல்பவன் ஞானி. கர்மவினைகளை நெருங்கவிடாமல் அடிப்பவன் சித்தன் என அழகாகச் சொல்கிறார் சட்டை முனி சித்தர்.

“ஏகாமல் வாசனையை ஒதுக்கியோன் மனிதன்” என நாம் கர்மவினைகளில் இருந்து ஒதுங்குவோம். எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும், ஆத்மாவின் வழியில் கர்மவினைகளை வென்றிடலாம்.

தனிஷ்டாபஞ்சமி எனும் அவிட்ட அடைப்பில் இறந்தவரின் பூத உடலை, வீட்டின் பிரதான வாசல் வழியாக எடுத்து வராமல், உடல் அருகே தென்னங்கீற்றால் வேயப்பட்ட படல் கட்டி, அந்த படலில் ஒரு ஆள் நுழைந்து வெளியேறும் அளவுக்குக் கிழித்து எடுத்துவிட்டு, அந்த ஓட்டைக்குள் பிணத்தை, அந்த பக்கத்தில் இருந்து, இந்தப் பக்கமாக உருவி எடுத்துக் கொள்வார்கள். அதன்பின் புதைக்கவோ, எரிக்கவோ எடுத்துச் செல்வார்கள்.

நடுத்தர மக்களின் வீடு கட்டும் பாணி 1சென்ட் இடத்திலிருந்து 3 சென்ட் இடத்துக்குள் முடிந்து விடுகிறது. நகர மக்கள் வாடகை வீட்டிலும், வாடகை வீட்டில் வசிக்க இயலாதவர்கள் தெருவோரங்களிலும் குடியிருக்கின்றனர். அதனால்தான் கொல்லைப்புறச் சுவர் இடிக்கும் பரிகாரத்தை கைவிட்டுவிட்டு பிணத்தருகே ஓலைத்தட்டியை வைத்து அதன் வழியே பிணத்தை வெளியே உருவி எடுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்பது புலனாகும்.

ஒரு சமுதாயத்தினர் இறக்கக்கூடாத நாளில் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் செங்கல்லால் கூம்பு வடிவம் வருவது போல நிறுத்தி, அதற்குள் நட்சத்திரங்களுக்குக் குறித்துள்ள கால அளவுப்படி, அத்தனை நாட்களும் அந்திசாய்ந்த வேளையில் எண்ணெய் விளக்கேற்றி பத்திசூடம் காட்டி, இறந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக இறைவனை வேண்டிவருவர்.

ஒரு முன்னேறிய சமுதாயத்தினர் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி எனும் ஐந்து நட்சத்திரங்களில் எதில் இறந்தாலும், அந்த வீட்டை 40 நாட்களுக்கு அடைத்து வைத்து விட்டு, வேறு வீட்டில் வசிக்கிவ்றனர். இந்த 40 நாட்களிலும் வீட்டைத் திறந்து விளக்கேற்றி வழிபடுவதில்லை. அதன்பின், மறுநாள் கணபதி ஹோமம், புண்ணியத்தானம் செய்த பின் வீட்டிற்குள் குடி போகின்றன.

வீட்டை அடைத்துவிட்டு வேறுவீட்டில் வசிக்க இயலாதவர்கள், சடலம் இருந்த அறையை மட்டும் 40 நாட்கள் பூட்டி வைக்கின்றனர். 41 ம் நாளில் கணபதிஹோமம், புண்ணியத்தானம் செய்த பின் அந்த அறையையும் பயன்படுத்துகின்றனர்.

இவர்களில் இன்னும் சிலர், இந்த ஐந்து நட்சத்திரங்களில் இறந்தால், இறந்தவரின் உடலை ஓலைப்பாயில் வைத்து, முழு உடலும் வெளியே தெரியாமல் மூடி எடுத்துச் செல்வார்கள். இந்த விதமான பரிகாரங்களுக்கு வீடு அடைக்கவேண்டிய அவசியம் இல்லையாம்.

அவிட்ட அடைப்பில் இறந்தவரின் உடல் இருந்த இடத்தில் நட்சத்திரங்களுக்கு குறித்துள்ள பரிகார நாட்களின் படி, விளக்கேற்றி பத்தி, சூடம் காட்டி, நிறை சொம்பில் நீர்வைத்து, அன்னப்படையலிட்டு இறந்தவரின் ஆத்மா மோட்சநிலை அடைய குடும்பத்தினர் இறைவனை வேண்டுகின்றனர். அதன்பின் அந்த அறையை பூட்டிவிடுகின்றனர்.

இறந்தவரின் உடல் இருந்த இடத்தில், சிறு மேடை அமைத்து, பூசி மெழுகி கோலமிட்டு, அன்றாடம் விளக்கேற்றி, அவரின் ஆன்மா மோட்ச நிலையை அடைய, இறைவனை வேண்டுகின்றனர். அதன் பின் விளக்கு அணையாமல் இருக்க, கூடையை கவிழ்த்து மூடிவைத்து, அதன் அறையை அடைத்து விடுகின்றனர்.

  மனைவி மக்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருமோ, அல்லது மனைவி மக்களோ சூழ்ந்திருக்கவோ இறக்கப் போவரின் தேகத்தை விட்டு ஆத்மா பிரியவேண்டும். எல்லா உறவுகளும் இருந்தும், இறக்கும்போது எந்த உறவுகளும் சூழ்ந்திருக்காமல் ஒருவர் மாள்வது, அந்த ஆத்மாவை அனாதரவாய் விடுவதற்குச் சமம். எல்லா உறவுகளும் சூழ்ந்திருக்க ஒருவர் மாண்டால், அவர் அடைப்பில் இறந்தாலும், அவிட்டத்தில் இறந்ததாகக் கூறமுடியாது. ஆதலால், ஒருவரின் உயிர்பிரியும் போது, அவரின் உறவுகள் சூழ்ந்திருக்க முடியவில்லையெனில், கணவனோ, மனைவியோ, மக்களோ உடன் இருப்பது, அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு, அவரின் ஆத்மாவுக்குச் செய்யும் ஈடேற்றமாகும். அந்த ஆத்மாவுக்கு நிம்மதியைத் தரும்.

கிடத்தி வைக்கப் பட்டிருக்கும் உடல் அருகில், கணவனோ, மனைவியோ, மக்களோ அமர்ந்திருப்பதும், கண்ணீர் சிந்துவதும், உடலின் மேல் விழுந்து புரண்டு அழுது அரற்றுவதும், கணவனின் காலைக் கட்டிப் பிடித்து மனைவி அழுவதும், ஆத்மாவின் விடுதலைக்கான இராகங்கள் தான். ஒருவனால் குடும்பம் எவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை, அவனின் குடும்பத்தினரின் சோகத்தால் அறிந்துவிடலாம். ஒருவன் வாழும் போது கூடிய கூட்டத்தைவிட, அவனின் இறுதி ஊர்வலத்தில் கூடும் கூட்டமே, அவன் வாழ்ந்த விதத்தைக் காட்டிவிடும்.

 இறந்த ஒருவரின் வாழ்க்கையை விமர்சிப்பதை தமிழ் சமூகம் அநாகரீகம் என்கிறது. அவன்தான் இறந்துவிட்டானே. அப்படி இருக்கும்போது அவன் செய்த செயல்களைத் தானே விமர்சிக்கிறோம். அதில் என்னத் தவறு இருக்கிறது எனலாம். அந்த விமர்சனம் கூட ஒரு கர்மா தான். ஒரு ஆத்மாவைப் பற்றி கூடுதல் குறைச்சலாக பேசிக்கொள்ள, இறைவனால் படைக்கப் பட்ட மற்றொரு ஆத்மாவுக்கு, உரிமை கொடுத்தது யார்? என்கிற கேள்வி எழும். அப்படியானால், இறந்தபின்தான் பேசக்கூடாது என்றால், ஒருவர் உயிருடன் இருக்கும்போது பேசலாமா? பேசக்கூடாது. அதுவும் கர்மாதான். இப்படி ஒவ்வொரு செயலாகப் பார்த்துக்கொண்டே சென்றால், நல்வினை எது, தீவினை எது என்கிற, பாவப் புண்ணியங்கள் அற்பப்புத்திக்குப் புலப் பட்டுவிடும். இதைத்தான், மாபெரும் ஞானியான இயேசுபகவான் கூறுகிறார்.

“உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள். உங்களை வெறுப்போர்க்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள். உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக, இறைவனிடம் வேண்டுங்கள். உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு, மறு கன்னத்தையும் காட்டுங்கள்.”. லூக்.6:27.  என்றார். நம் மீது பிறர் தொடுக்கும் கர்மாவெனும் வினைக்கு, எதிர்வினை செய்யாமல் ஏற்றுக்கொள்வதும், தீவினைகளுக்கு எதிராக, தீவினைசெய்யாமல், நல்வினை செய்வதும், “ஏகாமல் வாசனையை ஒதுக்கியோன் மனிதன்”    எனும் நிலையை அடையலாம்.

தனிஷ்டாபஞ்சமியில் இறந்தவர்க்கு,விளக்கேற்றி, நிறை சொம்பில் நீர்வைத்து, தீபாரதனை காட்டுவது, வீட்டை அடைப்பதும், பின்பக்கச் சுவற்றை உடைத்து, சடலத்தை வெளியே உருவதும், கர்மவினைகளைத் தீர்த்துவிடாது. சிந்தித்துப் பார்த்தால் அது ஓர் சம்பிரதாய நடைமுறைகள் என்பது புலனாகும்.

சொர்க்கத்தைச் சென்று சேரும் வழியாக, சடங்குகளும், சம்பிரதாயங்களும், கலாச்சார நிகழ்வுகளும் அமைந்து விடாது. மாறாக,

நல்லொழுக்கமும், மன ஒருமைப்பாடும் நன்னெறி வாழ்வும், உள்ளத்தூய்மையும், தீர்க்கச் சிந்தனையும் அமையப் பெற்றவர்கள், வாழும் போதே மோட்சநிலையை அடைவார்கள். முக்தியும் பெறமுடியும்.

ஒரு மனிதன் கெட்டவனாய் வாழ்ந்து முடித்து விட்டு, சாகும் போது, தனிஷ்டாபஞ்சமியில் இறந்தால், அவன் நரகலோகம் செல்வான் என்பதில்லை. கெட்ட மனிதனாய் வாழ்ந்து முடித்த எவனும், எமலோகம்தான் செல்வான். அவனுக்காக நரகவாசல் திறந்தே இருக்கும்.

இதைத்தான் பைபிள், “சொர்க்கத்தின் வாசல் குறுகி இருக்கும். நரகவாசல் அகண்டிருக்கும்”. என்கிறது. பெரும்பாலானோர் பரிகாரங்களைச் செய்தாவது, இறந்தவரின் ஆத்மா ஈடேற்றம் அடைந்து விட வேண்டும் என இறைவனை வேண்டி வருகின்றனர். இதுநம்பிக்கை சார்ந்த விடயம். எதையும் பெரிதாக எதிர்பார்க்கும் மனிதனின் மனோபாவம் தான் காரணம். நம் வேண்டுதல் அனைத்தையும் இறைவன் ஏற்றுக் கொள்வான் என்கிற மனநிலையும் நம்மிடம் இருக்கிறது. ஆனால், இறந்தோரின் ஆத்மா ஈடேற்றம் அடைய என்ன தகுதியும், வலிவும் இருக்கிறது.

மோட்ச நிலையை அடைய, இந்த ஆத்மா உலகிற்கு என்ன செய்தது? இறைவன் விரும்பியபடி வாழ்ந்ததா? ஏழு மாயைகளில் எந்த மாயையை வென்றது. “நான்” என்கிற ஆணவ மமதையை வேரறுத்ததா? அல்லது அலைந்து திரியும் மனதைத் தான் அடக்கியதா? இந்த பாவாத்மாவுக்கு மோட்ச நிலை எப்படிக் கிட்டும்.

“மோட்சம் என்பது சுவர் ஏறிக் குதித்து உள்ளே வர, எவன் வீட்டுக் கொல்லைப் புறமோ அல்ல. அது இறைவனின் கால்மனை” மோட்சத்தை ஆடைவதற்கு ஆத்மா வலிவுடையதாக இருக்கவேண்டும். மனோலயமும், வினைதீரவும் வேண்டும். அப்போதுதான் ஜீவன் முக்தி பெறும்.

ஆய்வு.
முத்துப்பிள்ளை
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு.
ஆத்தூர். 624 701       
        ஆத்துர். வட்டம்.       
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி. 91501 06069. 8754873378