Thursday 13 August 2015

ஒளியும் இருளும்….


                                                                                   (1)
     உங்களுக்கு ஒளி தர வேண்டியது இருளாயிருந்தால், இருள் எப்படியிருக்கும்.      விவிலியம்.   மத்தேயு. அதி: 6; 23 வசனம்.
கிரகங்களின் முதலாமவன். உன்னத தலைவன். அவன் மட்டுமே நிலையானவன். பேரொளியை அண்டத்தில் வீசுபவன். உலகிற்கு ஜீவ ஒளியை த் தருபவன்.
எல்லாக் கோள்களும் மலட்டுக்கிரகங்களாய் இருக்கும்போது, நாம் வாழும் பூமியை மட்டும்
பூத்துக்குலுங்க வைத்தவன் .எல்லாக்கிரகங்களையும் தன்னையே சுற்றிவரச்செய்து, கிரகப் பரிபாலனம் செய்பவன். நாம் வாழும் உலகின் உயிர்கள் வாழ்வதற்கான உகந்த வெப்பத்தைத் தருபவன்.
ஒரே உயிரிலிருந்து, பல்லுயிரிவரைக்கும், பல்கிப் பெருகக் காரணமானவன். உலகைக் காப்பதால், இவனே தகப்பன். இவனே ஜீவராசிகளின் ஆத்மா. இவனே முழுமுதலானவன். தன்னையே சுற்றி வரும் கோள்களை வழிநடத்திச் செல்லும், மாபெரும் தலைவன். ஆம்.அவன் தான் சூரியன்.
இச்சூரியனின் மேற்புற வெப்பநிலை 10,000 டிகிரி பாரன்ஹீட். மைய வெப்பநிலை சுமார், இரண்டு கோடியே ஐந்து இலட்சம் பாரன்ஹீட் ஆகும். சூரியனின் குறுக்களவு பதின்மூன்று இலட்சத்து எண்பத்தி இரண்டாயிரத்து நானூறு கிலோமீட்டராகும். சூரியனின் மொத்தப்பரப்பளவை விரித்து வைத்து, அதில் பதிமூன்று இலட்சம் பூமிகளைப் புதைத்து வைத்து விடலாம். அப்படியென்றால், சூரியனின் பரப்பளவு எப்படியிருக்குமென, “சின்னதாய் கற்பனை கொள்ளுங்கள். நம் பூமியிலிருந்து, சூரியன், பதினைந்து கோடி கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
சூரியன் வாயுக்கோளமாகும். இச்சூரியனுக்குள் 71% ஹைட்ரஜன் உள்ளது. ஹீலீயம் 26 ½ % உள்ளது. ஹைட்ரஜனின் அழுத்தத்தால், ஹீலியமாக வெடித்துச் சிதறுகிறது. இது சுழற்சி முறையாகும். அதனால், சூரியனின் வெப்பநிலை , ஒரே நிலையில் சீராக உள்ளது.
சூரியனுக்கு அருகிலுள்ள கிரகங்களான, புதனும், சுக்கிரனும், மற்றும் நிலவும், வறண்டகிரகங்களாய் இருக்கும் போது, பூமி மட்டும், உயிர் துடிப்பு மிகுந்த கிரகமாய் எப்படி இருக்கிறது,, இதற்கு பூமியிலுள்ள காந்தபுலன்கள் தான் காரணம். சூரியனிடமிருந்து வெளிப்படும், “அல்ட்ரா வயலட்” கதிர்வீச்சுக்களைத் தடுத்து, மீண்டும் சூரியனுக்கே திருப்பி, அனுப்பி விடுகிறது. அதனால் தான், சூரியனின் மொத்தக் கதிர் வீச்சுக்களிலிருந்து, பூமிதன்னைத் தானே காத்துக்கொண்டு, உயிரினங்கள், உயிர் வாழத்தகுந்த வெப்பத்தை மட்டும், வளிமண்டலத்துக்குள் நுழைய அனுமதிக்கிறது.
இதுவரை ஒளியைக்கண்டோம்: இனி, இருளைக் காண்போம்.




சனி. இந்த பெயரைக்கேட்டதும் சும்மா அதிருதில்ல. ஆம். எல்லோரையும் நடுங்கவைக்கும் தர்ம தேவன்.
சூரியமண்டலக் கிரகங்களில் மூன்றாவது மிகப்பெரிய கிரகம். இச்சனிகிரகத்தின் குறுக்களவு எழுபத்தி ஐந்தாயிரத்து நூறு மைல் தூரமாகும். சூரியனிடமிருந்து எண்பத்தெட்டுக் கோடியே அறுபது இலட்சம் மைல் தூரத்தில் உள்ளது. சூரியனிடமிருந்து மிகவும் விலகி, தொலைவிலுள்ள கிரகமாகும். இது தன்னை தானே சுற்றிக்கொள்ள, பத்து மணிநேரத்தை எடுத்துக்கொள்ளும். ஆனால், சூரியனைச் சுற்றிவர இருபத்தி ஒன்பதரை ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறது. இக்கிரகத்தில் அம்மோனியா, மீத்தேன், ஹைட்ரஜன் வாயுக்கள் அடங்கியுள்ளன. இது இருநூற்றி நாற்பத்து மூன்று டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தைக் கொண்ட ஓர் வாயுக்கிரகமாகும்.
இக்கிரகத்தில் தூசிகளால் ஆன மூன்று வளையங்கள் உள்ளன. இதற்கு சனி வளையம் என்றுபெயர். இவ்வளையம் அறுபத்தி நான்காயிரம் கிலோ மீட்டர் அகலமும், பதினாறு கிலோமீட்டர் ஆழமும் கொண்டதாகும். இதுபோன்ற வளையங்கள் சனிக்கிரகத்தைத் தவிர வேறெந்த கிரகத்துக்கும் கிடையாது. இதுவே, சனிக்கிரகத்தின் சிறப்பம்சமாகும். இந்த வளையங்கள் பாதுகாப்புக் கவசம் போல் உள்ளன. இந்த பாதுகாப்பு அரண்களையெல்லாம், தவிர்த்து விட்டு மனிதன், சனியின் மேற்பரப்பில் இறங்கி, ஆய்வுகளை முடித்துவிட்டு, விண்கலத்தில் கிளம்பும்போது, வினாடிக்கு முப்பத்தியேழு கிலோமீட்டர் வேகத்தில் கிளம்பினால் தான், சனியின் ஈர்ப்பு விசையைவிட்டு விடுபட்டு பறக்க இயலும்.
சனியின் ஒன்பது துணைக்கோள்களில், எட்டுத்துணைக்கோள்கள் கடிகாரமுள், எதிர்முறையில் சுற்றிவருவது போல், சுற்றி வருகின்றது..ஒரேவொரு கிரகம் மட்டும் தான், கடிகாரமுள் சுற்றிவருவது போல், சுற்றிவருகிறது. அக் கிரகம் மாந்தியென்று அழைக்கப்படும் குளிகனாகவும் இருக்கலாம்.
சூரியமண்டலக் கடைக்கோடிக் கிரகமாக சனியிருப்பதால், சூரியனின் பிரமாண்ட வெப்ப அலை, இக்கிரகத்தைத் தொடுவதே இல்லை. சூரியனின், “ அல்ட்ரா வயலட்”  கதிர்வீச்சு நெருங்கமுடியாத, தொலைவில் சனியிருப்பதால், இருள் படிந்த கிரகமாகவே இருக்கிறது.
1.  சூரியன் ஒளியென்றால், சனி இருளாவான்.
2.  சூரியன் ஆத்மாவென்றால், சனி கர்மாவாவான்
3.  இவன் ஆண் வடிவமென்றால், அவன் அலி வடிவம்.
4.  இவன் குணம் சத்துவனென்றால், அவன் தாமசம்.
5.  இவன் தாமிரமென்றால், அவன் இரும்பு
6.  இவன் செந்தாமரையென்றால், அவன் கருங்குவளை.
7.  இவன் மாணிக்கமென்றால், அவன் நீலம்.
8.  இவன் சிவப்புயென்றால், அவன் கருப்பு.
9.  இவன் பெண் ஆடு என்றால், அவன் ஆண் ஆடு.
10.      இவன் வாகனம் மயிலென்றால், அவன் வாகனம் காகம்.
11.      இவன் தெய்வம் சிவமென்றால், அவன் தெய்வம் முனி.
12.      இவன் சத்திரியனென்றால், அவன் சூத்திரன்.
13.      இவன் திசை கிழக்கென்றால்; அவன் மேற்கு.
14.      இவன் நெருப்பென்றால், அவன்  காற்று.
15.      இவன் யானையென்றால், அவன் எருமை.
16.      இவன் அரசனென்றால், அவன் அடிமை.
17.      இவன் எலும்பென்றால்,அவன் நரம்பு.
18.      இவன் அரண்மனையென்றால், அவன் சேமிப்புக்கிடங்கு.
19.      இவன் வெயிலென்றால், அவன் குளிர்.
20.      இவன் சிவலோகமென்றால், அவன் எமலோகம்.
21.      இவன் ஆத்திகத் தலைவனென்றால், அவன் நாத்திகத் தலைவன்.
22.      இவன் மேஷத்தில் உச்சனென்றால், அவன் மேஷத்தில் நீச்சம்.
23.      இவன் துலாமில் நீச்சமென்றால், அவன் துலாமி உச்சம்.
24.      இவன் தந்தையென்றால், அவன் மகன்
இவ்விரு கிரகங்களின் காரகங்களும், ஒன்றுக்கொன்று எதிரெதிரானவைகளே. எப்போதும் சூரியன் கிழக்கென்றால், சனி மேற்காகவே இருப்பார். அதனால் தான், இவ்விரு கிரகங்களும், எதிரெதிராக பகைவர்களைப்போல் முறுக்கிக் கொண்டு நிற்கின்றன. எவருடைய ஜாதகத்திலாவது, இவர்கள் இருவரும், ஒரு ராசியில் கூடியிருந்தாலும், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலும், ஜாதகரின் வாழ்வில் எதிர்பாராத வீழ்ச்சியும், நிலையற்ற  வாழ்க்கையையும், திடீர் திருப்பங்களையும் ஏற்படுத்துகின்றன.  காரணம்,
இவ்விருவரும் கூடி, ஒரே ராசியில் நிற்கும் போது,” ஒளியும், இருளும் “ ஒன்றையொன்றை விரட்டியடிக்க முயல்கிறது. உலக வழக்கப்படி, இருளை, ஒளிவிரட்டிவிடும். ஆனால், ஜோதிட ரீதியாக, அது நடவாது. இருளின் தாக்கம், ஒளியின் மேல் விழத்தான் செய்யும்.
அடிப்படையிலான விடயங்களில் வேறுபட்டு நிற்கும், இரண்டு எதிர்மறையான கிரகங்களான, சூரியனும், சனியும்,  ஒரு ராசியில் கூடும் போது, நன்மையான பலன்கள் நடைபெறாது.
சூரியன் கொடுத்துவரும் பலன்களை, சனியால் கெடுக்கமுடியும். ஆனால். சனி கொடுக்கத் துவங்கும் பலன்களை சூரியனால் மட்டுமல்ல, வேறெந்தக் கிரகத்தாலும் தடுக்க முடியாது. காரணம்,,
ஒரு மனிதன் தன் கர்மவினைகளை அனுபவிக்கத்தான் புவியில் பிறக்கிறான். மனிதன் அனுபவிக்கும் ஒவ்வொரு கர்மவினைகளும் சனியால் தான் தரப்படுகிறது. சனி தரும் கர்மப் பலன்கள் அனைத்துமே, நம் முன்வினையே
                                                  3.
அதாவது, நம் முன் ஜென்மத்தில் செய்த பாவப்புண்ணியங்களின் படியே, இப்பிறவியில் நன்மை, தீமைகளை அனுபவிக்க பிறந்துள்ளோம். அதனால் தான், சனியை தர்ம தேவனென்று அழைக்கிறோம்.  நம் கர்ம பலன்களில் பாவக்கர்மங்களைக் குறைத்து, புண்ணியக் கர்மங்களை கூட்டுவதே, இப்பிறப்பின் நோக்கமாகும். அப்படிப்பட்ட தர்மதேவனால் தரப்படும் பலனை, கர்மக் கூட்டுக்குள் சிக்கிய ஆத்மா, அனுபவித்துத்தான் தீர வேண்டும். அதனால்தான், “சனி கொடுக்க எவர் தடுப்பர்”  என்று, முன்னரே   வகுக்கப்பட்ட விதியாகும்.
ஒரு வீடு. அதில் இருவர் தங்கியுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு விடயத்திலும் முரண்பட்டு ஒருவரையொருவர் வெற்றிகொள்ளவேண்டுமென, கடுமையாகப் போராடக்கூடியவர்கள். அப்படி சண்டையிட்டுக்கொண்டிருக்கும் இருவரிடம், சுமூக உறவு எப்படியிருக்கும். இவர்கள் எந்த வீட்டில் தங்கியுள்ளார்களோ, அந்த வீட்டின் உரிமையாளர், இவர்களுக்கு என்ன உறவோ, அதைப் பொறுத்தே தான், இவர்களின் வெற்றி, தோல்வி அமையும். அதே போல், சூரியனுக்கும், சனிக்குமிடையில், இவர்களுக்கு வீடு கொடுத்த கிரகத்தின் நிலையையும், இவர்களுக்கு சாரம் கொடுத்த கிரகத்தின் நிலையையும் ஆய்வு செய்ய வேண்டும்.
சூரியனும், சனியும் முரண்படும் போது, அவர்களின் சுயத்தன்மை கெட்டுவிடும். இவ்விருவரின் காரகப்பலன்களையும், இவர்கள் இருந்த வீட்டின் பாவகப் பலன்களையும் கெடுத்துவிடுவார்கள். இவர்களின் பாவத்தன்மை கூடும் போது, ஜாதகர்க்குக் கிடைக்க வேண்டிய, நல்ல பலன்கள் தடைபட்டு, கெடுபலன்கள் அதிகம் நடக்கிறது. சரி,
இப்போது நம் முன்னோர்கள் ஆய்ந்தறிந்து எழுதிய நூலகளில் சூரியன், சனி இணைவைப்பற்றி, எப்படி காண்கிறார்கள் என்பதை, இப்போது காண்போம்.
                                                                                                                      தொடரும்.
                                                            ஒளியும், இருளும்…..                                                                                            (2)
விண்ணிலிருந்து அருளப் படாவிட்டால், எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. விவிலியம். யோவான் அதி 3; வசனம் 27.
மங்களேஸ்வரியம் 15 வது அத்தியாயம், 1 வது சுலோகத்தில்
சூரியன், சனியும் சேர உதித்த பாலன்,
பாரினில் வியாபாரத்தில் பண்டிதன், சமர்த்து உள்ளோனாய்
தேரிய தாது வர்க்கம் செம்பு பொன்வெள்ளி உலோகம்
கூரது பரீட்சை செய்துமுறைவிலா தனத்தைச் சேர்ப்பான்.   
இந்த எளிய பாடலுக்கு விளக்கம் தேவையில்லை. இப்பாடலின் கருத்தையொட்டியே பிருகத் ஜாதகம், 14 வது அத்தியாயம், 1 வது சுலோகத்தில் விளக்கம் உள்ளது.
 ஜெனன காலத்தில்  சூரியனும், சனியும் கூட, பொன்வெள்ளி முதலிய உலோக வேலைகளிலும், மட்பாண்ட வேலைகளிலும் சாமர்த்தியம் உள்ளவனாயிருப்பான். மேலும்,
உத்திர காலாமிருதம் எனும் காளிதாசர் எழுதிய வடமொழி நூலில் காளிதாசரின் தசா பலா காண்டத்தில், அத்தியாயம் 6, சுலோகம் 31ல் கூறுவது என்னவென்றால்,
சூரியனும், சனியும் கூடி, ஆட்சி, உச்சத்தில் இருந்தாலும், தங்களது நவாமசத்தில் இருந்தாலும், கேந்திர, திரிகோண அதிபர்களாக இருந்தாலும், ஜாதகர்க்கு சனிதசா சூரிய புக்தியில், அரச வழி அனுகூலமும், செல்வம், மகிழ்ச்சி, முதலிய பலன்கள் நடக்கும். மேலும், சூரியன் திசா சனிபுக்தியில், ஜாதகர்க்கு மகிழ்ச்சி,செல்வம், வெற்றி ஆகியவை நடக்கும். இவ்விரண்டு கிரகங்களும் பாவிகளாய் இருந்தால், ஜாதகர்க்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும்.
கர்க மகரிஷி தம் கர்கஹோரை எனும் ஜோதிடக்கிரந்தத்தில் பின் வருமாறு கூறுகிறார்.
1 ம் பாவம்; இதில் சூரியன், சனி கூட, முட்டாள், வியாதி உள்ளவன், தன்னைச் சேர்ந்தவர்களால் கைவிடப்பட்டவன். நல்ல குணமில்லாதவன்.
2 ம் பாவம்;  அதிக ரோகம் உள்ளவர். தயை தாட்சண்யமில்லாதவர். வியர்த்தமானவர். கோபத்தை விட்டவர். சாதுக்களின் சேர்க்கை இல்லாதவர்.
3 ம் பாவம்; ஸ்திரமான நிஷ்டூரத்தை உடையவர். சூரர். எதிரிகளை கொல்பவர். பிரியமாய் பேசுவதில் வல்லவர். அரசர்க்கு அனுகூலமானவர்.
4 ம் பாவம்; தேவதைகளால் பீடையுடையவர். அதிக கோபம் உள்ளவர். கலகத்தில் ஆவலுள்ளவர். லஜ்ஜையை விட்டவர். மந்தக்குணம் உள்ளவர்.
5 ம் பாவம்; சாமான்கல் விற்பவர். குணசாலி. தர்மம் செய்வதில் பிரியமுடையவர். மனைவி, மக்களால் சுகமுடையவர். எப்போதும் நிறைந்த மனதுடையவர்.
6 ம் பாவம்; ரோகமில்லாதவர். பாபமில்லாதவர். அதிக புத்தி, ஆயுதங்களோடு, தனமும் உடையவர். நல்ல வேலைக்காரர்களை உடையவர்.
7 ம் பாவம்; பெண் சுகமற்றவர். கெட்ட மனைவியை உடையவர். அதிகமான பகைவர்களை உடையவர். என்றும் நோயுடையவர்.
8 ம் பாவம்; அதிக சளித் தொல்லைகளுக்கு ஆளாவார். வாயுவாலும் தொல்லையிருக்கும். சத்தியம், தயை இல்லாதவர். எப்போதும் தேச சஞ்சாரத்திலே பொருள்  ஈட்டுபவராய் இருப்பார்.   
9 ம் பாவம்; தனம் புத்தி உள்ளவர். களத்திரத்தினால் அதிக சுகமுடையவர். சத்ருககளை ஜெயிப்பவர்.
10 ம் பாவம்; விசாலமான கண்களை உடையவர். தோள்வலிமையுடையவர். நல்ல முக அழகுடையவர். நீண்ட தலைமுடிகளை உடையவர்.
11 ம் பாவம்; பலவழிகளிலும் இலாபம் அடைபவர். நல்ல மனம் உடையவர். பண்டிதர். நன்றியுள்ளவர். ரோகமில்லாதவர். சந்தோஷமானவர்.
12 ம் பாவம்; மக்களின் விரோதி. நீசத்தனமானவர்களிடம் ஆசையுள்ளவர். நீச காரியம் செய்பவர். அதிக செலவாளி. அதனால், துன்பப் படுபவர்.

ஜம்பு நாதீயம் எனும் ஜோதிடரிஷி, தம் ஜம்புநாதீயம் எனும் ஜோதிட நூலில், இந்த சூரியன், சனி இணைவை, குறிப்பிட்டுள்ளார். அதையும்  காண்போம்.
1 ம் பாவம்; திருட்டுப்பயமுடையவர்.
2 ம் பாவம்; தனம், செல்வம் போய் விடும்.
3 ம் பாவம்; தீர்க்காயுள் உள்ளவர். போகம், சம்பத்து, வெற்றியும், புத்திரரால் யோகமுடையவர்.
4 ம் பாவம்; எவர்க்கும், எதையும் ஈயாதவர். மனதளவில் தாழ்ச்சியுடையவர். என்றும் வறுமையிருக்கும்.
5 ம் பாவம்; தத்து புத்திர யோகமுடையவர்.
6 ம் பாவம்; சொந்த இனத்தாரால் வெறுத்து, ஒதுக்கப் படுவர்.
7 ம் பாவம்; தந்தையின் சாபத்தையுடையவர்.
8 ம் பாவம்; உடல் நலம் பாதிக்கும். தனம் செல்வம் பறிபோகும். பயந்தங்கொள்ளி. தேச சஞ்சாரி. துவேசமுடையவர்.
9 ம் பாவம்; தெய்வ நிந்தனை செய்பவர். வெளிதேசவாசம் உடையவர். பரதார இச்சை செய்பவன்.
10 ம் பாவம்; சேனாதிபதி, தண்டிக்கும் அதிகாரமுடையவர். பராக்கிரமம் உடையவர்.
11 ம் பாவம்; தீர்க்காயுள்,  நிலையான புகழ். செல்வம், நோயற்றவன், நல்லறிவு உள்ளவன்.
12 ம் பாவம்; தன் குல விரோதி. புத்தியில்லாதவன். தரித்திரன். மோசக்காரன். அங்கக் குறையுள்ளவன்.
இந்த சூரியன், சனி இணைவைப்பற்றி, போகரின் மாணாக்கரான புலிப்பாணிச் சித்தர், தம் ஞானத்தாலும்,  குருவின் அருளாலும், அவர் அறிந்ததை, நமக்குக் கூறியுள்ளார். அதைக் காண்போம்

                அரைந்திட்டேன் இன்னமொன்று செப்பக் கேளு
                அனலனுக்குப் பின்னாலே அலரிமைந்தன்
                 பரைந்திட்டேன் பண்டிபொருள் அகமும்கிட்டும்
                பார்தனிலே பரதார விசையநப்பா
                குரைத்திட்டேன் குமரனுக்கு எட்டுப் பத்தில்
                 குலவையிட்டு வருவனடா சண்டன் தானும்
                திறந்திட்டேன் ஜென்மனுக்கு யோகம் செப்பு
                சிறப்பாகப் புலிப்பாணி ஆசிச்சேனே.
இப்பாடலின்,  விளக்கம் என்னவென்றால், சூரியனுக்குப்பின்னால், அலரிமைந்தன் எனும் சனி நின்றால், என்பதை, ஒரே ராசியில் பாகை, கலையின் அடிப்படையில், சூரியனின் பாகைகலைக்குப்பின் சனிநின்றாலும், அல்லது, சூரியன் நின்ற ராசிக்கு பின்ராசியில் சனி நின்றாலும் என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஜாதகனுக்கு பலவகைப் பொன்னும், பொருளும், நிலமும் கிட்டும். அவன் பலபெண்களின் மேல் இச்சைக் கொண்டு, அவர்களை அனுபவிப்பான். இச் சாதகனின் எண்பதாவது வயதினில், எமதூதனாகிய சண்டன் வருவான். ஆனாலும். இவன் யோகவானே எனப் புலிப்பாணி கூறியுள்ளார். இவரே மற்றொரு பாடலில்,
               பாரப்பா பாக்கியமும், ஆறோன் வீட்டில்
                                பகருகின்ற சனியோடு வெய்யோன் மேவ
               கூறப்பா குழவிக்குப் பாக்கியமுண்டு
                                குவலயத்தில் பிரசங்கி செய்யும் உள்ளோன்
               வீறப்ப மற்றவிடங்தனிலே நிற்க
                                வினோதகனாம் கூத்தாடி வேடக்காரன்
               சீறப்பா போகருட் கடாக்ஷத்தாலே
                        செயலறிந்து புவியோர்க்கு செப்புவாயே!
இலக்கினத்துக்கு ஆறு, ஒன்பதாமிடங்களில் சூரியன், சனி கூடிநிற்க, ஜாதகர்க்கு பாக்கியங்கள் கூடும். இந்த பரந்த உலகத்தில் சொற்பொழிவானாகவும், கவிஞானம் உள்ளவனாகவும் இருப்பான். இந்தவிருவிடங்களைத்  தவிர்த்து, மற்ற இடங்களில் எல்லாம் சூரியன், சனி கூட நல்ல பலன்கள் எதுவும் கிட்டாது. இவன் வினோத வேலைகள் செய்பவனாகவும், கூத்தாடியாகவும், வேடக்காரனாகவும் இருப்பான் என போகரின் அருளாலே  உலகில் உள்ளோர்க்குக் கூறுவாயே.
இவ்வாறு, ஒவ்வொரு ஞானியரும், சூரியன் சனி இணைவைப்பற்றி, தங்கள் அனுபவங்களையும், ஆராய்ச்சித்திறனையும், தங்கள் ஞானத்தால் பகுத்தறிந்து, நமக்குத் தந்துள்ளனர்.இவர்கள் வெளியிட்டக் கருத்துக்களை, இப்போது நம்முடன் வாழும் மனிதர்களின், ஜாதகத்தில் ஆய்ந்தறிந்து பார்ப்போம்.
இந்த சூரியன், சனி இணைவைப்பற்றி, பிருகத்ஜாதகமும், பிருகத்ஜாதகத்தின் தமிழ் வழி நூலான மங்களேஸ்வர்யமும், ஏறக்குறைய ஒரேவிதமான பலன்களையே சொல்கின்றன. ஆனால், உத்திரகாலாமிருதத்தில், சூரியன், சனி ஆட்சி,உச்சம்பெற்று, தங்கள் நவாமசத்தில், தாங்கள் இருப்பதும்,, கேந்திர, கோணத்திலிருந்தாலும், சூரியன் தசாவில் சனிபுக்தியோ, சனி திசா, சூரிய புக்தியோ யோகப் பலன்களைத் தரும் என்கிறார். ஆனால், மேற்குறிப்பிட்ட இடங்களைத்  தவிர்த்து, பகைபெற்ற இடங்களில், இவ்விருவிடங்களில், இவ்விருவரும் அமர்ந்திருந்தாலும், கெடுபலன்களே நடைபெறும் என்கிறார். ஆனால், எந்தவிதமான கெடுபபலன்கள் என்பதனை கூறுவதற்கில்லை. மேலும்,
கர்க மகரிஷி தம் கர்க ஹோரையில், 3, 5, 6, 9, 10, 11 ல், சூரியன், சனி கூடுவது, நன்மையானப் பலன்களையே தரும் என்கிறார். மற்றவிடங்களில் கூட, தீமையான பலன்களையே தரும் என்கிறார். இதேபோல், ஜம்புநாதீயத்தில் 3, 10, 11 மிடங்களில் கூடுவது, நன்மையான பலன்களைத்தரும். மற்றவிடங்களில் கூடினால், கெடுபலன்களே ஏற்படும் என்கிறார்.
சூரியனுக்குப்பின்னே சனிநின்றாலும் நன்மையானப் பலன்களே நடக்கும். மேலும், 6, 9, மிடங்களில், இவ்விருகிரகங்களும் கூட, நன்மையான பலன்களே நடக்கும். மற்றவிடங்களில் கூட, வினோதகன், வேடக்காரன், கூத்தாடி என்பதாகக் கூறுகிறார் புலிப்பாணிச் சித்தர்.
மேற்கண்ட எல்லா ஞானியர்களின் கருத்துக்களையும் ஆய்ந்தறிந்து காணும் போது, 1, 2, 4, 7, 8, 12, மிடங்களில் மட்டும், சூரியன், சனி கூட, கெடுதியானப் பலன்களே ஏற்படும், என்பதாக  அறிகிறோம். ஆனாலும், நமக்குள் சின்னதாக நெருடல் இருப்பதை உணர முடிகிறது. காரணம்,
எந்த நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டாலும், கெட்டவன், கெட்டவன் தான்.
இரண்டு பகைவர்கள் எங்கே கூடி நின்றாலும், யுத்தம் யுத்தம்தான்.
இந்த கருத்துக்கிணங்க சூரியன், சனி எங்கே கூடி நின்றாலும், அவர்களுக்குள் பகைநீடித்துத்தான் இருக்கும். அவர்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட காரகங்கள், அனைத்தும் கெடும்போது, அதனால். துன்பப் படுவது நாம்தான்.

                     ஒளியும், இருளும் ..                      (3)             
ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப் படுவர்.
விவிலியம். மாற்கு. அதி; 49 வசனம்
இந்த அண்ட பெருவெளியை 360 பாகைகளாய் பிரிக்கப் பட்டுள்ளது. இதில் 30 பாகைகள் கொண்ட, ஒருபகுதியை, காலபுருடனின் முதல்வீடாக, நம் முன்னோர்கள் பிரித்துள்ளனர். இதே போல், மேலும், 11 வீடுகளை உருவாக்கி, 360 பாகை கொண்ட பெருவெளியை பிரித்துத் தந்துள்ளனர். இப்போது நாமிந்த 12 வீடுகளில், ஏதேவொரு வீட்டை குடியிருக்கும் வீடாகஎண்ணிக் கொள்வோம். 30 க்கு 60 சதுர அடியெனும், 1800 சதுர அடிகள் கொண்ட வீட்டில், முதலில் இருப்பது நுழைவு வாயில். அதைக்கடந்தால், வரவேற்பறை, இதையொட்டியே படிக்கும் அறை, சயன அறை, சமையலறை, பின்னே குளியலறையுடன் கூடிய கழிப்பறை. இவைகளைத் தாண்டினால் புறக்கடைவாசல். இதுபோன்ற அடக்கமான, அழகான வீட்டில், சூரியனும், சனியும், வாடகைக்கு குடிவந்துள்ளதாக வைத்துக்கொள்வோம். இந்த கிரகங்கள் முரண்பட்டவைகளென முன்னரே பார்த்துள்ளோம். இந்த முரண்பட்ட “ஒளியும் இருளும்” ஒரே அறையில், ஒரே மெத்தையெனும் நட்சத்திர சாரத்தில் அமர்ந்துள்ளார்கள் என்றால், அங்கே பெரும் யுத்தமே நிகழும் என்பதில் ஐயமில்லை. மாறாக, சூரியன் வீட்டின் நுழைவு வாயிலும், சனி வீட்டின் புறக்கடை வாயிலிலும் இருந்தால், இவர்களுக்குள் கைகலப்பு நிகழ வாய்ப்பில்லை. ஆனால், வாய் சண்டை நிகழுமல்லவா? அதே போலத்தான், சூரியனிடமிருந்து சனி, அஸ்தங்கமடையாமல், விலகி நின்றால், ஜாதகர்க்கு பெரும் பாதிப்பு நிகழ வாய்ப்பில்லை. ஆனால், ஓரளவுக்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சூரிய கிரகத்துக்கருகில் ஒரு கிரகம் பத்து பாகைக்குள் வந்துவிட்டாலே, அங்கே கிரக இணைவு ஏற்பட்டு விடுகிறது. அதனால் எந்த கிரகமும் அஸ்தங்கம் அடைந்து விடுகிறது. அந்த வகையில் சனியும் கிரக இணைவு அல்லது அஸ்தங்கமடைந்து விடுகிறது. அஸ்தங்கமடையும் கிரகத்தால், விபரீதமான, கெட்ட பலன்களே நடக்கின்றன.
கிரகங்களின் உறவுமுறையில் சூரியனை, தந்தையாகவும், சனியை மகனாகவும் சொல்வார்கள். கிரக இணைவுக்குள் தந்தை சூரியனும், மகன் சனியும் கூடியிருக்கும்போது, ஜாதகரின் வாழ்வில் தந்தை, மகன் உறவும் சீராக இருக்காது. இருவரும் பிரிந்து வாழும் சூழல் ஏற்படுகிறது.  நாம் காணப்போகும் உதாரண ஜாதகங்களில், சிலவற்றில் இருவரில் ஒருவர் உயிருடன் இருப்பதில்லை. இந்த இரு கிரகங்களும் கிரக இணைவுக்குள் வரும்போது, இக்கிரகங்களின் காரகங்களும் கெட்டுப்போய், மிகவும் கேடான பலன்களே நடந்துவருகின்றன.
தந்தைக்கு அடங்காத மகனாகவோ, வாழ்க்கையையும், வளத்தையும் தொலைத்துவிட்ட தந்தையாகவோ, அல்லது சொத்தே தராத தந்தையாகவோ, தந்தையின் சொத்தாகவே இருந்தாலும், அனுபவிக்க முடியாத மகனாகவோதான் இருப்பார்கள். இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துக் கொள்ளாது. இருவரும் ஒரு வீட்டுக்குள் வாழவே முடியாத சூழலே ஏற்படும். எப்போதும் முறுக்கிக் கொண்டே எதிரியைப் போல் வாழும் வரை வாழ்வார்கள்.
எந்த வீட்டில் சூரியனும், சனியும் கூடியுள்ளார்களோ, அந்த வீடு பாதிப்படைகிறது. இவர்கள் கூடியுள்ள வீட்டின் அதிபதி, பகை, நீசம்பெறாமல், நல்ல நிலையில் இருந்தால், கெடுபலன்கள் குறைய வாய்ப்புள்ளது. இவர்களை குரு போன்ற சுபக்கிரகங்கள் கண்டாலும், சற்றே கெடுபலன்கள் குறைவாகத்தான் நடக்கிறது. இலக்கினத்துக்கு, எட்டாமதிபதியோ, பனிரெண்டாமதிபதியோ, இவர்களைக் கண்டால், விதிவிட்ட வழிதான். நடக்கப் போகும் பலன்கள் மிகக் கடுமையாக இருக்கும்.
சூரியனின் பலம் குறைவாக இருக்கும்போது, சூரியனின் காரகங்கள் கெடுகின்றன. சனியின் பலம் குறைவாக இருந்தால், சனியின் காரகங்கள் கெடும்.
சூரியன் ஆத்மாவைக்குறிக்கும், இராஜ கிரகமாகும். இவர் பலம் குறையும் போது, “ஆத்ம நடுக்கம்” ஏற்படும். தலைமைதான் சூரியனின் தனித்துவக்குணமாகும். அந்த தலைமை பதவியே, இவர்களின் தசாபுக்தி காலங்களில் ஆட்டம் கண்டுவிடும். மேலும், அரசியலில் உள்ளோரும், அரசு சார்ந்த வேலைகளில் உள்ளோரும், மருத்துவம், இராணுவத் துறையில் உள்ளோரும், வழக்காடுபவரும், நீதி பரிபாலனம் செய்பவரும், வேதம் அறிந்தவரும், இவர்களின் தசாபுக்திகாலங்களில், தடுமாற்றங்களை சந்தித்தே ஆகவேண்டும். ஆத்மபலம் குறையும் போது, தைரியமும், துணிச்சலும் காணாமல் போய்விடும்.
சனி கர்மாவைக் குறிக்கும் அடிமைக்கிரகமாகும். கர்மாவென்பது வினையையும், அலுவல்களையும் குறிக்கும். சனி கெடும்போது, வினையின் செயலும், அலுவலும், ஜீவனமும் தானே கெடும். சூரியனிடமிருந்து பெருவொளியைப் பெற்றுக்கொள்ளமுடியாத சனி, ஓர் இருட்டுக்கிரகமாகும். இருட்டுக்குள் நடக்கும் அடாவடித்தனத்துக்கும், அட்டகாசத்துக்கும் சனியே காரணமாகிறார். உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்வதும், வெட்கமில்லா வேசித்தனத்துக்கும், வீண்வார்த்தைலளுக்கும், துன்பத்துக்கும், ஒளிபுகா இருட்டுச்சிறைக்கும், ஊனத்துக்கும், மனப்பேதலிப்புக்கும், திருட்டுக்கும் சனியே காரணமாகிறார்.
சமூக விரோதச்செயல்களை செய்பவர் சனிதான். இந்த சமூகவிரோதிகளை கைது செய்வது, வழக்காடுவது, நீதி  விசாரணை செய்வது, தண்டிப்பது எல்லாம் சூரியனின் வேலை. தண்டிப்பனைக் கண்டால், எந்த திருடனுக்குத்தான் பிடிக்கும். அதெ போல, சூரியனைக் கண்டால் சனிக்குப் பிடிக்காது.
ஒருவர் மதிப்புமிகுந்த பணிகளில் இருந்தலும், அவர்களின் ஜாதகத்தில் சூரியன், சனி பத்துப் பாகைக்குள் இருந்தால், மனஒழுக்கத்துடனும், தானிருக்கும் துறையில் சிரத்தையோடும், இருக்கவேண்டும். இவர்க்கு சூரிய தசாவோ, சனி தசாவோ அல்லது இவர்களின் புக்திகளோ, நடப்பிலிருந்தால், அச் சாதகர்க்கு, கீழ்நிலையில் உள்ள பணியாளர்கள் ஒத்திழைப்பதில்லை. தன் கீழ் நிலையிலுள்ள பணியாளர்களின் அலட்சியப் போக்கால், மனஉளைச்சலையும், எரிச்சலையும் சந்தித்துத்தான் ஆகவேண்டும். இதேபோல், ஒவ்வொரு காரகங்களும் சீர்குலைந்து, தறிகெட்டுப்போய்விடும்.
அனைத்து இந்தியரும் அறிந்து வைத்திருக்கும் ஓர் புராணம்,”அரிச்சந்திரா”. எல்லோரும் தெரிந்து வைத்திருக்கும், ஓர் புராணக் கதையை நாமும் விரிவாகப் பெசப் போவதில்லை. எந்த நிலை வாழ்வில் வந்தாலும், பொய்பேசக்கூடாது.  உயிரே போனாலும், கொடுத்த வாக்கை காக்க வேண்டும். பொய் பேசினால், தீமை விளையும். உண்மை மட்டும் பேசினால், எவ்வளவு துன்பம் வந்தாலும், கடைசியில் வாய்மையே வெல்லும். இதுபோன்ற நீதியைப்போதிக்கும் அற்புதமான புராணம்.
கோசலை மன்னன் அரிச்சந்திரனின் மனைவி சந்திரமதியின் தலையிலும், தன் அன்பு மகன் லோகிதாசனின் தலையிலும் புல்கட்டை வைத்து, வேதியர் தெருவில் விலை கூறிவிற்கும் போது, இவர்களை விலை கொடுத்து வாங்கியவன் ஓர் வேதியன். இவன் யார் தெரியுமா? அக்னிபகவான் எனும் சூரியனே.
அரிச்சந்திரனின்  அமைச்சர் சத்தியகீர்த்தி, மக்கள் கூட்டத்தின் முன் விலை கூறி அரிச்சந்திரனை விற்கும்போது,  அவரை விலைகொடுத்து வாங்கிய புலையன் யார் தெரியுமா? எமதர்மன் எனும் சனியே!.
அயோத்தியை ஆண்ட கோசலை மன்னன் அரிச்சந்திரனின் மனைவி, மகனை வேலைக்காரியாக்கியவன்  இந்த சூரியனே.
சூரிய குல அரசனும், “சத்தியமேவ ஜெயதே”, என்று, வாக்கும், வாய்மையும் தவறாத பேரரசனை, பிணம் எரிக்கும் சுடுகாட்டில் காவல் காக்க வைத்தவன் இந்த சனியே!.
அக்னி பகவான் எனும் சூரியனும், தர்மதேவன் எனும் சனியும், ஒருவர் ஜாதகதில், ஓரிடத்தில் கூடும் போது, மிகப்பெரும் வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர்.
அரசனும், ஆண்டியாகிறான்.
அரிச்சந்திரனைப்போல், தன் மனைவி, மக்களை பிரிந்து, தன் உறவுகளையும், ஊரையும் விட்டு, வேற்றிடத்தில், திரைமறைவு வாழ்க்கை வாழவேண்டியுள்ளது. சுருக்கமாக சொல்லவேண்டுமானால், தான் வாழ்ந்ததற்கான அடையாளங்களைத் தொலைத்து விடுவார்.
இங்கே குறிப்பிடப் போகும் பாடல் வரிகள் எல்லாம், சூரியன், சனி இணைவுள்ள, ஜாதகர்க்கு அப்படியே நிகழ்ந்துவிடும் என்று அர்த்தமில்லை. ஆனால், ஒரு சிலருக்கு அப்படியே நிகழ்ந்துள்ளது எனபதும், நிதர்சனமான உண்மை. அதனால், சூரியன், சனி இணைவுள்ள ஜாதகர்கள், இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகளைத் தள்ளிவிடாமல், கவனமாய் மனதில் நிலை நிறுத்திக்கொள்ளவேண்டும். இக்கட்டுரையின் நோக்கம், யாரையும் பயமுறுத்தல் செயவதில்லை. மாறாக, எச்சரிக்கை செய்வதே.
இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ள பாடல்கள் எல்லாம், சூரியன், சனி இணைவைப்பற்றியது. ஆனால், இப்பாடலின் வரிகள் அனைத்தும், அப்படியே, அயோத்தி மன்னன் அரிச்சந்திரனின் வாழ்க்கையில் நிகழ்ந்தது போலவே இருப்பதால், அரிச்சந்திரனின் வாழ்க்கையை, இப்பாடலுடன் பொருத்தியுள்ளேன்.
தன்னோடு இணைந்த சனியைப்பார்த்து, சூரியன் சொல்கிறார்.
                இந்த பலன் கெடுதி செய்யும் இயலா பாவி
                                என்னுடன் நீ வந்து சேர்ந்த குற்றம்
                சுந்திரமாய் வீடுமுதல் தனங்கள் யாவும்
                                தொலைத்திடுவேன் சுகமதுவும் சற்றுமின்றி
                அந்திரமாய் இவன் தன்னை அலையச் செய்து
                                அயலாரால் அவமானம் ஆக்கிவைப்பேன்”…. என்றார்
கெளசிக முனிவர்க்குக் கொடுத்த வாக்கையும், உண்மைநிலை தவறாமலும் இருக்கவும்,அரிச்சந்திரன், தன் நாடு, நகரங்களையும், அரண்மனை செல்வங்களையும், தாரைவார்த்துவிட்டு, தன் மனைவி, மகனுடன், தன் நகர்விட்டு வெளியேறுகிறான். அடர்ந்த காட்டுக்குள் அலைந்து திரிகிறான். கெளசிக முனிவரின் சீடரான சுக்கிரனால் அவமானப்படும் படியான ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தாங்கிக் கொள்கிறன்.
               செப்பிடவும் இயலாத ரோகம் ஈவேன்
                                 செஞ்சோற்றின் சுவைதன்னை மாற்ற வல்லேன்
                 இப்புவியில் நகர்விட்டு நீங்க செய்வேன்
                                இயம்பவொண்ணா பெருந்துன்பம் ஈவதன்றி
               அப்புறமும் சித்திரவதை செய்வதல்லால்
                                அச்சமது மனம் தன்னில் அடையேனய்யா.
பரந்த பூமியில், தன் நகர் விட்டு அகன்ற, அரிச்சந்திரனின் கண்முன்னே நிற்கும், பெரும் காட்டுக்குள் நுழைகிறான். அரண்மனையின் அந்தபுரத்துக்குள் அன்னநடையிட்டு வந்த சந்திரமதிக்கு, கானக வாசம், கடும் துன்பத்தைத் தந்தது. சுவையாக உண்டு பழகியவர்கள், காட்டுக் காய், கனி, கிழங்குகளை உண்ண வேண்டி இருந்தது. கொடும் பசி தணிய, சுவை மறந்து உண்டனர்.
கெளசிக முனிவரின் சீடன் சுக்கிரனால்,அவமானமும், சித்திரவதைக்கும் ஆளானார்கள் மனதளவில் அச்சமும் அடைந்தனர். இந்த கொடும் நிலையிலிருந்து மீளும் வழி தெரியாமல், கவலையும், கலக்கமும் அடைந்தனர். அடிமனதின் ஆழத்திலிருந்து, துயரம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. போக்கிடம் தெரியாத இருட்டான வாழ்வு, தம் கண்முன்னே நிழலாடுவதை, அரிச்சந்திரன் உணர்ந்தான்.
மீண்டும் சூரியனுக்கும், சனியுக்கும் தர்க்கம் ஏற்படுகிறது.
               அன்னமெனும் மனையாளால் துன்பம் துன்பம்
                                அவ்விடத்தை நீக்கி வைத்து அலையச் செய்வேன்
               சொர்ணமதை கண்டோர்க்கு சூரை விட்டுச்
                                சூதுக்களும் வாதுக்களும் சூன்யக்கண்டம்
               இன்னுயிரை விட்டிடவும் இறக்கச் செய்து
                                 எல்லோரும் நகைக்க இவன் துகில் அகற்றுவேன்.
வசிட்டமுனிவரின் வாதத்தாலும், கெளசிக முனிவரின் சூதாலும், சரிந்தது என்னமோ அரிச்சந்திரனின் சாம்ராஜ்யம் தான். கெளசிக முனிவரிடம் தன் நாடு, நகரங்களையும், தன் கணக்கற்ற செல்வங்களையும் சூரைவிட்டுவிட்டு,  கானகம் கடந்து காசிமாநகரை, அடைய எத்தனித்தவனுக்கு, தன் அன்னமெனும் மனையாள், “இட்ட அடிநோக, அடுத்த அடி கொப்பளிக்க,” என்று நடப்பதற்கே, தடுமாறும் நிலைகண்டு, தன் உயிரை உருவிப்போட்டதைப்போல், துடித்தான்.
தன் சத்தியத்தின் சோதனைக்கு, தன் குடும்பம் சிக்கி, சின்னாபின்னமடைவதைக் கண்டு, தன் இன்னுயிரையும் விட்டிடவும் சிந்திப்பானல்லவா?
இவையெல்லாவற்றையும் விட மிகக்கொடுமையாக,
கோசலை நாட்டை செங்கொலேந்தி அரசாண்ட, அரிச்சந்திரன் கைகளில், இப்போது மூங்கில் களி.
அரசவை, இப்போது பிணம் எரிக்கும் மயானக் கரை.
அன்று அரச தோரணை. இன்று சுடுகாட்டு மரத்தில் பரண்
அன்று மணிமுடியும், செவிகளில் குண்டலமும், நீண்ட கரங்களில் பொன் வளையமும், தேகம் முழுக்க சிந்தாமணியும், இடுப்பில் மணிமேகலையும், கால்களில் சிலம்பும் அணிந்திருந்தவன், இன்று மானம் மறைக்க ஒட்டுக்கோவணத்துடன், பொங்கித்தின்ன கால்படி அரிசிக்காக, “சூரியகுலம்” புலையனாய் பிணம் எரித்துக் கொண்டிருக்கிறது.
               விடுவேனோ இன்னமும் தான் விளம்புகின்றேன்
                                 வீடு நிலம் பொருள் யாவும் அயலார் கொள்வர்
                அடிமைப்பட செய்திடுவேன் அயலார்க்குள்ளே
                                அதினாலும் சுகமதுவும் அடுத்துக் காட்டேன்.
               நெடுநாளும் ஓட்டாணடியாக்கிப் பின்பு
                                நீணிலத்தில் வயிறு பிழைக்க விழித்திட்டேன்.
சரி. நாடு,நகரம், வீடு, வாசல், செல்வம் அத்தனையையும் புடுங்கியாச்சு. நாட்ட விட்டு காட்டுக்கு விரட்டியாச்சு. அவமானப்படும்படியா ஏசியாச்சு, பேசியாச்சு. மனம் வெறுத்துப்போகும் படியா செஞ்சாச்சு. சூரிய(ன்)ங்கிற அக்னிய வைச்சு, இவங்க தங்கியிருந்த காட்டவும் எரிச்சாச்சு. எமதர்மங்கிற சனிய வச்சு உயிர் பயம் காட்டியாச்சு. மரண பயம் வந்து, மனம் கலங்கி நின்னாச்சு. வயிற்றுக்காகத்தான் வாழ்க்கை எனும் நிலையையும் உருவாக்கியாச்சு. ஆனாலும், இன்னும் ஏதோ குறையிருக்கிறதே, என்று நினைத்த விதி
“ கடுவிஷம் போல் புத்திரரைக் கருவறுப்பேன்
கண்கலங்கி மனம் கொதித்துக் கவலைமிஞ்சும் “
சூரிய குலத் தென்றல் அரிச்சந்திரனின் அன்புமகனும், சந்திரமதியின் ஜீவனும், அயோத்தியின் இளவரசுமான லோகிதாசன், கடும் விஷம் கொண்ட கருநாகத்தால் தீண்டப்பட்டு மாண்டான்.
இவ்வளவு துன்பங்களையும் ஒருமனிதனால், தாங்கமுடியுமா? தங்கமுடியும் என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. அரிச்சந்திரனின் பிற்பகுதி புராணக்கதை, நாம் குறிப்பிட்டுள்ள பாடலுக்கு மிகப்பொருத்தமாக பொருந்தி வருவதை காண்பீர்கள். பொருந்தி வரும் கருத்துக்களைத் தவிர, இப்பாடலுக்கும், புராணக் கதைக்கும் தொடர்பில்லை.
அரிச்சந்திரன் வாய்மைக்கான சோதனையை எதிர் கொண்டான். வென்றான். சாதித்துக் காட்டினான். அவன் முன் தோன்றிய மும்மூர்த்திகளும் வாழ்த்தினர். மீண்டும் அயோத்தியின் மன்னன் ஆனான். சத்தியம் தவறாத ஆட்சியை மண்ணில் நிகழ்த்திக் காட்டினான்.

                        ஒளியும், இருளும்…..                    (4)
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை. சிறுமைப் பட்டவனுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போவதில்லை. 
விவிலியம். திருப்பாடல். அதி 9; 18 வசனம்.

வாழ்க்கையெனும் போரட்டத்தில் புதிய புத்தகம்தான் நம்பிக்கை. இதை தொலைத்தவர்கள், வேறு எதையும் பெற முடியாது. போராட்டக்களத்தில் வெற்றி, தோல்வியென்று எதுவும் கிடையாது என்று நினைப்பவர்களால் தான், வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தை நோக்கி நடக்கத் தகுதியானவர்கள். வாழ்க்கையின் போராட்டம் வசதிகளை பெறுவதற்கில்லை.
நம் வாழ்வு மேல் மட்டத்தில் உள்ளதா? மைய மட்டத்தில் உள்ளதா? அல்லது அடிமட்டத்தில் உள்ளதா? என்பதனை அளக்க, ஓர் அளவுகோல் தேவைதான். அது பணத்தினை மையமாக வைத்து இருக்க கூடாது. மனத்தினை வைத்து இருக்க வேண்டும்.  மனம் நிறைந்த வாழ்க்கைக்கு விலையேதுமில்லை.
ஓர் அமைதியான வாழ்வின் அடித்தளம் என்பது, குடும்ப வாழ்வும், பொருளாதார நிலையும் அமையும் விதத்திலே உள்ளது. நல்ல அடித்தளத்தில் அமையாத வாழ்வும், வளமும், சூரியன், சனி போன்ற கிரகங்களின் தாக்குதலுக்கு ஆளாகும். நாம் மனஒருமைப்பாடோடு, எதிர்த்தால், “வாழ்க்கை வாழ்வதற்கே” என்பதின் அர்த்தம் புலப்படும். வீழ்ச்சி என்பது இல்லை. எழுச்சியே இனி எல்லை.
ஆண், பெண்  இருபாலரில் யாருக்கேனும் சூரியன், சனி இணைவு பத்துப் பாகைக்குள் இருந்தால், குறிப்பாக, 2, 4, 7, 8, 12 லிருந்தால் வாழ்க்கை கொந்தளிப்பாகத்தான் இருக்கும். சிம்மம், மகரம், கும்பம் இலக்கினக்காரர்களுக்கு சூரியன், சனி இணைவு, இவர்களின் தசா, புக்தி, அந்தரகாலங்களில், வரப்போகும் தீவினையை எதிர்கொள்ள, தனியான மனதுணிவு தேவைதான்.
                        கொடுத்திடுவேன் அங்கமதில் ரோகம் தானே
                               தொந்திரவும் பெண்டீர்க்கும் பிள்ளைக்கேதான்
                        அடுத்தடுத்துக் கண்டங்கள் மீறச் செய்வேன்
                               அப்புறமும் மனக்கவலை மீறச் செய்வேன்.
மனதுக்குள் கவலைகள் புகுந்துவிடாதபடி, சூழ்நிலைகளை எளிதாக எடுத்துக்கொள்ளும், மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனம் காயப்பட்டுப் போனால், வாழ்க்கையே, புரையோடிப்போகும்.
                மட்டில்லா மனக்கவலை மலைபோல் ஈவேன்
                         மர்மங்கள் வெளி வெளியாய்ச் செய்வேன் யானும்
                பொட்டெனவே உயிர் மாய்க்கப் புகட்டுவேன் யானும்
                                பொல்லாங்கு சோரபயம் எல்லாம் ஈவேன்                             
                        வெட்டெனவே உறவினர்கள் சதியே செய்ய
                                பொல்லாங்கு பில்லியோடு சூனியம் ஈவேன்
                அயல் வீட்டில் குடியோட அடிப்பேனய்யா
                                அன்னமதை விஷமாக ஆக்குவேன் யான்.
இப்பாடலில் உள்ளபடி ஒருவனுக்குப் பலன்கள் நடப்பதாக வைத்துக்கொண்டால், அச்சாதகன் எவ்வளவு உயர்ந்த நிலையிலிருந்தாலும், சூரியன், சனி, தசாபுக்தி அந்திர காலத்தில் மிகவேகமாக அடித்தட்டு வாழ்க்கை முறைக்கு வந்துவிடுவார். மட்டில்லா மனவலிமை மட்டும், ஜாதகர்க்கு இருந்தால் மட்டுமே, வருங்காலம் முன்னேற்றமான காலமாக அமைந்திருக்கும்.
                நன்மையின்றி பூமிநிதி எல்லாமய்யா
                         நாசமதாய்ச் செய்திடுவேன் நன்மையின்றி
                குலமாதர் தங்களையும் குலைப்பேனய்யா
                         கூறிடுவேன் அபவாதம் குடும்பத்துள்ளே,
ஒரு மனிதன் சொத்து, சுகம் அனைத்தையும், இழந்துவிடலாம். ஆனால், கணவனையோ, மனைவியையோ இழந்துவிடக் கூடாது. எவ்வளவு சோதனைகளையும் தாங்கும் மனம், குடும்பத்தின் மீது விழும், அபவாத பேச்சினைக் கேட்டு கலங்கி விடும். மனஒழுக்கம் உள்ளவர்கள், அபவாதப்பேச்சிலிருந்து, விரைவில் விடுபட்டுவிடுவர். ஆனாலும், “வெள்ளைத்துணியில் விழுந்த கறுப்புச் சாயம் தான்” கறைகள் மறையாது.
                உள்ளத்தில் அழல் வியாதி உருகச் செய்வேன்
                                உத்தமர்கள் யாவருமே உறுத்துவார்கள்
                தெள்ளமுதம் போல் புசிப்பைத் தீண்டச் சேய்வேன்
                         திங்களைப்போல் செல்வங்கள் சிறுக்கச் செய்வேன்.
ஒருவனுக்கு கவலைகள் அதிகமாக, அதிகமாக, உள்ளம் நெருப்பாய் தகிக்க ஆரம்பித்துவிடும். கெட்டவர்கள், எதைப் பேசினாலும், உலகம் பொருட்படுத்தாது. ஆனால், நல்லவர்களை உற்று நோக்கினாலே போதும், அந்த பார்வையின் நெருப்பிலே உள்ளம் உருகிவிடும்.
                அற்பர்களால் புழுக்கமனம் ஆக்கி வைப்பேன்
                         அல்லல் எனும் துன்பங்கள் அதிகம் ஈவேன்
                ஒப்புரவாய் யாவற்றும் விலகச் செய்வேன்
                                ஓங்காமல் எத்தொழிலும் ஒடுக்குவேன் யான்.
இங்கே குறிப்பிடப் பட்டுள்ள பாடல்களில், எல்லாவற்றிலும், “மனம்” என்கிற சொல் பயன்பட்டிருப்பதைக் காணலாம். காரணம்  சனியெனும் இருள்கிரகம், சூரியன் எனும் ஒளிக்கிரகத்தை நோக்கி கூறுவதாக உள்ளது.
நாம் ஏற்கனவே, சனியின் காரகங்களைப் பற்றி அறிந்துள்ளோம். அதில், “மனப்பேதலிப்பு” க்கு சனி காரகனகிறார். ஒருவன் மனதளவில் கலக்கமடைந்து விட்டால், திங்களைப் போல் செல்வங்கள் மட்டும் சிறுக்காது. ஜாதகரின் எண்ணங்களும், சிந்தனைகளும் சிறுத்துவிடும். மேலும், கர்மக் காரகன் சனியாவார். இலக்கினத்துக்கு எட்டு, பனிரெண்டில் சூரியனும், சனியும் அமர, இதுவரை செய்து வந்த அலுவலும், தொழில் முறைகளும் பாதிக்கப் படுகின்றன. காலபுருடத்திற்கு பத்தாமதிபதியான சனியால், எந்த தொழிலும் விருத்தியில்லாமல், ஒடுங்கிப் போய்விடும்.
வளர்பிறை காலங்களில் பிறந்தவர்களின் ஜாதகத்தில், சூரியன், சனி இணைவு பத்துப் பாகைக்குள் இருந்தால், கெடுபலன்கள் யாவும், சூரியனாலே நடந்து வரும்.
தேய்பிறை காலங்களில் பிறந்தவரின் ஜாதகத்தில், சூரியன், சனி இணைவு பத்துப் பாகைக்குள் இருந்தால், கெடுபலன்கள் யாவும் சனியினாலே நடந்து வரும்.
சூரியன், சனி இணைவு, தந்தை, மகன் இணைவுக்குச் சமம். இருவருக்கும் ஆதிக்க உணர்வும், அடங்க மறுக்கும் எண்ணங்களே அதிகமிருக்கும். தங்களுக்குள் இருக்கும் குறைபாடுகளைக் களைந்து விடுவதாக நினைத்து, கிளறி விட்டுக் கொள்ள வேண்டாம். மனத் தாழ்ச்சியுடன் தன்னைத் தாழ்த்திக்கொள்வதன் மூலம், மனதை செம்மைப் படுத்திக் கொள்ளலாம். இதனால், சூரியன், சனி இணைவால், நிகழப்போகும் கெடுபலன்களைக் குறைத்துக் கொள்ளலாம். 
 உதாரண ஜாதகம் 1                                        
புதன் குரு
சூரி சனி


சுக்


                     உதாரண ஜாதகம்.1.
03.05.1999 11.10 PM
இராசி

இராகு

கேது



இலக்
சந்
செவ்




சூரியன் பாகை.19.01 கலை பரணி . 2 ம் பாதம்
சனி     பாகை 13,43 கலை பரணி . 1 ம் பாதம் அஸ்தங்கம்
இலக்கினம் தனுசு.  ஐந்தாமிட மேடத்தில் சூரியனும், சனியும் உள்ளனர். இச்சாதகரின் தந்தை போராட்டமான வாழ்க்கை நடத்துபவர். மது அருந்தும் பழக்கம் உடையவர். ஜாதகர்க்கு புதன் தசா, சனி புக்தி நடப்பிலுருக்கும் போது, குடும்ப பிரிவினை ஏற்பட்டு, பின் ஒன்று கூடினார்கள். குடும்பத்தில் வருமானம் இருக்கிறதோ, இல்லையோ, சண்டை, சச்சரவுக்கும், குழப்பத்துக்கும், பஞ்சமில்லாமல், நிரம்பி வழியும். இவர்களின் வாழ்க்கை, ஓயாத பிரச்சனைகளால், உருக்குலைந்து போய்விட்டது.
உதாரண ஜாதகம். 2.
சூரியன். பாகை. 149.43 கலை.உத்திரம். 1 ம் பாதம்.
சனி     பாகை. 126.28 கலை. மகம்.    2 ம் பாதம் 


இராகு


            இல


        சந்

             ( உதாரணம் ஜாதகம் 2 )
               16.09.1948 1.00 PM
                  இராசி

       சுக்



    சூரி  சனி



        குரு
 
   செவ்   கேது

       புதன்

இலக்கினம் மிதுனம். மூன்றமிட சிம்மத்தில், சூரியன், சனி உள்ளனர். இராசியின் நுழைவுவாயில் சனியிருக்க, புறக்கடைவாயிலில் சூரியன் நிற்கிறார். திருமணம் முடிந்த இரண்டு மாதங்களில், கணவன்,மனைவிக்குள் பிரச்சனை. தொடர் பிரச்சனைக்கிடையில் விவாக ரத்து ஏற்படுகிறது. அதன் பின், தந்தை மகனுக்கிடையில் சொத்து பிரச்சனை ஏற்பட, சகோதரர்களோடு, இவர்க்கும் சொத்து பங்கிட்டுத் தரப்பட்டது. தனக்குப் பிரிந்த எல்லாச் சொத்தையும் தொலைத்துவிட்டு, ஊரை விட்டு வெளியேறுகிறார். அதன் பின் இப்போது வரைக்கும் கஷ்டஜீவனம் தான். இவர் ஊரைவிட்டு வெளியேறும் போது, அவர்க்கு முப்பத்திஏழு வயது. அப்போது தான் சனிதசா ஆரம்பித்திருந்தது.
உதாரண ஜாதகம். 3. 
சூரியன்.பாகை 30.07.கலை கார்த்திகை. 2 ம் பாதம்
சனி.    பாகை 32.10.கலை கார்த்திகை. 2 ம் பாதம். அஸ்தங்கம்



    சுக் புதன்
இல  சூரி சனி





                       உதாரண ஜாதகம் 3                                         
                     15.05.1971. 06.35 காலை
                          இராசி

       கேது


செவ்    இராகு




        சந்

குரு





இலக்கினம் ரிஷபம்.  இலக்கினத்தில் சூரியனும் சனியும் உள்ளனர். இதில் சனி அஸ்தங்க தோஷம் வேறு. திண்டுக்கல் நகரில் பெரிய ஹோட்டல் வைத்து நடத்தியவர். பலருக்கு வேலை வழங்கியவர். மிகச்சிறப்பாக வியாபாரமும் நடத்தும் அனுபவமும் உண்டு. செவ்வாயின் தசாவில் தொழிலில் சரிவும், தேக்கநிலையும் ஏற்படுகிறது வியாபார சரிவை ஈடுகட்ட, கடன் வாங்கி பல்பொருள் அங்காடியும் நடத்தினார். இரண்டு தொழிலையும், ஒருவரே கவனிக்க இயலாமல், ஹோட்டலை இழுத்து மூடுகிறார். கடன் சுமை அதிகமாக, நெருக்கடியும் கூடுகிறது. பின்னர், பல்பொருள் அங்காடியையும் மூடிவிட்டு, இந்த பரந்த தேசத்தில் எங்குள்ளார் என்பதே யாருக்கும் தெரியாது. இவர் சொந்த மண்ணை விட்டு வெளியேறும் போது, இராகு தசா, சனி புக்தி நடப்பிலிருந்தது.
 உதாரண ஜாதகம் 4                                       
சூரியன். பாகை348.11 கலை ரேவதி. 1ம் பாதம்
சனி.     பாகை340.13 கலை உத்திட்டாதி 3ம் பாதம் அஸ்தங்கம்.

 

இல சூரி சனி

         சுக் இராகு





புதன்

                    உதாரண ஜாதகம். 4.
                   02.04.1967. 05.40 காலை
                                 இராசி

குரு






சந்


செவ் கேது




இலக்கினம் மீனம். இலக்கினத்தில் சூரியனும், சனியும் இருக்க, சனி அஸ்தங்கமடைகிறார். தொழிலை விரிவு படுத்த கடன் வாங்குகிறார். வட்டிக்கு மேல் வட்டி கட்டுகிறார். கடன் அடைந்தபாடில்லை. ஒருகட்டத்தில் வட்டிகட்டமுடியாமல், வட்டி கட்டுவதற்கே வட்டிக்கு கடன் வாங்குகிறார். தொழில் நடத்த முடியாமல் நெருக்கடி ஏற்படுகிறது. கடன்கொடுத்தவர்கள், கொடுத்த கடனைக் கேட்டு நெருக்க, ஊரையும் உறவுகளையும் விட்டு வெளியேறுகிறார். பஞ்சம் பிழைக்கச் சென்ற இடத்திலும், பசி, பட்டினி தான். வயிற்றை நிரப்புவதே பெரும்பாடு. இவர்க்கு இராகு தசா சனிபுக்தியில் மரணம் ஏற்படுகிறது.
  உதாரண ஜாதகம் 5                                        
சூரியன். பாகை 273.30 கலை உத்திராடம் 3ம் பாதம்
சனி.     பாகை 284.05 கலை திருவோணம் 2ம் பாதம் அஸ்தங்கம்.
 




சந்   கேது



                    உதாரண ஜாதகம். 5,
   18.01. 1992. 08.15. காலை
                இராசி




இல சூரி சனி

  குரு (வக்)


புத செவ் இரா

        சுக்




இலக்கினம் மகரம். இலக்கினத்தில் சூரியனும், சனியும் நிற்க, சனி அஸ்தங்கமடைகிறார். இச் சாதகர் பிறந்த பின் வாழ்க்கையின் வசதி கொஞ்சம், கொஞ்சமாக விடை பெற்றது. தோட்டம், துரவு, வீடு வாசலையும் இழந்தார்கள். குரு தசா, சனிபுக்தி துவங்கியதும், ஊரைக்காலி செய்துவிட்டு, அயலூரில் குடியேறினர். அங்கும் கடன் பட்ட வாழ்வுதான். அடிமட்டத்தில் கிடக்கும் இவர்கள், வாழ்க்கையின் மேல்மட்டத்திற்கு வருவது எப்போது?
 உதாரண ஜாதகம் 6                                         
சூரியன். பாகை 111. 43 கலை ஆயில்யம் 2ம் பாதம்.
சனி.     பாகை 104. 18 கலை பூசம் 4ம் பாதம்..


       கேது

       குரு





                      உதாரண ஜாதகம். 6
                     07.08. 1976. 06.35 PM
                                இராசி

     சூரி சனி


       இல

    செ புத சுக்


சந்


இராகு




இலக்கினம் மகரம். ஏழாமிடமான கடகத்தில் சூரியன், சனி இணைவு. சனி அஸ்தங்கமடைந்துள்ளார். பெரிய குடும்பத்தில் பிறந்தவர். ஏராளமான நிலபுலன்கள் இருந்தது. இவரின் தந்தையோ, மிகப்பெரும் குடிகாரர். இச் சாதகர்க்கு, சுக்கிர தசா முடிந்து, சூரிய தசா ஆரம்பமானதும், காற்றுப்பட்ட கற்பூரம் போல், செல்வங்கள்,  சொத்துக்கள் எல்லாம்  அழிந்தது.
சந்திரதசா, சூரிய புக்தியில் தந்தை நஞ்சு அருந்தி மாண்டார். சூரிய தசா முதல், சந்திர தசா வரை, 17 ஆண்டுகள் மிகவும் கேடான வாழ்க்கையே வாழ்ந்துவந்தனர். தந்தை இறந்தவுடன், ஜாதகர்க்கு அரசு ஆசிரியர் பணி கிடைத்தது.இப்போது குடும்பத்துடன் அன்னிய மண்ணில் வாழ்ந்து வருகிறார். தந்தையின் வழியில் சொத்து என்று எதுவுமில்லை.
உதாரண ஜாதகம் 7.
சூரியன். பாகை 182.57 கலை சித்திரை 3ம் பாதம்.
சனி.     பாகை 192.20 கலை சுவாதி 2ம் பாதம்  அஸ்தங்கம்.

இலக்கினக் மேஷம். ஏழாமிடமான துலாமில் சூரியனும், சனியும் உள்ளனர். திருமணம் முடிந்தவர். கணவனிருக்க, பலபேருடன் படுக்கை சுகம் அனுபவித்தவர். கண்வரோடு அடிக்கடி தகராறு செய்து வந்தவர், பிரிந்துவாழ்கிறார். சூரியனும், சனியும் எந்த காரகத்தில் கூடியுள்ளார்களோ, அந்த காரகத்தையும் கெடுத்துவிடுகின்றனர். இவர்கள் களத்திரம் எனும், கண்வனைக் குறிக்குமிடத்தில், இவர்கள் கூடியிருப்பது, கணவனே இல்லாமல் செய்து விடுகிறது. 

       சந்

       இல

      இராகு





          உதாரண ஜாதகம். 7.
 20.10.1983. 06.30 PM பெண்
                இராசி





    செவ்  சுக்



குரு கேது

சூரி   சனி

       புதன்



உதாரண ஜாதகம் 8.

சூரியன், பாகை 101.53 கலை பூசம் 3ம் பாதம்
சனி,     பாகை 114.45 கலை ஆயில்யம் 3ம் பாதம்

கேது
இல
செவ்

குரு சுக்


30.07.1977. 12.20. காலை
இராசி

சூரி சனி



புதன்

சந்



இராகு

மேட இலக்கினம். கடகத்தில் சூரியனும், சனியும் உள்ளனர்.  தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பார்கள். ஆனால், இவரோ தந்தை என்ன சொல்கிறாரோ, அதற்கு நேரெதிராய் செயல்படக் கூடியவர். தந்தைக்கு அடங்காத தனயனாக இருந்தார். இருவரும் ஒருவீட்டுக்குள் நிம்மதியாய் இருந்ததில்லை.  ஆனால், தந்தையின் இறப்புகாலத்தில், அவர் அருகிலே இருந்து, அவர் மனம் கோணாமல் நடந்து நல்லபிள்ளையென பேரெடுத்தார்.
தந்தை இஅறக்கும் போது, இவர்க்கு சந்திர தசா, சனிபுக்தி நடப்பில் இருந்தது
உதாரண ஜாதகம். 9.
 சூரியன், பாகை 257.29 கலை பூராடம் 2ம் பாதம்
சனி.     பாகை 256.17 கலை பூராடம் 1ம் பாதம் அஸ்தங்கம்  

      கேது






      சந்

                        உதாரண ஜாதகம். 9.
                       02.01.1960. 06.15 காலை
                      இராசி








இல சூரி சனி
    செவ்  சுக்   புதன்         குரு


      இராகு


இலக்கினம் தனுசு. இலக்கினத்திலே சூரியன், சனி உள்ளனர் சனி அஸ்தங்கம் அடைந்துள்ளனர். இந்த சனி இரண்டு, மூன்றுக்குடையவர். அதாவது, குடும்பத்திற்கும், தைரிய, வீரியத்திற்கும், காரகமானவர். 11.08. 1996 முதல் சனி தசா நடக்கத் துவங்கியது. அது முதல் குடும்பத்தை விட்டு பிரிந்து, தனியாளாக அலைந்து திரிகிறார். நல்ல வேலைத் திறமையுள்ளவர்.  எந்த நிறுவனத்திலும் நிரந்தரமாக இருந்து வேலை பார்ப்பதில்லை. ஏதோவொரு பிரச்சனை….. ஏதோவொரு காரணம்…. உடனே வேலையைவிட்டு விலகிவிடுவார். னீண்டும் வேலை தேடும் படலம். இப்படியாக இதுவரை நடந்துள்லது. எப்போதும் மனக் கொந்தளிப்புடனே இருப்பார்.
உதாரண ஜாதகம் 10..
சூரியன் பாகை 350. 50 கலை ரேவதி 2ம் பாதம்
சனி      பாகை 340.32 கலை உத்திரட்டாதி 3ம் பாதம் அஸ்தங்கம்


     சூரி சனி

     சுக் இராகு





      புதன்

                      உதாரண ஜாதகம் 10..
                         04.04.1967. 04.03PM
                                 இராசி

       குரு


சந்

       இல




    செவ் கேது




இலக்கினம் சிம்மம். எட்டாமிடமான மீனத்தில், சூரியனும், சனியும் உள்ளனர். சனி அஸ்தங்கமடைந்துள்ளார். இவர்     நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இளவயதில் தந்தையை பிரிந்து, தாயின் அன்பிலும், தாய்மாமனின் பராமரிப்பிலும் பட்டப் ப்டிப்பு படித்தவர். குறைந்த ஊதியத்தில், தொண்டு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.அங்கேயே கால் நூற்றாண்டுகாலமாக சிறப்பாகப் பணிபுரிந்து வந்தார். படிப்படியாக பதவிஉயர்வின் காரணமாக, தொண்டு நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர் அந்தஸ்தையும் பெற்றார். நிர்வாகத்துக்குள் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, தொண்டு நிறுவனத்திலிருந்து, தன்னை விடுவித்துக் கொண்டார். அப்போது, சனிதசா சனி புக்தி நடப்பில் இருந்தது.
இங்கே உதாரண ஜாதகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, அன்பர்களின் வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களைப்  விரிவாக எழூதினால், கட்டுரையே சோக ரசம் மிகுந்துவிடும். அதனால் தான், மிகச் சுருக்கமாக கூறியுள்ளோம்.
ஒருவர் தான் வாழ்ந்திருந்த மண்ணை விட்டு, வெளி நகரங்களுக்குப் பிழைப்புக்காக செல்வதும், தான் பிறந்து தவழ்ந்த பூமியை விட்டும், உறவுகளைத் துறந்தும் செல்வது மிகக் கொடுமைதான்.
தான் பிறந்த பூமியில் சொத்து சுகங்களை எல்லாம் இழந்து விடலாம். ஆனால், குடியிருக்கும் வீட்டை எவரும் இழந்துவிடக்கூடாது. அது போன்ற நிலையை சூரியன், சனி இணைவு ஏற்படுத்திவிடுகிறது. இக்கிரக் இணைவுள்ள் ஜாதகர்கள் எந்தவித காழ்ப்புண்ர்ச்சிக்கு இடம்கொடுக்காமல், தம் கர்ம வினைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ளவேண்டும். இக்கட்டுரையின் மூலமாக தெரிந்து கொண்ட விஷயங்களையும், அனுபவங்களையும் ஏற்றுக்கொண்டு, திடமாக வாழ்க்கைப் பயணத்தை எதிர்கொள்ளுங்கள்.
                      
 துயருறுவோர் பேறு பெற்றோர்.ஏனெனில்,
 அவர்கள் ஆறுதல் பெறுவர். விவிலியம். மத்தேயு அதி 5; 4 வசனம்.
                                        வாழ்கவளமுடன்.   


முத்துப்பிள்ளை.
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு
ஆத்தூர். 624701
ஆத்தூர். வட்ட.ம்
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண்கள்.
91501 06069
8754673387
8940529429

1 comment:

  1. சூரி சனி சேர்க்கை பலன் விளக்கம் நன்று. தாங்கள் சோதிடத்தில், கேந்திர ஆதிபத்ய தோசம் செவ்வாய் மற்றும் சர்ப தோச விளக்கம் அளிப்பீர்களா

    ReplyDelete