Friday 14 August 2015

மனிதனின் மரணநாளின் மர்மங்கள் 4. முத்துப்பிள்ளை






ஆத்மக்காரகன் ______ சூரியன்,
மனோக்காரகன் ______சந்திரன்,
ஜெயக்காரகன் _______செவ்வாய்,
புத்திக்காரகன் _______ புதன்
ஜீவக்காரகன் ________குரு,
கர்மக்காரகன் ________சனி,
 ஞானக்காரகன் _______கேது,

இவர்களின் அருட்பார்வை இல்லாமல், எவரும் சொர்க்கவாசலைத் தொட்டு விடவும் முடியாது.

தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம், ஆறாம் அறிவான மனதை அடக்கி நிலை தடுமாறாமல் வாழ்ந்தால், மனச்சிதைவு ஏற்படாது என்கிறது. தமிழின் மற்றொரு தொன்மையான நூலான திருக்குறளில், பொறாமை, ஆசை, சினம், கடுங்கோபம் இந்நான்கையும் தவிர்த்தாலே மனச்சிதைவு ஏற்படாது என்கிறார் திருவள்ளுவர்.

மனதின் திறனை நல்ல உணர்வாலும், நல்ல எண்ணத்தாலும் வளர்க்காதவன், எந்த செயல்களிலும் முரண்பட்டுக் கொண்டேதான் இருப்பான். மனம் தடுமாறும் போது, சிதைவு எனும் புதைகுழியில் சிக்குவான். அதனால் கலங்குவான். அடங்க மறுக்கும் மனம் எந்த செயலிலும் ஒருபிடிப்பு இல்லாமல் இருக்கும்.

நம்மில் எல்லோருக்கும் மனம் வசமாவது இல்லை. மனம் வசப்பட்டவனால் மட்டுமே இறைவனை அடைய முடியும். மனதை நிலை நிறுத்த முடியாதவனால், இறைவனை அடையும் தூரத்தை, எளிதில் கடக்கவும் முடியாது. ஒன்றின்மேல் மனம் நிலைகொண்டால் மட்டுமே துணிவு கிட்டும். ஆத்மா பலப்படும். கர்மங்கள் கரைந்து விடும். கர்மம் தொலைந்துவிட, முக்தி கிட்டிவிடும். முக்தி கிட்டி விட்டால், பிறவிச் சங்கிலி அறுபட்டுவிடும் அதைத்தான், “மாயத்தை விட்டவனால் தான் காயத்தை விட முடியும்” என்றான் ஞானி.

“பிறப்பறுத்து ஆண்டு கொண்ட கூத்தனை நாத்தழும்பேற” துதித்த மாணிக்கவாசகப் பெருமான் போன்றவர்களால் தான், பிறப்பறுத்து முக்தி நிலையை எட்டமுடியும். இதுபோன்ற நல்வினைகளை எல்லாம் விட்டுவிட்டு, தனிஷ்டாபஞ்சமிக்காகக் குறிப்பிடும் நட்சத்திரங்களில் இறந்தால், அவர்களின் ஆத்மாவை எமதர்மராஜாவின் தலைநகரான எமப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப் படுவார்கள். அப்படி அழைத்து வரப்படுபவர்களுக்கு பசிதீர, பூமியிலிருந்து படைக்கப்படும்  உணவை, இறந்தவர்களின் ஆத்மா உண்கிறது என்றும், தாகம் அடங்க பூமியில் படைக்கப்படும் தண்ணீரே இறந்தவர்க்கு வழங்கப்படுகிறது என்றும்,மேலும், இருட்டான நரகப் பாதையில் நடப்பதற்கு, பூமியில் இருந்தே வெளிச்சம் காட்டப்படுகிறது என்பதாகவும், புராணங்களிலும் படித்துள்ளேன். கட்டுரைகளையும் படித்துள்ளேன். பலர் பேசக் கேட்டும் உள்ளேன். இதுபோன்ற கட்டுரைகளும், கருத்துக்களும், மக்களின் மூடநம்பிக்கையை வளர்க்கத்தான் உதவும். அறியாமையை நீக்க உதவாது.

இறைவனின் திருவடியைப் பற்ற நினைப்பவர்கள், தங்களின் மனதை நிர்வாணமாக வைத்துக்கொள்வது நல்லது. மனம் நிர்மலமாக இருக்க, சுத்தமாக இருக்க ஜோதிடமும், சில விதிகளைத் தந்துள்ளது. அதை இங்கே காண்போம். 
 
1.  இலக்கினத்துக்கு மறைவு ஸ்தானங்களான 6, 8, 12 மிடங்களிலோ, பாக்கிய ஸ்தானமான 9 மிடத்திலோ, சூரியன், சந்திரன் கூடி நின்றாலோ, அல்லது சந்திரன் நின்ற இடத்திலிருந்து மறைவு ஸ்தானங்களில் சூரியன் நின்றாலோ மனநலம் பாதிக்கும்.
2.  பொதுவாக இலக்கினத்துக்கு இரண்டாமிடத்தில் சந்திரன் நின்றாலும், இவரை பாவக்கிரகங்கள் கண்டாலும் மனம் குழம்பும்.
3.  சூரியன் சந்திரனை இராகு காண, தற்கொலை சிந்தனை மேலோங்கும்.
4.  சூரியன், ச்ந்திரனை செவ்வாய் காண, மனநலம் பாதிக்கும்.
5.  சூரியன், சந்திரனை சனி காண, பயத்தாலே மனநலம் பாதிக்கும்.
6.  சூரியன், சந்திரனை, கேது காண, அன்மீக எண்ணத்தாலே மனநலம் பாதிக்கும்.
7.  கேதுவோடு பாவக்கிரகங்கள் கூட, தற்கொலை எண்ணம் இருக்கும்.
8.  இலக்கினத்துக்கு ஐந்து, எட்டாமிடங்களில், ஒருவர் மாறி ஒருவர் அமர்ந்தாலும், செவ்வாய், சனி, இராகு, கேது முதலிய பாவக்கிரகங்கள் கண்டாலும் மனநலம் பாதிக்கும்.
9.  சூரியன், சந்திரன், புதன் இவர்களுடன் மந்தன் என்று அழைக்கப்படும் சனியின் மகனான மாந்தி கூடினாலும், அல்லது தனித்தனியே இவர்களுடன் கூடினாலும் மனநலம் பாதிக்கும்.
10.           பாவக்கிரகங்களுடன் புதன் கூட, மனம் சஞ்சலத்தால் புத்தி தடுமாறும்.
11.           பாவக்கிரகங்களுடன் சூரியன் கூட, ஆத்மாவில் தடுமாற்றம் ஏற்படும்.
12.           பாவக்கிரகங்களுடன் மனதுக்காரகன் சந்திரன் கூட, மன நோயால் பாதிக்கும்.
13.           சந்திரன், புதன் இவர்கள் நின்ற ராசிக்கு முன்னே, பின்னே பாவக்கிரகங்கள் நின்று, இவர்களுக்கு பாவக்கர்த்தாரி யோகம் ஏற்பட்டாலும்,
14.           இலக்கினத்துக்கோ, இராசிக்கோ சனி, செவ்வாய் இராகு  இரண்டு, பனிரெண்டில் நின்றாலும்,
15.           ஒன்று, ஐந்தில் சனி, இராகு நின்றாலும்,
16.           சூரியன், சந்திரன், புதன் மூவரும் இலக்கினத்துக்கு மறையக்கூடாது. மேலும், தங்களுக்குள்ளும் மறையக்கூடாது.
17.           இலக்கினத்துக்கு நான்காமதிபதியுடன் சனி, செவ்வாய், இராகு கூட, மனம் பேதலிக்கும்.
18.           இலக்கினத்துக்கு நான்காமதிபதிபதி மறைவிடங்களில் அமர்ந்திருந்தால், எதிரிகளாலும், நோயாலும், கடனாலும், விரயத்தாலும், உடல் நலம், மனநலம் பாதிக்கும்.
19.           இலக்கினத்துக்கு நான்காமிடத்தில் சனி நிற்க, எந்நேரமும் அவமானங்களாலும், மனக்கவலையுள்ளவனாக இருப்பான்.
20.           இலக்கினத்துக்கு ஏழினில்,
             “வள்ளல் இந்த இரவியைச் சனியும் தான் நோக்க
                  வழுத்திட்டேன் மனைவியால் அவதூறு குற்றம்.
             மெள்ளவே வந்துவிடும் கவலை வாய்க்கும்” 
21ஆறினில் புதன்
             “வித்தகர்க்கு மனக்கவலை உண்டேன் பாரே”
22இலக்கினத்தில் சந்திரன்
              “மனவருத்தன், மனக்கிலேசன்”
23இலக்கினத்தில் சனி
              “மனோவியாதி உடையவன்”
24பத்தினில் சூரியன்
              “எந்தையே ஆயுள் மட்டும் கவலை உள்ளவன்”
25இலக்கினத்தில் சூரியன்
               “விடுவதுமில்லை பயித்திய ரோகி”

இது போன்றக் கிரக அமைப்புகள் எவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்கள் தங்கள் மனதை செம்மைப் படுத்த வேண்டும். அதன்பின் இறைவனை அடையும் வழியினைத் தேடலாம்.

வானமண்டலத்தில் சிதறிக்கிடக்கும் நட்சத்திரக் கூட்டத்தில் ஜோதிடம் தனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட 27 நட்சத்திரக் கூட்டத்தின் 108 பாதங்களில் 20 பாதங்கள் தனிஷ்டாபஞ்சமி எனும் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களுக்குள் உள்ளது. இந்த ஐந்து நட்சத்திரங்களை மட்டும் இறக்கக் கூடாத நட்சத்திரங்கள் எனக் குறிப்பிடப்படுவது ஏன்? என சிந்தித்தப் போது,

காலபுருடனின் முதல்ராசியான மேடம், அவனின் உயிர்ராசியாகும். இதன் அதிபதி செவ்வாய் ஆகும்.
காலபுருடனின் பத்தாம்ராசியான மகரம், அவனின் கர்மராசியாகும். இதன் அதிபதி சனியாகும்.

காலபுருடனின் பதினோராம்ராசியான கும்பம், அவனின் பாதகராசியாகும். இதன் அதிபதி சனியாகும்.

காலபுருடனின் பனிரெண்டாம்ராசியான மீனம், அவனின் மோட்சராசியாகும். இதன் அதிபதி குருவாகும்.

இப்போது காலபுருடனின் உயிர், தர்மதேவன் சனி எனும் கர்மத்தில் துவங்கி, அவன் ஜீவன் மோட்சத்தில் முடிவு பெறுகிறது.

காலபுருடனின் உயிர் செவ்வாய் இராசியில் உள்ளதாக அறிந்தோம். அதேபோல் கர்மஸ்தானத்தில் செவ்வாய் நட்சத்திரம் (அதாவது அவிட்டம்) உள்ளது. இந்த செவ்வாய் கர்மஸ்தானத்தில் தான் உச்சம் அடைகிறது. அதனால் தான் காலபுருடனின் உயிர் கர்மத்தில் உச்சம்பெற்று, 11ம் இடமான லாபஸ்தானத்தில் லாபம் அல்லது பாதகம் அடைந்து, 12ம் இடமான மோட்சத்தில் முடிவு பெறுகிறது. அதனால்தான், காலபுருடனின் உயிர் கர்மத்தில் பதிவாகி, சாதகபாதகங்களை லாபத்தில் ஆய்வு செய்து அடையும் மோட்ச, நரகநிலையை சயனஸ்தானத்தில் நிச்சயிக்கப் படுகிறது. இந்த மூன்று ராசிகளில் தொடர்புடைய நட்சத்திரங்கள் ஐந்தும், அதாவது, அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரையிலான நட்சத்திரங்கள் தனிஷ்டாபஞ்சமியில் இடம்பெற்றுள்ளன.

தனிஷ்டாபஞ்சமிக்கான ஐந்து நட்சத்திரங்களுக்கான விளக்கங்களைக் கண்டோம். இனி மீதமுள்ள எட்டு நட்சத்திரங்களில், “ அழகு ரோகிணி”யைத் தவிர்த்து மீதமுள்ள ஏழு நட்சத்திரங்களுக்கான விளக்கங்களைக் காண்போம்.



             காலற்ற
        நாள்.    சூரியன்                    
           நட்சத்திரங்கள்                                
              உடலற்ற
        நாள்.  செவ்வாய்
          நட்சத்திரங்கள்.
             தலையற்ற
             நாள்.  குரு
           நட்சத்திரங்கள்.
          1. கார்த்திகை
         1. மிருகசீரிடம்
           1. புனர்பூசம்
          2. உத்திரம்
         2. சித்திரை
            2. விசாகம்
          3. உத்திராடம்
         3. அவிட்டம்
            3. பூரட்டாதி
 

இந்த  ஒன்பது நட்சத்திரங்களில் அவிட்டமும், பூரட்டாதியும் தனிஷ்டாபஞ்சமி எனும் ஐந்து நட்சத்திரங்களில் வந்துவிட்டதால், இதைத் தவிர்த்து மீதம் உள்ள கார்த்திகை, உத்திரம், உத்ராடம், மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம் ஆகிய ஏழு நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கும் அதிக தோஷத்தைத் தருகின்றன.

காலற்ற, உடலற்றன தலையற்றன நாளில்
கோலக்குய மடவார்த் தமைக் கூடின் மலடாவார்
மாலுக் கொழு மனை மாளிகை கோலினது பாழாம்
ஞாலத்தவர் வழிபோகினது நலமெய்திடராவமே.
       
 காலற்ற, உடலற்ற, தலையற்ற சூரியன், செவ்வாய், குரு ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில், ஒரு பெண்ணோடு முதன்முதலாக உடலுறவுக் கொண்டால், அச்சாதகர் மலடாவார். இந்த ஒன்பது நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் காலிமனையில் வீடோ, மாளிகையோ கட்ட, பூமி பூஜை செய்து , வேலை தொடங்கினாலோ, தொலைதூரப்பயணம் மேற்கொள்ளவோ கூடாது. பூமி பூஜை செய்தால் கட்டியவீடு பாழாகும். தொலைதூரப் பயணம் மேற்கொண்டால், போனவன், போனவன் தான். திரும்பி வரமாட்டான் என்கிறது பாடல்.
         
அதேபோல், இந்த நட்சத்திரங்களில் இறந்தவர்கள் , “வீடுபேறு” எனும் மோட்சநிலையை அடையாமல், வழிமாறி நரகப் பயணம் மேற்கொண்டு விடுவார்கள். ஒருமனிதனின் பிறப்பிற்கும், வாழ்க்கைக்கும் நட்சத்திரங்கள், கிரகங்கள், ராசிமண்டலங்கள் மூலம் ஒளி காட்டிய நம் முன்னோர்கள் நம் இறப்புக்கும், அதன்பின் நிகழப்போகும் பூடக நிலைக்கும் வழிகாட்டுகின்றனர்.

இப்போது “அழகு ரோகிணி” யை ஏன் இந்த இறக்கக் கூடாத நட்சத்திரங்களில் சேர்த்தார்கள் என்பதைக் காண்போம்.

வானில் உள்ள நவக்கிரகங்களில் சந்திரன் மட்டுமே, சூரியனிடமிருந்து ஒளியை வாங்கி பூமிக்குப் பிரதிபலிக்கும். ஜோதிடம் தேர்ந்தெடுத்துக் கொண்ட 27 நட்சத்திரப் பாதைகளில் தான், ஒவ்வொரு கிரகமும், தங்களுக்குள் நிர்ணயிக்கப் பட்ட கால அளவுகளின் படி சுழன்று கடந்து செல்கின்றன. நாம் வாழும் பூமியின் துணைக்கோள்தான் இந்த சந்திரன். இது பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகமாகும். பூமிக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்டத் தூரம் 3, 64, 400 கிலோமீட்டராகும். ஒரு அமாவாசைக்கும், மறு மறு அமாவாசைக்கும் இடைப்பட்ட நேரம் 709 மணி ஆகும். இதேபோல, மெளர்ணமி காலங்களில் பூமி நோக்கி இருக்கும், சந்திரனின் நிலப்பகுதியின் ஈர்ப்புச் சக்தியோடு, பூமி ஈர்க்கப்படும். அப்போது, ஏற்படும் இழுவைத்திறன் சமன்பாட்டால், பூமியில் இருக்கும் நீர், சந்திர இழுப்பில் இழுபட, பூமியின் ஈர்ப்புவிசையால், கடல் நீரைத் தன்னோடு இழுக்க, இந்த ஈர்ப்புப் போட்டியால் பெளர்ணமி காலத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்படுகிறது.

நம் த்மிழர்கள் நிலவை பலபெயரிட்டு அழைப்பதைப் போல, ரோமானியர்கள், “லூனா” என்றும், கிரேக்கர்கள், “ஆர்ட்டமிஸ்” என்றும் அழைகின்றனர். சந்திரனில் மிக மெலிதான வளிமண்டலம் உள்ளது. இதன் பகல் பொழுதின் வெப்பநிலை 100  டிகிரி செல்சியஸ். இரவுநேர வெப்பநிலை 173 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

கிரகங்களின் வரிசைப்படி  சூரியன், பூமி,  சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி, என்கிற வரிசைப்படி அடுத்தடுத்து கிரகங்கள் நிற்கின்றன. இதில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும், பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் கிரகணம் ஏற்படுகிறது. அதாவது சூரியனின் ஒளி பூமியின் மேல் விழ, பூமியின் நிழல், சந்திரனின் மேல் விழ கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிலை ஏற்பட சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும், ஒரே நேர்கோட்டில் வரவேண்டும். அப்போது தான் முழுச் சந்திரக் கிரகணம் ஏற்படும். இல்லையென்றால், பாதி, அல்லது கால்பங்கு சந்திரக் கிரகணம் ஏற்படும்.

வளர்பிறை நிலவும், தேய்பிறை நிலவும் நிலவின் இயக்கத்தைப் பொறுத்தே நடக்கிறது. இயற்கை விதிப்படி வளர்பிறை நிலவைக் காண, மாலைவேலையில் மேலைவானத்தில் காணலாம். அதே போல் அதிகாலையில் கீழை வானத்தில் தேய்பிறை நிலவைக் காணலாம்.

சூரியனிடமிருந்து சந்திரன் ஒளியைப் பெறுகிறது. அந்த ஒளிக்கதிர்கள் பிறையின் முனைகளைச் சேர்க்கும். அந்த நேர்கோட்டு செங்குத்தாகவே இருக்கும். ஆனால், நாம் நேர் கோட்டை பார்க்கவில்லை. நாம் வளைவு கோட்டையே பார்க்கிறோம்.

காலபுருடனின் நான்காம் ராசியாக கடகம் உள்ளது. இது சந்திரனின் வீடாகும்.இது நீர் ராசியாகவும், சரராசியாகவும் உள்ளது. சரராசிக்குப் பதினோராம் வீடான ரிடபமே, சந்திரனின் உச்ச வீடாகவும் உள்ளது. இந்த வீட்டில் தான் ரோகிணி நட்சத்திரம் உள்ளது. ஆனாலும், சந்திரனுக்கு பாதகத்தைத் தரும் வீடாக ரிடபம் உள்ளதாகவும் கூறலாம். இந்த வீடே சந்திரனுக்கு மூலத்திரிகோண வீடாகவும் உள்ளது. கடகத்தை லக்கினமாகப் பெற்றவர்களுக்கு ரிடப அதிபதியான சுக்கிரன் கடும்பாதகத்தையே செய்வான்.

காலபுருடனின் மாரகத்தைக் கூறுமிடமாக ரிடபம் வருவதாலும், ரிடபத்தில் இருக்கும் கார்த்திகை, மிருகசீரிட நட்சத்திரமும் இறப்பு தோஷ நட்சத்திரமாகவே வருவதால், இவர்களுக்கு இடையில் உள்ள ரோகிணியும் இறப்பு தோஷ நட்சத்திரமாகக் கருதப்படுகிறது.  

என்னதான் விஞ்ஞான விளக்கமும் ஜோதிட விளக்கமும் தந்தாலும், புராண விளக்கங்களுக்கு இணையாக வேறு எந்த விளக்கமும் வராது.

தட்ஜாபிரஜாபதி எனும் மன்னனுக்கு 60 பெண்மகவுகள் இருந்தனர். தந்தையின் அனுமதி பெறாமல் மூத்தவள் தாட்சாயிணி, உலகைப் படைத்தவனான சிவபெருமானை மணந்து கொள்கிறாள். காசியபர் 13 பெண்களை மணந்து கொள்கிறார். ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரப் பெண்களை பேரழகு மிக்க சந்திரன் மணந்து கொள்கிறான்.

இவர்களோடு வாழ்ந்து வரும் சந்திரன், தன் அழகுக்கு இணையான ரோகிணியுடன் அதிகமான நேசபாசத்துடன் மையல் கொண்டு அவளுடன் மட்டுமே கூடி சுகித்து வாழ்ந்து வந்தான். தங்கள் எல்லோரையும் மணந்து எல்லோரிடமும் சரிசமமாக வாழ வேண்டிய, தங்கள் கணவன், ரோகிணியிடம் மட்டும் கூடிவாழ்வதைக் கண்டு மனம்வெதும்பிய மற்ற 26 நட்சத்திரப் பெண்களும் தங்கள் தந்தையான தட்ஜா பிரஜாபதியிடம் முறையிட்டனர். எங்கள் எல்லோருக்கும் கணவனான சந்திரன் எங்களோடு வாழாமல், எங்கள் உடன் பிறந்தவளான ரோகிணியிடம் மட்டும் வாழ்ந்து இன்பம் துய்த்து, எங்களை இன்னும் கன்னியாகவே வைத்துள்ளான். இவனுடன் இங்கு இருப்பதை விட, பிறந்த வீட்டிலே வாழ்ந்து மடிந்து விடுகிறோம் எனக் கூட்டாக்கூறி, கண்கள் கலங்கி அழுவதைக்கண்ட தட்ஜாபிரஜாபதிக்கு கண்கள்  சிவக்க, மீசைத் துடிக்க, சந்திரனை காணப் புறப்பட்டார். சந்திரனின் தவறான வாழ்க்கை முறையினை எடுத்துக் கூறி, தன் மகள்கள் அனைவரிடமும் சமமாக வாழும் படி வேண்டினார்.

அதற்கு சந்திரன் மிக அலட்சியமாக, தன் மாமனார் தட்ஜா பிரஜாபதியிடம், “ என் அழகுக்கு நிகரானவ்ள் ரோகிணி ஒருத்தியே. அதனால் அவளோடு மட்டுமே வாழ்வேன். மற்ற 26 நட்சத்திரப் பெண்களுடன் இணைந்து வாழ என்னால் முடியாது”. என்றான். சந்திரனின் எடுத்தெறிந்து பேசியதைக் கேட்ட தட்ஜா பிரஜாபதிக்கு கோபம் தலைக்கு ஏறியது. உலகைக் காக்கும் சிவப்பெருமானுக்கே சவால் விட்டவராச்சே. உன் அபரிதமான அழகுதானே, தன் மகள்களின் வாழ்வை சீரழித்துவிட்டது. அந்த அழகே இல்லாமல் செய்து விட்டால், சந்திரனின் ஆணவமும் அழியும் என்று நினைத்தவர், “ நிரந்தரமில்லா அழகின் மாயத்தில் சிக்கியுள்ள சந்திரா, உன் அழகு நாள் ஒன்றுக்கு ஒரு கலை வீதம் குறையக் கடவது” என சாபம் தருகிறார்.

அதுவரை எப்போதும் நிறைமதியாக இருந்தவன், இந்த சாபத்தால், ஒரு நாள் கழிந்ததும், ஒரு கலைவீதம் இழக்க, சந்திரனின் தேஜஸ் தேய ஆரம்பித்தது. கொஞ்சம், கொஞ்சம் கருத்து வரும் சந்திரன், தன் அழகையெல்லாம் இழக்கப்போகும் கடைசி நாளில், தன் மூத்த சகலையும், தட்ஜாபிரஜாபதியால் மருமகன் என அங்கிகரிக்கப் படாத, முக்கண்ணனான சிவபெருமானையும், தாட்ஜாயினையையும் சந்தித்தான். அவனின் கருத்த உருவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது வரை நடந்த விபரம் அத்தனையும் ஒன்று விடாமல் சந்திரன் ஒப்புவித்தான்.

அதன்பின் சந்திரன் மேல் இருந்த சாபத்தை நீக்கி, சிவபெருமான் அருள்பாலித்தார். அன்று முதல் நாமொன்றுக்கு ஒரு கலைவீதம் வளர ஆரம்பித்தான். இப்படி தேய்ந்து வரும் காலம், தெய்பிறை காலமாகவும், வளர்ந்து வரும் கால வளர்பிறைக் காலமாகவும் ஆனது.

என்றுமே முழுமதியாக இருந்தவன், ரோகிணியின் மேல் இருந்த தீராத மையலால் தேய்ந்து போகலானான். இப்படி தேய்ந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொருத்  திதியாகவும் கூறப்பட்டது. அதேபோல், வளர்ந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திதியாகவும் கூறப்பட்டது. இதுவே திதிகள் உருவானக் கதையாகும்.

இப்படிதிதிகள் உருவாக ரோகிணி எனும் நட்சத்திரம் காரணமாக இருந்ததால், கிழக்கு திசைகளின் அதிபதிகளான சூரியன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களின் நட்சத்திரங்களோடு சந்திரனின் காரக நட்சத்திரமான ரோகிணியும் இணைந்து, இவைகளில் யார் இறந்தாலும், கடுமையான தோஷம் தரும்.

இப்படி சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கி மீண்டும் சந்திரனுக்கு உயிர் கொடுத்தார் சிவப்பெருமான். அதனால் பிறைச்சந்திரனை தன் தலையில் சூடிக்கொள்கிறார். இதனால் தான் சிவனுக்கு , “சந்திர மெளலீசுவர்” எனும் பெயர் ஏற்படக் காரணமாகியது.

சிவபெருமான் 26 நட்சத்திரப் பெண்களுக்கு வாழ்வளித்ததும், திதிகள் உருவாகக் காரணமாக அமைந்ததும், இரவுகாலத்தில் நிலவற்ற வானத்தைக் காண்பதற்கும், தனக்குக் கிரீடமாக சந்திரனைச் சூடிக் கொள்வதும், அமாவாசை, பெளர்ணமி எனும் அதீத ஈர்ப்புச் சக்தியை வெளிப்படுத்துவதன் மூலம் ப்லகீனமான உயிர்களை கவர்வதன் மூலம் வினைகளைச் செய்கிறான்.

சந்திரனின் மனைவி ரோகிணி, சிவபெருமானின் மனைவி தாட்சாயினிக்கு தங்கையாக இருப்பதால் சிவபெருமானுக்கு கொளுந்தியாளாக ஆகிறாள். அவளுக்கு சிவன் மாமனாகிறார்   அல்லவா?சந்திரனின் சாபத்தை நீக்கி, தன் தலையில் சூடிக்கொண்டதாலும், அதுவரை ரோகிணிக்கு கிடைத்து வந்த முழுமையான இன்பத்தை, கிடைக்கவிடாமல் செய்ததாலும், சிவபெருமான் சந்திரனை எச்சரித்து, மற்ற 26 நட்சத்திரப் பெண்களுடன் வாழவேண்டும் என அறிவுரை வழங்கி, அதன்படி சந்திரனை செயல்பட வைத்ததாலும், தன் சகலையின் சொல்படி, சந்திரனும் மற்ற நட்சத்திரப் பெண்களுடன் வாழ்ந்து வரலானான். தன் மடியே கதியென்று கிடந்த சந்திரன் எல்லா மனைவியரிடமும், ஒருநாள் தங்கிச் செல்வதைப் போல, தன்னிடமும் தங்கிச் செல்வதைக் கண்ட ரோகிணியால், தன் மாமன் சிவபெருமான் மேல் ஆத்திரம் ஏற்பட்டது. தன் கோபத்தால், எந்த விளைவுகளும் ஏற்பட்டுவிடாது என்பதை அறிந்த ரோகிணி, பூமியில் தன் நட்சத்திர சாரத்தில் பிறக்கும், அதாவது ரோகிணியில் பிறக்கும் ஆண்பெண் இருபாலரின் மாமன்மார்களுக்குக் கண்டத்தைத் தந்து விடுகிறது.

ஆய்வு.
முத்துப்பிள்ளை
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு.
ஆத்தூர். 624 701       
        ஆத்துர். வட்டம்.       
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி. 91501 06069. 8754873378

No comments:

Post a Comment