Thursday 12 November 2015

ஜோதிடத்தில் “நான்” என்பது யார்?. முத்துப்பிள்ளை. 91501 06069, 87548 73378, 89405 29429



இந்த நாள், இந்த நேரம், இந்த நொடியில், இந்த இடத்தில், பிறக்கும் என்மேல் விழும் “நான்” என்கிற குறியீடு தான் இலக்கினமாகும். பஞ்சபூதங்களின் கலவையில், “மனம்” புகுத்தப்பட்டு, ஆன்மா ஈடேற்றத்திற்கான கர்மாப்பிணைப்புகளுடன் ஜீவன் உதிக்கிறது. அண்டங்களின் அணுத் தாக்கலில், அனுதினமும் வினைகள் நடந்தேறி வருகின்றன. இயக்கம் எங்கோ நடக்க, இங்கே இயங்குதல் நடக்கிறது. கர்ப்பவாயில் இருந்து உதிர்த்து விடப்பட்டு, தொப்பூள் கொடி நறுக்கப்பட்டவுடன், நாம் அண்டத்தில் தனித்து விடப்பட்டு, கிரகவீச்சுகளாலும், நட்சத்திர வாயுக்களாலும், தாது, கனிமங்களாலும் இயங்க வைக்கப்படுகின்றோம்.

இந்த சக்தியின் வேதிக்களின் கூடுதல் குறைச்சலே நம் கர்மாக்களையும், மனதையும் ஆன்மா ஓட்டத்திற்காக ஜீவனோடு இழுத்துச் செல்கின்றன. இங்கேதான் “நான்” என்கிற இலக்கினம், காலதேவனின் அண்டத்தில் அடங்கிய பன்னிரண்டு மண்டலங்களிலும் புகுந்து வெளி வருகிறது. ஒவ்வொரு மண்டலங்களிலும், ஒவ்வொருவிதமான தாக்கங்கள் ஜீவனுக்குள் ஏற்படுகின்றன. இங்கே ஆத்மா, மனம், கர்மா மூன்றும், ஒன்றுக்கொன்று இயங்குவதும், இயங்க மறுப்பதுமான நிலை ஏற்படுவதால், “நான்” என்கிற இலக்கினத்திற்கு கிடைக்கவேண்டிய நற்பலன்கள் கிடைத்தும், இயங்க மறுப்பதால் கிடைக்காமலும் போய்விடுகின்றன.

கேந்திரம் என்கிற 1, 4, 7, 10 என்கிற இராசி மண்டலத்திலும் ,

பணபரம் என்கிற 2, 5, 8, 11 என்கிற இராசி மண்டலங்களிலும்,

ஆபோக்கிலீயம் என்கிற 3, 6, 9, 11 என்கிற இராசி மண்டலங்களிலும்,

துர்ஸ்தானம் என்கிற 12 என்கிற இராசி மண்டலத்திலும்,

ஆத்மா, மனம், கர்மா என்கிற மூன்றையும் இழுத்துச் செல்லும் போது ஜீவன்பெறப்போகும், இலாப, நட்டங்களைச் சொல்வதுதான் ஜோதிடம்.

உங்களின் இலக்கினதிபதி ஆண்கிரகமாகி இலக்கினத்திலே இருந்தால், உடல்பலமுள்ளவன், தன் சுயபுத்தியால் இயங்கக்கூடியவன், தனக்கென கொள்கை கோட்பாடுகளைக் கொண்டவன், மனதில் சஞ்சல மிக்கவன், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்டவன். பிறர் மனை நோக்குபவன்.

உங்களின் இலக்கினதிபதி இரண்டிலோ, பதினொன்றிலோ இருந்தால், அதிக வருமானம் கொண்டவன். படித்தவன். பல கலைகள் கற்றவன். நல்லது, கெட்டது அறிந்தவன். தன்மையான குணம் கொண்டவன். மனதுக்குள் அறச்சிந்தனைகள் மிகுந்த, மனிதத் தனமையுள்ளவன். வாழும் மனிதர்களில் உதாரணமாக, இவைச் சொல்லலாம்.

உங்களின் இலக்கினதிபதி மூன்றிலோ, ஆறிலோ இருக்க, தரத்திலும், அறிவிலும், பணத்திலும் எவ்வளவு பெரிய இடத்தில் இருப்பவனையும், குறிபார்த்து தாக்கி அழிப்பதில் வல்லவன். நல்லறிவும், நற்சுகமும், ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் வாழும் நிலையும் உருவாகும்.

உங்களின் இலக்கினதிபதி நான்கிலோ, பத்திலோ இருக்க, பெற்றவர்கள் அன்பும் அரவணைப்பும் அதிகமிருக்கும்.சகோதர்கள் ஆதரவும், தொழில் மேன்மையும் பெருகும், உடலழகும் உள்ளவனாகவும் இருப்பான்.

உங்களின் இலக்கினதிபதி ஐந்தினில் இருக்க, கவுரவம் மிக்கவன். அதிக மக்கட்பேறு கொண்டவன். முதல் குழந்தை உடல்நலம் பாதிப்போ, இழப்போ ஏற்படும். அதிக கோபம் உள்ளவனாவன். அரசு ஆதரவும், அதில் பணியும் ஏற்படும்.

உங்களின் இலக்கினதிபதி ஏழாமிடத்தினில் இருக்க, மனைவி நட்டமும், விரக்தியுள்ளவனும், அடிக்கடி தேசாந்திரம் செல்பவனாகவும், வறியவனாய் இருப்பான். ஆனால், சுபக்கிரகம் பார்த்தால் நன்மையும், பாவக் கிரகங்கள் தீமையானப் பலன்களும் கிடைக்கும்.

உங்களின் இலக்கினதிபதி எட்டு, பனிரெண்டாமிடங்களில் இருக்க, மறைவான சாத்திரங்களை நிறைவாகக் கற்றவனும், சிற்பவித்தைக் கற்றவனும், அதிகக் கோபமுள்ளவன், பிறமகளிரை விரும்பிப் புணர்பவனாக இருப்பான்.

உங்களின் இலக்கினதிபதி ஒன்பதாமிடத்தினில் இருக்க, பாக்கியம் மிக்கவன், எல்லோரிடமும் அதிகாரம் மிக்கவன். இறைபக்தி மிக்கவன், நாவன்மை மிக்கவன், மக்கட்செல்வமிக்கவன்.

உங்களின் இலக்கினத்திற்கு இரண்டுக்குடையக் கிரகம், இரண்டாமிடத்தினிலே இருந்தால், பார்க்கிறப் பொருட்களின் மேலும் ஆசை கொண்டு, அதை அடைய முயற்சி எடுப்பான். தன்னைப் போல் எவனுமில்லை என்கிற கர்வம் கொண்டவன். ஒன்றுக்கும் மேற்பட்டப் பல பெண்களை அடைவான், அல்லது அவர்களோடு குடும்பம் நடத்துவான். புத்திரர் இருக்காது. ஒருவேளை இருந்தாலும் உதவாக்கரையாக இருப்பான்.
 
இரண்டுக்குடையவன் மூன்றாமிடமான வீரியஸ்தானத்திலும், நான்காமிடமான சுகஸ்தானத்திலும் இருந்தால், வெற்றிக்கு மேல் வெற்றியை அடைபவனாகவும், அறிவுத்திறன் கூடியவனாகவும், கஞ்சத்தனம் மிக்கவன், தன் முயற்சி இருந்தால் போதும், வாழ்வில் மாற்றங்களைக் காண முடியும் என்கிற நம்பிக்கை கொள்வதால், இறைசக்தி மேல் பற்று இல்லாதவனாகவும் இருப்பான். அடுத்தவன் மனைவியின் மேல் வெறி கொண்ட புணர்ச்சி ஆசை கொண்டவன்.

இரண்டுக்குடையவன் ஆறில் இருந்தால், பகைவர்களால் செல்வ இழப்பைச் சந்திப்பார். எதிரிகளிடம் பணிந்து ஊதியம் பெறும் நிலையும், விருப்பமே இல்லாமல் அலுவல் செய்யும் நிலையும் ஏற்படும். மலத்துவாரங்களிலோ, அடிவயிறு, மற்றும் நெஞ்சுப் பகுதியிலும் வலி அல்லது நோய் இருக்கும்.

இரண்டாமதிபதி ஏழாமிடத்தினில் இருந்தால், மருத்துவமுறைகள் தெரிந்தவன். பிறர் மனை நோக்குபவன். இவனைப் போலவே இவன் மனைவியும் இருப்பாள். அன்னையின் மேல் அவதூறு கருத்துக்களும் இருக்கும்.

இரண்டாமதிபதி எட்டாமிடத்தினில் இருந்தால், சொத்துக்கள் சேரும். பூமி, செல்வம் உள்ளவன். மனைவினால் அளவான சுகம் கூட இருக்காது. மூத்த சகோதரனால் ஆதரவிருக்காது.

இரண்டாமதிபதி பாக்கியஸ்தானமெனும் ஒன்பதிலோ, இலாபஸ்தானமெனும் பதினொன்றிலோ இருக்க, செல்வச்செருக்குடன் வாழ்பவன். அதிகமாக தானதர்மங்களில் ஈடுபடுபவன். தன் வாழ்நாள் முழுதும் சுகபோகமாக வாழ்பவன். உடல் உறுதியுள்ளவனாக இருந்தாலும், இளவயதிலே நோய் தாக்கம் அதிகமிருக்கும்.

இரண்டாமதிபதி ஜீவனஸ்தானமெனும் பத்தினில் இருந்தால், காம எண்ணம் அதிகமிருக்கும். சமூகசெல்வாக்குடையவனும், அதிகம் படித்தவனும், அனுபவமும் மிக்கவனும், பல பெண்களுடன் உல்லாசமாக இருப்பவனும், மக்கட் செல்வம் குறைவாய் பெற்றவனுமாகவும், அதிகச் செல்வங்களைக் கொண்டவனுமாக இருப்பான்.

இரண்டாமதிபதி பனிரெண்டாமிடத்தில் இருந்தால், அன்புடையவன், இனியதன்மை கொண்டவன், வறுமை உள்ளவன். அரசாங்கத்தால் ஊதியம் பெற்று அதனால், ஜீவனம் நடத்துபவனாகவும் இருப்பான். தன் கொள்கை எதுவோ, அது மட்டுமே சிறப்பானது என்று இறுமாப்புடன் இருப்பான்.


இரண்டாமதிபதி இலக்கினத்திலும், ஐந்தாமிடத்திலும் இருந்தால், தன் குடும்ப மேன்மைக்காக ஓடாய் உழைப்பான். அதிக செல்வங்கள் உடையவன். பிறர் முயற்சிக்கு பேருதவி புரிபவனாகவும் இருப்பான். ஆனால், இவன் பழிபாவம் சுமந்தவனாக வாழ்ந்து முடிப்பான்.   

Thursday 5 November 2015

பருவம் படுத்தும் பாடு. 1

  
நான் பிறந்தேன். வளர்ந்தேன். படித்தேன். பருவம் வந்தது. திருமணம் முடித்தேன். குடும்பத்தில் இருந்தேன். குழந்தை பிறந்தது. அவன் வளர்ந்தான். படித்தான். பருவம் வந்தது. திருமணம் முடித்து வைத்தேன். பின் அவன் குடும்பம் நடத்தினான். குழந்தை பிறந்தது. பின் அதுவும் வளர்ந்தது .. .. .. .. இந்த சக்கரம் போன்ற வாழ்க்கையின் முடிவுகள் என்பது இவைகள் தானா? இதற்குள் தான் மனிதன் ஏதோவொன்றை தேடிக் கொண்டே இருக்கிறான்.

இந்த சக்கர வாழ்க்கை அனைவருக்கும் ஒன்றுபோல் பலன் கிடைத்து விடுகிறதா? என்றால், அதுவும் இல்லை. ஒருவனுக்குப் பிறப்பே சரியில்லை. இன்னொருவனுக்கு வளர்ப்பு சரியில்லை. சிலர் பருவம் வருவதற்கு முன்பே, “பழுத்து” விடுகின்றன. பலருக்கு ஆசையிருக்கும். வெளிப்படுத்த தெரியாமல், தனக்குள்ளே புதைத்துக் கொள்வார்கள். பலருக்கும் இணை தேடும் ஆசையும் இல்லாமலே இருக்கும். பலருக்கு திருமணமில்லை. முடிந்தாலும் விவாகரத்து. வாழ்ந்தே இருந்தாலும் வறுமை. வேண்டாம் என்பவர்களுக்கு வரிசையாய் பிள்ளைகுட்டிகள். பணத்தை வைத்துக்கொண்டு தவமிருப்பவர்களுக்கு, “டெஸ்ட் டியூப் பேபி”. சொத்து உள்ளவனுக்கு வளர்ப்புப்பிள்ளை. அதுவுமில்லாதவனுக்கு காணுகிற குழந்தைகள் அனைத்தும் தன் பிள்ளைகள்.

ஆம். நண்பர்களே! நாம் ஒரு சில பாவகங்களை மட்டும் கையிலெடுத்து, அதை பற்றிய சிறு விளக்கங்களை தர இருக்கிறேன்.

குடும்ப வாழ்க்கையில் முழுமையாய் ஈடுபட பல பாவங்கள் உறுதுணை செய்ய வேண்டும் என்றாலும், முக்கியமாக மூன்றாம் பாவகமும், அதன் அதிபதியும் பலமுடன் இருக்க வேண்டும். ஒருவர் மற்றவர் மேல் ஆதிக்கம் செலுத்தும் பாக்கியத்தை உடையவராக அடையாளம் காட்டும் இடமும் அதுதான். ஒரு ஆணின் வீரியம், பெண்ணின் வீடான ஏழாமிடத்திக்கு, ஒன்பதாமிடமாக (பாக்கிய ஸ்தானம்) வருவது, ஒருவருக்கு வீரியம், ஜெயம். அவரின் இணைக்கு அது பாக்கியம். என்று கூறி, அடுத்த தொடரில் சந்திப்போம். நன்றி.

இந்த இகவாழ்க்கையில் புதிதாய் எதுவும் இல்லை. புதிதாய் தெரிந்தாலும், அது புதியதின் மறு உருவாக்கமாகத்தான் இருக்கும். எந்த வினைகளும் உங்களுக்குள் இருந்துதான் உருவாகி பரிமளிக்கிறது உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும், பிரபஞ்ச வெளியிலும் இருப்பதால், உங்களின் ஜாதகத்தில் கிரக, நட்சத்திரப் பலத்தைப் பொறுத்தே  கிடைக்கின்றன. உங்களின் சூரியன் பலப்பட்டு இருந்தால், ஆளுமையும், அதிகாரமும் செல்லுபடியாகும். இல்லையென்றால், “புழு” கூட எதிர்த்து நிற்கும்.

இலக்கினம் எனும் “எனக்கு” எதிரே, (அதாவது இலக்கினத்திற்கு ஏழாமிடம்) என் சமூகமும், அந்த சமூகத்தில் இருப்பவர்களையும் காண்கிறோம். அதில் இருந்து வரும் “பெண்ணே” என்னை ஆள்பவளாக வருவாள். சமூகத்தின் பிரதிநிதிதான் மனைவியாக வருவதன் மூலம், என்னைப் பற்றிய மதிப்பீடுகளும் சமூகத்திற்கு தெரியவரும்.

“நான்” என்கிற இலக்கினதிபதியும், சமூகப் பிரதிநிதி என்று சொல்லும் ஏழாமதிபதியான “மனைவியும்” ஒன்றுக்கொன்று உறவாகவோ, உறவானவர்களின் இல்லங்களில் இருப்பதோ, நல்லோர் பார்வை பெறுவதோ. கணவன், மனைவிக்குள் இணக்கமான சூழலை உருவாக்கும். மாறாக, ஒன்றுக்கொன்று பகை பெற்று, பகைவர் வீட்டினில் அமர, அல்லது பாவர்கள் காண வாழ்க்கை முழுதும் பொருந்தி வாழாத தம்பதிகளாக வாழ்ந்து மடிவர்.

உங்களின் இலக்கினம் மகரமானால், அதன் அதிபதி சனி என்பவர் “நீங்கள்” தான். அதேபோல், மகரத்திற்கு (உங்களுக்கு) ஏழாமிடமான கடகம், உங்களின் சமூகத்தில் இருந்து வரும் சந்திரன்  “மனைவியைக்” குறிக்கும் அல்லவா? இப்போது, இவர்கள் இருவரும் இணைந்தால் தானே இல்லறம் சிறக்கும். இவர்கள் பாவர் பார்வை, சேர்க்கை அல்லது பாவர் வீடுகளில் அமர்வது, பாவர்கள் சாரம் பெறுவது என்று இல்லாமல், நல்லோர் சேர்க்கை, பார்வை, சாரம், அல்லது நல்லோர் வீடுகளில் இணைவது போன்ற நிலைகள் இருந்தால் மட்டுமே, இல்லறம் சிறக்கும். இல்லையென்றால், “கட்டிய கடனுக்கு” வாழ்க்கையை நகர்த்த வேண்டி வரும்.

சனியென்பவர் “கர்மா” வழிநடப்பவர். சந்திரன் என்பவர், “மனம்” போன போக்கில் வாழ்பவர். கர்மா நிலையானது. சலனப்பட்டு அலைவது மனமாகும். கர்மா நிர்ணயிக்கப்பட்டதை அனுபவித்து தீர்ப்பது. ஆனால், மனம் அப்படியல்ல. காண்பதை எல்லாம் அனுபவிக்க, பின்னே செல்வது.

இதேபோல், செவ்வாய் - சுக்கிரன், புதன் - குரு, சூரியன் - சனி, சந்திரன் - சனி என்று ஒன்றுக்கொன்று எதிர்மறையான கிரகங்களே வாழ்க்கைத் துணையாக வந்து வாய்க்கும். இந்த எதிர்மறைக் கிரகங்கள் அமர்ந்திருக்கும் இடங்களைப் பொறுத்தே வாழ்க்கையின் நிம்மதி பொதிந்திருக்கும்.        

நாம் நிம்மதியைப் பற்றி சிந்திக்கும் போது, மனதைச் சொல்லாமல் இருக்க முடியாது. மனமென்று ஒன்று இருப்பதால்தான் அவன் மனிதனாக இருக்கிறான். அது வெறுமனே கிடந்தால், அவன் ஞானி. கண்ட குப்பைகளையும் மனதுக்குள் அள்ளிப் போட்டிருந்தால், அவன் ரோகி.

இலக்கினத்திற்கு நான்காமிடம் என்பது மனதைக் குறிக்குமிடமாகும். அங்கே, ஜாதகரின் அசையும் சொத்துக்களையும், கையிருப்புப் பணத்தையும் சொல்லும், சொந்த ஊரையும், உறவுகளையும், குறிப்பாக தாயைப் பற்றியும் அறியுமிடமாகும். அதுவே, இலக்கினத்திற்கு ஏழாமிடமான மனைவி ஸ்தானத்திற்கு, நான்காமிடம் என்பது மனைவியின் மனதைச் சொல்லும் இடமாகும்.

உங்களின் (ஆணாகிய)  நான்காமிட அதிபனும், உங்களின் (ஆணாகிய) பத்தாமிட அதிபனும், இலக்கினத்திற்கு உறவாகவும், நட்பு, சம, உச்ச, ஆட்சியதிபர்களின் சாரமும் பெற்று உகந்த இடத்தினில் அமரவேண்டும். இவர்கள் (4+10) ஒன்றுக்கொன்று முரண்பாடுடைய கிரகங்களாக இருந்தால், கணவன், மனைவிக்குள் வேற்றுமை வளர்ந்து பிடித்தமில்லாமல் வாழ்வார்கள்.

உங்களின் (ஆண்) தாயாரைக் குறிக்கும் நான்காமதிபனும், உங்களின் மனைவியைக் குறிக்கும் ஏழாமதிபனும், உங்களின் தொழிலையும், உங்களின் மனைவியின் மனதைக் குறிக்கும் பத்தாமதிபனான மூவரும் உறவாடி நிற்க, மாமியார், மருமகள் பிரச்சனையில்லை. உங்களின் தொழிலும், வினைகளும் சிறப்பாக நடக்கும். அதேபோல், உங்களின் உறவினர்களுக்கும், உங்கள் இல்லத்தரசிக்குமான பாசப்பிணைப்புகளும் அதிகமாக இருக்கும். உங்களின் கையிருப்பை கரைக்காத மனைவியாகவும் வருவாள்.    
தொடரும்.
முத்துப்பிள்ளை. 91501 06069, 87548 73378, 89405 29429


மனதின் முடிச்சுகள்.



இக்கட்டுரை கடந்த இரண்டு நாட்களாக, எனக்குள் கேட்கப்பட்ட கேள்வியின் விளைவாகக் கிடைத்தப் பதில்கள் தான் இக்கட்டுரை.

மனம் (mind) என்பது என்ன? அது ஜோதிடத்தில் எந்த பாவகத்தில் இடம் பெறுகிறது. இதைப் பற்றி சிந்திக்கும் போது, ஜோதிடம் மட்டுமே மனதைப் பற்றிப் பேசவில்லை. நம் இலக்கண, இலக்கியங்களும், வேதாந்தமும், புத்தரின் தம்மபதமும், மற்றும்  அறிவியலும் மனதைப் பற்றி விரிவாக விரித்துரைத்துள்ளனர்.

மனம் என்பது என்ன? அதற்கு உரு உண்டா? அது நம் உடலில் எங்குள்ளது?

மனம் என்பது நம் சிந்தனை, நோக்குதல், தன் உணர்ச்சி வெளிப்படுத்துதல், உறுதி, கற்பனை போன்றவற்றில் இருந்து வெளிப்படுகின்ற அறிவு, (intellect)  மற்றும் உணர்வு சார்ந்த அமைப்புகளின் தொகுப்பாகும்.

மனித இயல்புகளில் எவையெவையெலாம் மனம் என்பதை உருவாக்குகின்றன என்பதே ஒரு விவாதப் பொருளாகும். சிலர் ஞாபகம் வைத்துக் கொள்வதையும், அதையொட்டி தர்க்கம் செய்வதையும், அறிவின் மேனிலை செயல்பாடுகள் என்றும் கூறுகின்றனர். இதன்படி காதல், வெறுப்பு, பயம், களிப்பு, மகிழ்ச்சி போன்ற உணர்வுகள் உருவாவதாகச் சொல்லுகின்றனர். வேறுசிலர், பகுத்தறிவும், உணர்வும் என்றும் கூறுகின்றனர். இதைத்தான் தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியத்தில், “ஆறாம் அறிவே மனம்” என்கிறார். அதாவது புலன்களோடு பகுத்தறியும் அறிவே மனம் என்கிறார் தொல்காப்பியர்.

இதையே நம் ஐயன் திருவள்ளுவரும், தனது “சிற்றினம் சேராமை” எனும் பொருட்பால் 48 வது அதிகாரம் முழுக்க மனதைப் பற்றியே கூறியுள்ளார்.

வேதாந்த மார்க்கத்தில், மனம் என்பதை நான்கு வகையாகப் பிரித்துள்ளனர். அவைகள்  மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகும்.

மனம்;

எதையும் உறுதியாக தீர்மானிக்க இயலாமல் போனால் அந்த நிலைக்கு குழம்பிய மனநிலை என்பர்கள். ஒருவன் சந்தேகப் பட்டால் எழும் நிலைக்கு மனம் என்று பெயர்.

சித்தம்;

நம் வாழ்வில் பார்த்தவைகள், கேட்டவைகள், உணர்ந்தவைகள் என நமக்குக் கிடைக்கும் அனுபவங்களை சேமிக்கும் நிலையமாக திகழ்வதை சித்தம் என்கிறோம்.

புத்தி;

“இது என்ன பொருள்” என பகுத்தறியும் நிலைக்கு புத்தி என்று பெயராகிறது. இதையெல்லாம் எப்போது அறிய முடியாமல் போகிறதோ, அப்போது புத்தி தடுமாறி, சித்தம் கலங்கியது என்று அர்த்தமாகிறது.

அகங்காரம்;

இந்த மூன்று நிலைகளிலும் (மனம், சித்தம், புத்தி) அனைத்தையும் அறிந்தபின் உருவாவது “நான்” என்கிற உணர்வுக்கு, மன அகங்காரம் என அழைக்கப் படுகிறது.

“பூட்டைத் திறப்பது கையாலே- நல்ல
மனம் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே- இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே!” என்றார் மகாகவி.

“மனம் அலை பாயக் கூடியது. நிலையற்றது. நினைத்த இடத்திற்கு செல்லக் கூடியது. மனதை கட்டுப் படுத்துவது கடினம். ஆனால், கட்டுப்படுத்துவது நல்லது. கட்டுப்படுத்தப்பட்ட மனம் இன்பத்தின் உறைவிடமாகும்.” என்கிறார் புத்தர்.

இதுபோல பலரும் மனம் என்கிற “வஸ்து” இருப்பதாக சொன்னால், அதற்கு “உரு” வேண்டுமே! உருவமில்லாத ஒன்றை காற்றைப் போலவும், கடவுளைப் போலவும், ஓளியைப் போலவும், ஒலியைப் போலவும் உணர்வால் தான் அறிய முடியும் அல்லவா? அந்த உணர்வில் ஏற்படும் சலனம் தான் மனமாகும். அது நிலையற்றது. ஆனால், சக்தி மிக்கது. மனதை அடக்கியவனை விட, அதற்கு அடங்கியவன் தான் அதிகம்.

இந்த மனதைப் பற்றி விஞ்ஞானமும் ஆய்வு செய்தது. அது மனிதன் இதயத்தின் கீழோ, அல்லது மூளையின் அடிப்பகுதியிலோ இருக்கலாம் என்கிறது.

சகல வாழ்வியல் நுட்பங்களையும், உடலியல் கூறுகளையும், அங்க அளவீடுகளையும் வெளிப்படுத்தும் ஜோதிடத்தில் மனம் என்பது குறீயீட்டுச் சொல்லாக இல்லாமல், அது தனிமனித வாழ்வின் போக்கையும் தீர்மானிப்பதாக உள்ளது.

காலதேவனுக்கு உயிர் இருப்பதால் தான், ஆத்மாவும், அதையொட்டி மனமும், கர்மாவும் இயங்க முடியும். இலக்கினத்தில் இருந்துதான் ஒவ்வொரு பாவமும் இயங்கும். அதாவது, இலக்கினம் என்பது இரயில் எஞ்ஜினைப் போன்றது. மீதமுள்ள பதினொரு இராசிகளும், எஞ்ஜினில் இணைக்கப்பட்ட இரயில் பெட்டிகளாகும். எஞ்ஜின் நன்றாக இருந்தால்தான் பெட்டிகளும் குறிப்பிட்ட பாவக வேலைகளை சரியாகச் செய்யும்.

அதனால், இலக்கினமும், இலக்கினதிபதியும் ஒவ்வொரு பாவகத்திலும் தன் பங்கைச் செலுத்தும். நம் ஜோதிட சாத்திரத்தில் மனதைக் குறிக்கும் கிரகமாக சந்திரனைக் குறித்துள்ளனர். இவர் நிலையற்று, தேய்வதும், வளருவதுமாக இருநிலைகொண்டும் உள்ளதாலும், நம் மனதில் அடிக்கடி மாற்றங்களைத் தருவதாலும் சந்திரனே காரகனாகிறான்.

என் நண்பர் கூறியது போல், “தன்முனைப்பும், வெற்றிபெற வேண்டிய வீரியம் இல்லையென்றால், மன ஒருமைப்பாடும், மன தைரியமும் இருக்காதே” என்பதைப் போலவும்.

காலதேவனின் நான்காம் பாவகம் மனதுக் காரகனான சந்திரனின் வீடாக இருப்பதால், அங்கே மனதின்  வாடையும்” இருக்கும் என்பதைப் போலவும்,

விதி, மதி, கதி என்கிற மூன்று நிலைகளும், ஒரு மனிதனை இயக்கும் சக்தியாக இருக்கும்.

மனம் என்பது இரண்டு நிலைகளைக் கொண்டது. அது மேல்மட்ட மனம் என்றும், ஆழ்மனம் என்றும் உள்ளது. அலைபாயக் கூடியது மேனிலையாக உள்ளது. அது நீரின் மேல்மட்டத்தைப் போன்றது. “ஆழித் துரும்பெனவே அங்குமிங்கும்” என்கிற இலக்கியப் பாடலைப் போல, மனம் அலை பாயும். அது காலதேவனின் நான்காமிடமாகும். 

காலதேவனின் மதிநுட்பத்தையும், மதி மயங்குதல், புத்தி, ஆழ்ந்த ஞானம், ஆழ்ந்த சிந்தனைகளைக் குறிக்குமிடமான ஐந்தாமிடமும் மனதின் காரகங்களை தனக்குள் வைத்திருப்பதால், நீரின் அடியாளத்தைப் போல அமைதியாக சலனமற்று, ஆழ்மனமாக அமைந்திருக்கும்.

எந்த பாவகமும் நல்ல நிலையில் பலன் தரவேண்டும் என்றால், உயிர், ஆன்மா, மனம், கர்மா இவைகள் தொடர்பு அவசியம், உங்கள் ஜாதகத்தில் பலம்பெற்று இருக்கவேண்டும்.

சுருக்கமாகச் சொல்லப் போனால், மனம் என்பது, பனிரெண்டு பாவகங்களிலும் தன் வேலையை சரியாக செய்து வரவேண்டும். இதில் எந்த முரண்பாடுகளும் இருக்கக் கூடாது.

முத்துப்பிள்ளை. 91501 06069, 87548 73378, 89405 29429.







Sunday 1 November 2015

மனிதனின் மரணநாளின் மர்மங்கள். 6. முத்துப்பிள்ளை.



ஒருவர் எந்த நட்சத்திரத்தில் இறந்தாலும், அந்த நட்சத்திரத்தில் இருந்து, கார்த்திகை மாத நட்சத்திரம் வரை, இடையில் எத்தனை நாட்கள் உள்ளதோ, அத்தனை நாட்களும் விளக்கேற்றி, பத்தி சூடம் எறியவிட்டு அந்த ஆத்மா இறைவனிடம் சேர வேண்டுவார்கள்.
மறைத்திரு, மறைமலை அடிகள் எழுதிய, “ மரணத்தின் பின் மனிதன் நிலை” என்கிற நூலில் இறந்தோருக்கு திவசம் கொடுக்கும் விதத்தைக் கூறியுள்ளார். “திவசநாளில்” அற்ப ஆகாரம் உண்டாவதன்றி, நாள் முழுவதும் உபவாசம் இருந்தாவது, தலைழுழுகி, சுத்தமான ஆடை அணிந்து, தாமே பொருள் தேடி உண்ணமாட்டாத கூன், குருடு, நொண்டி, சப்பாணி, நோயாளி, முதலியோருக்கு, அன்னமிட்டு, ஆலயத்திற்கு காலை, மாலை எனும் முப்பொழுதும் சென்று இறைவனிடத்தில் மனதை பதியவைத்து, என் ஆண்டவனே! என் அப்பனே! என் அருட்கடலே! இறந்துபோன என் மூதாதையர்கள் எல்லோரும் பரிசுத்தம் உடையவர்கள்தானாம். பரிசுத்தமான வழிகளில் சென்று கடைசியாக உன் திருவருட் பேரின்பத்தை பெறும்படி கருணை செய்ய வேண்டும். கருணாமேகமான ஐயனே! என்மூததாதையர்கள்,இந்த நில உலகில் இருந்த நாட்களில் தாம் அறிந்தும், அறியாமலும் செய்த பெரும்பிழைகளை எல்லாம், தேவரீர் பொறுத்தருளி, அவர்கள் அப்பிழைகளால் மறுமை உலகத்தில் வருந்தாவண்ணம் அவர்கட்கு, நின் அருள் வெளிச்சத்தைக்காட்டி, அவர்கள் எல்லோரையும் மோட்ச வழியில் சேர்க்க திருவருள் பாலிக்க வேண்டும்” என்பது போல, பிராத்தனை செய்வதுதான் நலமுடையதாகும். இதுதான் இறந்து பொய் இந்த உலகத்தில் வருந்திக் கொண்டிருக்கும், நம் மூதாடையர்களை நல்வழியில் சேர்ப்பிக்க வல்லதாகும்.
இப்படி செய்வதை விடுத்து, “அடுத்த வீட்டுகாரனுக்காக அம்மாவாசை விரதம்” என்பதைப் போல, பிராமணர்களை வரவழைத்து, ஏதோ அவர்களுக்குத் தொலைக்கவேண்டியதை தொலைத்து, “………..என்பதாக அந்த நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
நம்முடைய ஆத்மாக்களிடன் புரியாத மொழியில் ஏதேதோ பிதற்றினால்தான் மிரண்டுபோய் இறைவனிடம் சேருமோ என்னவோ?
பிண்டன் என்றால் என்ன?
பிண்டம் என்பதற்கு உடல் என்பதாகும். இரத்தம், சதை, எலும்புடன் இருக்கும் ஸ்தூல உடம்பை விட்டு, சூட்சும உடம்பையும் குறிக்கும் சொல்லாகும். தன் தந்தை வழி முன்னோர்களின் தேவதைகளுக்கு பலிதருவது என்பதையும் குறிக்கும்.
தம் மூதாதையர்கலின் ஆத்மாவின் கடனை அடைக்கும் வேண்டுதலாக, இந்த பிண்டம் தரும் சடங்கு நிறைவேற்றப் படுகிறது.
நம் மூதாதையர்களின் கர்மத்தைக் குறைத்து, நரகத் துன்பத்திலிருந்து காப்பாற்ற, மறைதிரு. மறைமலையடிகள் கூறியது போல, நம் மூதாதையர்களின் வினைக் கடனை தீர்க்க முயலலாம்.
கிரகங்களின் காரக உறவுப் பாதிப்பு, அவிட்ட நாள் என்கிற அடைப்பு நாட்களான அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என்கிற ஐந்து நட்சத்திரங்களும், அர்த்த, திரிபாத நட்சத்திரங்களும், ரோகிணியும் இறப்பு தோஷம் தருகின்றன என்பதை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நட்சத்திரங்களை எல்லாம் உற்றுப் பார்க்கும் போது, நவக்கிரகங்களில் சுக்கிரன், கேதுவின் நட்சத்திரங்களைத் தவிர்த்து மற்ற ஏழுகிரகங்களின் நட்சத்திரங்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.
நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டுள்ள படி, “கிரகக் காரகங்களையொட்டியே நட்சத்திரங்களும், தங்கள் காரகப் பலன்களைத் தருகின்றன” என்ற கருத்தின்படி, எந்த நட்சத்திரத்தில் ஒருவன் இறந்தாலும், அந்த நட்சத்திரம், எந்த கிரகக் காரக உறவுகளைக் குறிக்கிறதோ, அந்த உறவு பாதிப்பிலோ, அல்லது ஏக்கத்திலோ இறந்தார் என்றே அர்த்தமாகும்.
உதாரணமாக, ஒருவர் சூரியனின் நட்சத்திரங்களான கார்த்திகையிளொ, உத்திரத்திலோ, அல்லது உத்ராடத்திலோ இறந்தால், அவர் தந்தையின் கோபத்திற்கு ஆளானவராகவோ, தந்தை தந்தப் பாதிப்பை எண்ணியோ, அல்லது தந்தையின் ஏக்கத்திலோ இறந்தார் என்றே அர்த்தமாகும். இதே போல் தான், மற்றக் கிரகங்களின் சாரத்தில் இறந்தாலும் காணவேண்டும்.
கிரகக் காரக உறவுகள்.
சூரியன் -          தகப்பன், தகப்பன் வழி மூதாதையர்கள்,

சந்திரன் -          தாய், வயது மூத்தப்பெண்கள், மாமியார்,
                           அத்தை, அண்ணி,  மூத்த சகோதரி.

செவ்வாய் -               சகோதரன், பெண்களுக்கு கணவன்

புதன் -              புத்தி கூர்மை உடையோர், மாமன் கணக்கர்,
                                சாணக்கியத்தனம் உடையோர், பன்மொழிப் புலவர்,
                           ஜோதிடர்கள்

குரு _                ஆசிரியர், ஆன்மீகப் பெரியோர்கள், மடாதிபதி,
குழந்தை, சாத்திர ஞானம் உடையவர்.
    
சனி _                       கடின உழைப்பாளி, முடவர், இரவுப் பணியாளர்.

இராகு _           தந்தை  வழித் தாத்தா, மூதாதையர்.
       


இந்த  ஏழுக்  கிரக காரக உறவுகளைக் காணும் போது, எல்லா உறவுகளையும் இந்த கிரகங்கள் தருகின்றன. இதில் இல்லாத உறவுகள், மனைவியும், ஞானமும் தான். இந்த இரண்டு உறவுகளுக்கும் மனதளவில் துரோகம் நினைத்தாலே, கண்டிப்பாக நரகம்தான். மனைவியானவள், செவ்வாயின் நட்சத்திரத்தில் இறந்தால், தன் கணவன் தந்தப் பாதிப்பிலோ, கணவனின் கொபத்திற்கு ஆளானவரகளாகவோ, அல்லது கணவனின் ஏக்கத்திலோ இறந்தார் என்று அர்த்தமாகும். கணவன், மனைவிக்கோ, மனைவி, கணவனுக்கோ குடும்பவாழ்வினில் துரோகம் செய்தவர்களாக இருந்து மனம் திருந்தாமல் மீதம் உள்ள வாழ்வையும், வாழ்ந்து முடிந்தவர்களின் இறப்புக்குப்பின் எத்தனை காலம் பிண்டம் தந்தாலும், இறைவன் அவர்களை மன்னிக்கப் போவதில்லை.
மேற்கூறிய காரக் உறவுகளுக்கு நாம் தரும் துன்பமும், துயரமும்,சொர்க்கப் பாதைக்கு ஏற்படுத்திக்கொள்ளும் அடைப்பாகும்.
நாம் ஒவ்வொரு உறவுகளை எல்லாம், வெறுத்து ஒதுக்கிக் கொண்டே செல்லச் செல்ல, நரகப்பாதையில் ஆண்டவன் அடைத்து வைத்த அடைப்பை, ஒவ்வொன்றாகப் பிடுங்கி, நாம் சொர்க்கப் பாதைக்கு செல்லும் வழியை நாமே அடைக்கிறோம். நரகப்பாதையைத் திறந்து விட்டு சொர்க்கப் பாதையை அடைக்கிறோம் என்பதாகும்.
இறந்த திதி அன்று பிண்டம் தருவதாலும், வழிபாடு செய்வதாலும் கூட பாவங்களை நீக்கமுடியுமா? முடியாதா? என்ற கேள்வி, நம் அடிமனதில் இருந்தாலும், கணவன், மனைவி ஞானியர் ஆகியோர்க்கு செய்யும் துரோகமும், துன்புறுத்தும் மனோநிலை உள்ளவர்களுக்கு நிச்சயமாக நரகம் தான் கிட்டும் என்பதில் ஐயமில்லை.. இதை தர்ப்பணம் தருவதாலோ, வழிபாடு செய்வதாலோ இந்த அடைப்பை எல்லாம் நீக்கமுடியாது.
அதனால், எந்த உறவுகளையும் வெறுத்து ஒதுக்காதீர்கள். மன்னியுங்கள், மன்னியுங்கள். நமக்கு எவ்வளவு துரோகங்கலை செய்தாலும், மன்னியுங்கள். ஒரு முறையல்ல. ஏழு எழுபது முறை மன்னியுங்கள்.
        “எல்லா உறவுகளையும் பெறுவதற்காகத்தான் பிறந்தோம், இழப்பதற்காக அல்ல”, ஒரு மிருகம் மனிதக் குணத்தைப் பெற்றால், அது பரிணாம வளர்ச்சி. ஆனால், மனிதன் மிருகக் குணத்திற்கு மாறினால், அது பரிணாமத்தின் தேக்கம், என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

        “பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
        தோன்றின மறையும், மறைந்தனத் தோன்றும்”    இது நம் பாட்டனின் பாட்டு. இந்த வரிகள் நமக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
நான் ஜோதிடர் ஒருவரிடம் தனிஷ்டா பஞ்சமியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இந்த நட்சத்திரங்களில் (இறக்கக் கூடாத ) இறப்பதே, ஓர் உயிருக்குத் தண்டனையாக இடப்பட்டது தான்.அந்த உயிர், இந்த பூமியில் செய்த பாவப்புண்ணியங்களின் அடிப்படையில், அந்த நட்சத்திரத்தில் இறக்க வைக்கப்பட்டு  தண்டனைத் தரப்பட்டுள்ளது.
        தனிஷ்டா பஞ்சமியும், திரிபாத, அர்த்த, ரோகிணி ஆகிய பதின்மூன்று நட்சத்திரங்களில், நீதிநெறி தவறாதவரும், ஏகப்பத்தினி விரதனும், உறவுகளை நேசிப்பவனும், இறைவனின் கோட்பாடுகளில் வாழ்ந்தவனும் மரித்தால், அந்த ஆத்மாவிற்கு கிடைத்தத் தண்டனை நரக நெருப்பா?
ஒருவன் வாழும்போது எப்படி வேண்டுமானாலும், வாழ்ந்து விட்டு, சாகும்போது தோஷமற்ற நட்சத்திரங்களில் செத்தால், அவர் வாழ்ந்த வாழ்க்கைக்குக் கிடைத்தப் பரிசுஎன்பது சொர்க்கமா? அப்படியானால், கர்மாமனம், ஆத்மா, ஜீவன் கூடு, பரவெளி ஆதாரம் எல்லாம் எதற்கு?
        பூதங்கள் அற்று பொறி பொறிஅற்றுச் சாரைப் புலன்கள் அற்று
        பேதம் குணமற்றுப் பேராசைதான் அற்றுப் பின் முன்னற்று
        காதம் கரணங்களும் அற்று ஆனந்தம் காட்சியிலே
        ஏதம் கலைத்திருப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே!
        ஐம்பூதங்களான மண், நீர், காற்று, தீ, வெளி நீக்கி, ஐம்பொறிகளான, மெய், வாய், கண், மூக்கு, செவி அடக்கி, ஐம்புலன்களான சுவை, ஒளி ஊறு, ஓசை, நாற்றம் அகற்றி, முக்குணமான இராஜசம், தாமசம், சாத்வீகம் இவைகளை அழித்து, கரணம், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் எல்லாம் ஒடுக்கி, பேராசை அறுத்து, சகலக்கேவல அவத்தைகலை ஒழித்தும், முடிவில் சிவானந்த தோற்றத்தைக் காண, “நான்” எனும் முனைப்பை அழித்து, எரிந்துவிட்டு, சிவப்பழமாய் நின்றானே பட்டினத்தார். கிடைத்ததா முக்தி? கிடைத்ததா தெய்வதரிசனம்? எதுவும் செய்யாத பத்திரகிரியாருக்கு மட்டும் எப்படி கிடைத்தது. இந்தப் பிறவியில் எல்லா கர்மவினைகளும் கணக்குத் தீர்க்கப்பட்டு விட்டதால், பத்திரகிரியார்க்கு பட்டினத்தார்க்கு முன்பே முக்தி கிடைத்தது. ஆனால், பட்டினத்தாரின் கர்மக்கணக்குகளின், சிலவற்றுக்காக, தாமதமாகதான் முக்திகிடைத்தது.
இறைவனை அடைய இத்தனைப் படிகளைக் கடந்து தான், பேரொளியில் கலக்கமுடியும். சாதாரணமான அற்பப் பிறவிகளான நாம், ஆத்மாவின் ஈடேற்றத்துக்காக எதையும் அறுத்தெறிய மாட்டோம். உலகநீதிக்கு ஒவ்வாத அத்தனைக் கேடுகளையும் செய்வோம். இறக்கக்கூடாத நட்சத்திரங்களில் இறந்தாலும் கூட, பரிகாரம் செய்வதாலும், பிண்டம் தருவதாலும், நம் கர்மவினைகளைக் குறைத்து, இறையொளியில் ஆத்மா கலக்க, நம் உறவுகள் உதவிவிடும் என்கிற நினைப்பே, நில உலக வாழ்வில், நம் கர்ம வினைகளை அதிகப்படுத்திக் கொள்ளக் காரணமாகிறது.
இறக்கக் கூடாத நட்சத்திரத்தில் இறந்த ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஆச்சாரியர்கள், இறைத்தொண்டாற்றியவர்களின்  திரு நட்சத்திரங்கள், பெரும்பாலும் தனிஷ்டா பஞ்சமி, திரிபாத, அர்த்த, ரோகிணி நட்சத்திரங்களில் தான் வருகின்றன.
        அதற்காக இந்த நட்சத்திரங்களில் இறந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும், ஆச்சாரியர்களும், இறைத் தொண்டாற்றியவர்களுக்கும் இறைவன் கொடுத்த தண்டனைதான், இந்த நட்சத்திர இறப்பா?
        இவர்கள் ஞானத்தால் இறைநிலை எட்டியவர்கள், அதனால், ஜாதகமோ, கிரகமோ, நட்சத்திரமோ வேலை செய்யாது என்று யாரவது சொல்வார்களேயானால், தாய் தந்தை உடலுறவில் கருக் கூடிப் பிறந்தவர்கள் தான் இவர்களும். மனித வடிவம் தாங்கி இறைவனைத் துதித்து, சேவை செய்து, பரப்பிரம்மமே சரணம் என சரணாகதி அடைந்து வாழ்ந்தவர்கள்.
        தன் கர்மக்கடன்களை இப்பிறவியில் தீர்த்து பிறவிச் சங்கிலியை அறுத்தவர்கள், இவர்களுக்கு மறுபிறப்பு என்பதுக் கிடையாது.
நம்மைப்போன்ற அற்பப்பிறவிகள் தான், இறைவனின் கோபத்திற்குப் பயந்து, பரிகாரங்களின் மூலமாகக் கூட கர்மக் கணக்குகளைக் கழிக்கப் பார்க்கிறோம். தீர்ப்பது, தீர்க்காமல் விடுவதும் அவன்பாடு,
ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை ஏழு பருவங்களைக் கடக்கிறான். அந்த மனிதன் ஆணாக இருந்தால்,
        1.     பாலன்
        2.     மீளி
        3.     மறவோன்
        4.     திறவோன்
        5.     காளை
        6.     விடலை
        7.     முதுமகன்
என்றும்,பெண்ணாக இருந்தால்,
       
1.     பேதை
        2,     பெதும்பை
        3.     மங்கை
        4.     மடந்தை
        5.     அரிவை
        6.     தெரிவை
7.     பேரிளம் பெண்                
என்றும் பருவமாற்றங்கள் அடைந்து, மரணம் ஏற்படுகிறது. இந்த ஏழு பருவங்களுக்கு உள்ளாகவும் மரணம் ஏற்படுகிறது.


இந்த ஏழுப் பருவங்களைக் கடக்கும் மனிதன் தான் கடக்கும் பருவங்களைத் திரும்பப் பெற இயலாதவனாகிறான். ஆனால், ஒவ்வொரு பருவங்கலில் ஏற்படும் நினைவுகளும், அனுபவங்களும் அவனை அடுத்தப் பருவ மாற்றத்துக்கு இட்டுச் செல்வதைப்போல, ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும், ஏழுபிறவிகள் எடுக்கின்றன என்பதை ஏற்கனவே பார்த்துள்ளோம். ஒவ்வொரு பிறவியில் ஏற்படும் அல்லது பதிவாகும் கர்மங்கள் எனும் இருவினைகள் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்பு  ஏற்பட்டுத்துகிறது. ஒவ்வொரு பிறவியிலும் நல்வினைகள், தீவினைகள் பதிவு செய்யும்போது, இருவினைகளில் எந்த வினைக் கூடுதல் குறைச்சலைப் பெறுகிறதோ, அதைப் பொறுத்தே சொர்க்கம் நரகம் தீர்மானிக்கப்படுகிறது.
“இந்த ஆத்மா ஒரு போதும் பிறப்பதுமில்லை. இறப்பதுமில்லை. அவ்வாறே முன் உண்டாகிப் பிறகு ஏற்படக் கூடியது என்பதில்லை. எனவே, இவ்வாத்மா பிறவாதது. இறவாதது எக்காலத்துக்கும் உள்ளது. பழைமையானது. உடல் கொல்லப் படும்போது ஆத்மாக் கொல்லப் படுவதில்லை.” சாங்கிய யோகம் – 20 ஸ்ரீமத் பகவத் கீதை;
‘ஆத்மா உண்டாவது, அழிவது என்கிற முதலும் முடிவும் அற்றது. இந்த இரண்டு நிலைகளும் ஆத்மாவிற்கு இல்லை. ஆத்மஞானம் அடைந்தவனுக்கு, இரு வினைகளும் தீண்டாது. மனதில் உள்ள சகல ஆசைகளும் போனப்பிறகு, கண்ணுக்குப் புலப்படும் உலகத்துக்கு முற்றிலும், அப்பாற்பட்ட பரமாத்மாவின் உண்மையான சொரூபத்தை நேரில் உணர்ந்து, அதில் திருப்தி அடைபவனே, ஆத்மாவில் ஆனந்தமாய் இருப்பவன். எவனுடைய புத்தி, பரமாத்மாவில் அசையாது நிலைத்திருக்கிறதோ, அவனே ஆத்மாவில் ஆனந்தமாய் இருப்பவன்”. சாங்கிய யோகம். 55 ஸ்ரீமத் பகவத்கீதை.
ஆத்மாவில் தீவினை அகற்றுவோம். நல்வினையில் நிலைத்திருப்போம். நம் ஆத்மாவை தூய்மையாக வைத்திருப்போம்.
வாழ்க வளமுடன்.  
ஆய்வு.
முத்துப்பிள்ளை
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு.
ஆத்தூர். 624 701       
        ஆத்துர். வட்டம்.       
திண்டுக்கல் மாவட்டம்.

கபேசி. 91501 06069.

Friday 14 August 2015

மனிதனின் மரணநாளின் மர்மங்கள் 4. முத்துப்பிள்ளை






ஆத்மக்காரகன் ______ சூரியன்,
மனோக்காரகன் ______சந்திரன்,
ஜெயக்காரகன் _______செவ்வாய்,
புத்திக்காரகன் _______ புதன்
ஜீவக்காரகன் ________குரு,
கர்மக்காரகன் ________சனி,
 ஞானக்காரகன் _______கேது,

இவர்களின் அருட்பார்வை இல்லாமல், எவரும் சொர்க்கவாசலைத் தொட்டு விடவும் முடியாது.

தமிழின் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியம், ஆறாம் அறிவான மனதை அடக்கி நிலை தடுமாறாமல் வாழ்ந்தால், மனச்சிதைவு ஏற்படாது என்கிறது. தமிழின் மற்றொரு தொன்மையான நூலான திருக்குறளில், பொறாமை, ஆசை, சினம், கடுங்கோபம் இந்நான்கையும் தவிர்த்தாலே மனச்சிதைவு ஏற்படாது என்கிறார் திருவள்ளுவர்.

மனதின் திறனை நல்ல உணர்வாலும், நல்ல எண்ணத்தாலும் வளர்க்காதவன், எந்த செயல்களிலும் முரண்பட்டுக் கொண்டேதான் இருப்பான். மனம் தடுமாறும் போது, சிதைவு எனும் புதைகுழியில் சிக்குவான். அதனால் கலங்குவான். அடங்க மறுக்கும் மனம் எந்த செயலிலும் ஒருபிடிப்பு இல்லாமல் இருக்கும்.

நம்மில் எல்லோருக்கும் மனம் வசமாவது இல்லை. மனம் வசப்பட்டவனால் மட்டுமே இறைவனை அடைய முடியும். மனதை நிலை நிறுத்த முடியாதவனால், இறைவனை அடையும் தூரத்தை, எளிதில் கடக்கவும் முடியாது. ஒன்றின்மேல் மனம் நிலைகொண்டால் மட்டுமே துணிவு கிட்டும். ஆத்மா பலப்படும். கர்மங்கள் கரைந்து விடும். கர்மம் தொலைந்துவிட, முக்தி கிட்டிவிடும். முக்தி கிட்டி விட்டால், பிறவிச் சங்கிலி அறுபட்டுவிடும் அதைத்தான், “மாயத்தை விட்டவனால் தான் காயத்தை விட முடியும்” என்றான் ஞானி.

“பிறப்பறுத்து ஆண்டு கொண்ட கூத்தனை நாத்தழும்பேற” துதித்த மாணிக்கவாசகப் பெருமான் போன்றவர்களால் தான், பிறப்பறுத்து முக்தி நிலையை எட்டமுடியும். இதுபோன்ற நல்வினைகளை எல்லாம் விட்டுவிட்டு, தனிஷ்டாபஞ்சமிக்காகக் குறிப்பிடும் நட்சத்திரங்களில் இறந்தால், அவர்களின் ஆத்மாவை எமதர்மராஜாவின் தலைநகரான எமப்பட்டினத்திற்கு கொண்டு செல்லப் படுவார்கள். அப்படி அழைத்து வரப்படுபவர்களுக்கு பசிதீர, பூமியிலிருந்து படைக்கப்படும்  உணவை, இறந்தவர்களின் ஆத்மா உண்கிறது என்றும், தாகம் அடங்க பூமியில் படைக்கப்படும் தண்ணீரே இறந்தவர்க்கு வழங்கப்படுகிறது என்றும்,மேலும், இருட்டான நரகப் பாதையில் நடப்பதற்கு, பூமியில் இருந்தே வெளிச்சம் காட்டப்படுகிறது என்பதாகவும், புராணங்களிலும் படித்துள்ளேன். கட்டுரைகளையும் படித்துள்ளேன். பலர் பேசக் கேட்டும் உள்ளேன். இதுபோன்ற கட்டுரைகளும், கருத்துக்களும், மக்களின் மூடநம்பிக்கையை வளர்க்கத்தான் உதவும். அறியாமையை நீக்க உதவாது.

இறைவனின் திருவடியைப் பற்ற நினைப்பவர்கள், தங்களின் மனதை நிர்வாணமாக வைத்துக்கொள்வது நல்லது. மனம் நிர்மலமாக இருக்க, சுத்தமாக இருக்க ஜோதிடமும், சில விதிகளைத் தந்துள்ளது. அதை இங்கே காண்போம். 
 
1.  இலக்கினத்துக்கு மறைவு ஸ்தானங்களான 6, 8, 12 மிடங்களிலோ, பாக்கிய ஸ்தானமான 9 மிடத்திலோ, சூரியன், சந்திரன் கூடி நின்றாலோ, அல்லது சந்திரன் நின்ற இடத்திலிருந்து மறைவு ஸ்தானங்களில் சூரியன் நின்றாலோ மனநலம் பாதிக்கும்.
2.  பொதுவாக இலக்கினத்துக்கு இரண்டாமிடத்தில் சந்திரன் நின்றாலும், இவரை பாவக்கிரகங்கள் கண்டாலும் மனம் குழம்பும்.
3.  சூரியன் சந்திரனை இராகு காண, தற்கொலை சிந்தனை மேலோங்கும்.
4.  சூரியன், ச்ந்திரனை செவ்வாய் காண, மனநலம் பாதிக்கும்.
5.  சூரியன், சந்திரனை சனி காண, பயத்தாலே மனநலம் பாதிக்கும்.
6.  சூரியன், சந்திரனை, கேது காண, அன்மீக எண்ணத்தாலே மனநலம் பாதிக்கும்.
7.  கேதுவோடு பாவக்கிரகங்கள் கூட, தற்கொலை எண்ணம் இருக்கும்.
8.  இலக்கினத்துக்கு ஐந்து, எட்டாமிடங்களில், ஒருவர் மாறி ஒருவர் அமர்ந்தாலும், செவ்வாய், சனி, இராகு, கேது முதலிய பாவக்கிரகங்கள் கண்டாலும் மனநலம் பாதிக்கும்.
9.  சூரியன், சந்திரன், புதன் இவர்களுடன் மந்தன் என்று அழைக்கப்படும் சனியின் மகனான மாந்தி கூடினாலும், அல்லது தனித்தனியே இவர்களுடன் கூடினாலும் மனநலம் பாதிக்கும்.
10.           பாவக்கிரகங்களுடன் புதன் கூட, மனம் சஞ்சலத்தால் புத்தி தடுமாறும்.
11.           பாவக்கிரகங்களுடன் சூரியன் கூட, ஆத்மாவில் தடுமாற்றம் ஏற்படும்.
12.           பாவக்கிரகங்களுடன் மனதுக்காரகன் சந்திரன் கூட, மன நோயால் பாதிக்கும்.
13.           சந்திரன், புதன் இவர்கள் நின்ற ராசிக்கு முன்னே, பின்னே பாவக்கிரகங்கள் நின்று, இவர்களுக்கு பாவக்கர்த்தாரி யோகம் ஏற்பட்டாலும்,
14.           இலக்கினத்துக்கோ, இராசிக்கோ சனி, செவ்வாய் இராகு  இரண்டு, பனிரெண்டில் நின்றாலும்,
15.           ஒன்று, ஐந்தில் சனி, இராகு நின்றாலும்,
16.           சூரியன், சந்திரன், புதன் மூவரும் இலக்கினத்துக்கு மறையக்கூடாது. மேலும், தங்களுக்குள்ளும் மறையக்கூடாது.
17.           இலக்கினத்துக்கு நான்காமதிபதியுடன் சனி, செவ்வாய், இராகு கூட, மனம் பேதலிக்கும்.
18.           இலக்கினத்துக்கு நான்காமதிபதிபதி மறைவிடங்களில் அமர்ந்திருந்தால், எதிரிகளாலும், நோயாலும், கடனாலும், விரயத்தாலும், உடல் நலம், மனநலம் பாதிக்கும்.
19.           இலக்கினத்துக்கு நான்காமிடத்தில் சனி நிற்க, எந்நேரமும் அவமானங்களாலும், மனக்கவலையுள்ளவனாக இருப்பான்.
20.           இலக்கினத்துக்கு ஏழினில்,
             “வள்ளல் இந்த இரவியைச் சனியும் தான் நோக்க
                  வழுத்திட்டேன் மனைவியால் அவதூறு குற்றம்.
             மெள்ளவே வந்துவிடும் கவலை வாய்க்கும்” 
21ஆறினில் புதன்
             “வித்தகர்க்கு மனக்கவலை உண்டேன் பாரே”
22இலக்கினத்தில் சந்திரன்
              “மனவருத்தன், மனக்கிலேசன்”
23இலக்கினத்தில் சனி
              “மனோவியாதி உடையவன்”
24பத்தினில் சூரியன்
              “எந்தையே ஆயுள் மட்டும் கவலை உள்ளவன்”
25இலக்கினத்தில் சூரியன்
               “விடுவதுமில்லை பயித்திய ரோகி”

இது போன்றக் கிரக அமைப்புகள் எவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்கள் தங்கள் மனதை செம்மைப் படுத்த வேண்டும். அதன்பின் இறைவனை அடையும் வழியினைத் தேடலாம்.

வானமண்டலத்தில் சிதறிக்கிடக்கும் நட்சத்திரக் கூட்டத்தில் ஜோதிடம் தனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட 27 நட்சத்திரக் கூட்டத்தின் 108 பாதங்களில் 20 பாதங்கள் தனிஷ்டாபஞ்சமி எனும் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களுக்குள் உள்ளது. இந்த ஐந்து நட்சத்திரங்களை மட்டும் இறக்கக் கூடாத நட்சத்திரங்கள் எனக் குறிப்பிடப்படுவது ஏன்? என சிந்தித்தப் போது,

காலபுருடனின் முதல்ராசியான மேடம், அவனின் உயிர்ராசியாகும். இதன் அதிபதி செவ்வாய் ஆகும்.
காலபுருடனின் பத்தாம்ராசியான மகரம், அவனின் கர்மராசியாகும். இதன் அதிபதி சனியாகும்.

காலபுருடனின் பதினோராம்ராசியான கும்பம், அவனின் பாதகராசியாகும். இதன் அதிபதி சனியாகும்.

காலபுருடனின் பனிரெண்டாம்ராசியான மீனம், அவனின் மோட்சராசியாகும். இதன் அதிபதி குருவாகும்.

இப்போது காலபுருடனின் உயிர், தர்மதேவன் சனி எனும் கர்மத்தில் துவங்கி, அவன் ஜீவன் மோட்சத்தில் முடிவு பெறுகிறது.

காலபுருடனின் உயிர் செவ்வாய் இராசியில் உள்ளதாக அறிந்தோம். அதேபோல் கர்மஸ்தானத்தில் செவ்வாய் நட்சத்திரம் (அதாவது அவிட்டம்) உள்ளது. இந்த செவ்வாய் கர்மஸ்தானத்தில் தான் உச்சம் அடைகிறது. அதனால் தான் காலபுருடனின் உயிர் கர்மத்தில் உச்சம்பெற்று, 11ம் இடமான லாபஸ்தானத்தில் லாபம் அல்லது பாதகம் அடைந்து, 12ம் இடமான மோட்சத்தில் முடிவு பெறுகிறது. அதனால்தான், காலபுருடனின் உயிர் கர்மத்தில் பதிவாகி, சாதகபாதகங்களை லாபத்தில் ஆய்வு செய்து அடையும் மோட்ச, நரகநிலையை சயனஸ்தானத்தில் நிச்சயிக்கப் படுகிறது. இந்த மூன்று ராசிகளில் தொடர்புடைய நட்சத்திரங்கள் ஐந்தும், அதாவது, அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி வரையிலான நட்சத்திரங்கள் தனிஷ்டாபஞ்சமியில் இடம்பெற்றுள்ளன.

தனிஷ்டாபஞ்சமிக்கான ஐந்து நட்சத்திரங்களுக்கான விளக்கங்களைக் கண்டோம். இனி மீதமுள்ள எட்டு நட்சத்திரங்களில், “ அழகு ரோகிணி”யைத் தவிர்த்து மீதமுள்ள ஏழு நட்சத்திரங்களுக்கான விளக்கங்களைக் காண்போம்.



             காலற்ற
        நாள்.    சூரியன்                    
           நட்சத்திரங்கள்                                
              உடலற்ற
        நாள்.  செவ்வாய்
          நட்சத்திரங்கள்.
             தலையற்ற
             நாள்.  குரு
           நட்சத்திரங்கள்.
          1. கார்த்திகை
         1. மிருகசீரிடம்
           1. புனர்பூசம்
          2. உத்திரம்
         2. சித்திரை
            2. விசாகம்
          3. உத்திராடம்
         3. அவிட்டம்
            3. பூரட்டாதி
 

இந்த  ஒன்பது நட்சத்திரங்களில் அவிட்டமும், பூரட்டாதியும் தனிஷ்டாபஞ்சமி எனும் ஐந்து நட்சத்திரங்களில் வந்துவிட்டதால், இதைத் தவிர்த்து மீதம் உள்ள கார்த்திகை, உத்திரம், உத்ராடம், மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம் ஆகிய ஏழு நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கும் அதிக தோஷத்தைத் தருகின்றன.

காலற்ற, உடலற்றன தலையற்றன நாளில்
கோலக்குய மடவார்த் தமைக் கூடின் மலடாவார்
மாலுக் கொழு மனை மாளிகை கோலினது பாழாம்
ஞாலத்தவர் வழிபோகினது நலமெய்திடராவமே.
       
 காலற்ற, உடலற்ற, தலையற்ற சூரியன், செவ்வாய், குரு ஆகிய நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில், ஒரு பெண்ணோடு முதன்முதலாக உடலுறவுக் கொண்டால், அச்சாதகர் மலடாவார். இந்த ஒன்பது நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் காலிமனையில் வீடோ, மாளிகையோ கட்ட, பூமி பூஜை செய்து , வேலை தொடங்கினாலோ, தொலைதூரப்பயணம் மேற்கொள்ளவோ கூடாது. பூமி பூஜை செய்தால் கட்டியவீடு பாழாகும். தொலைதூரப் பயணம் மேற்கொண்டால், போனவன், போனவன் தான். திரும்பி வரமாட்டான் என்கிறது பாடல்.
         
அதேபோல், இந்த நட்சத்திரங்களில் இறந்தவர்கள் , “வீடுபேறு” எனும் மோட்சநிலையை அடையாமல், வழிமாறி நரகப் பயணம் மேற்கொண்டு விடுவார்கள். ஒருமனிதனின் பிறப்பிற்கும், வாழ்க்கைக்கும் நட்சத்திரங்கள், கிரகங்கள், ராசிமண்டலங்கள் மூலம் ஒளி காட்டிய நம் முன்னோர்கள் நம் இறப்புக்கும், அதன்பின் நிகழப்போகும் பூடக நிலைக்கும் வழிகாட்டுகின்றனர்.

இப்போது “அழகு ரோகிணி” யை ஏன் இந்த இறக்கக் கூடாத நட்சத்திரங்களில் சேர்த்தார்கள் என்பதைக் காண்போம்.

வானில் உள்ள நவக்கிரகங்களில் சந்திரன் மட்டுமே, சூரியனிடமிருந்து ஒளியை வாங்கி பூமிக்குப் பிரதிபலிக்கும். ஜோதிடம் தேர்ந்தெடுத்துக் கொண்ட 27 நட்சத்திரப் பாதைகளில் தான், ஒவ்வொரு கிரகமும், தங்களுக்குள் நிர்ணயிக்கப் பட்ட கால அளவுகளின் படி சுழன்று கடந்து செல்கின்றன. நாம் வாழும் பூமியின் துணைக்கோள்தான் இந்த சந்திரன். இது பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகமாகும். பூமிக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்டத் தூரம் 3, 64, 400 கிலோமீட்டராகும். ஒரு அமாவாசைக்கும், மறு மறு அமாவாசைக்கும் இடைப்பட்ட நேரம் 709 மணி ஆகும். இதேபோல, மெளர்ணமி காலங்களில் பூமி நோக்கி இருக்கும், சந்திரனின் நிலப்பகுதியின் ஈர்ப்புச் சக்தியோடு, பூமி ஈர்க்கப்படும். அப்போது, ஏற்படும் இழுவைத்திறன் சமன்பாட்டால், பூமியில் இருக்கும் நீர், சந்திர இழுப்பில் இழுபட, பூமியின் ஈர்ப்புவிசையால், கடல் நீரைத் தன்னோடு இழுக்க, இந்த ஈர்ப்புப் போட்டியால் பெளர்ணமி காலத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்படுகிறது.

நம் த்மிழர்கள் நிலவை பலபெயரிட்டு அழைப்பதைப் போல, ரோமானியர்கள், “லூனா” என்றும், கிரேக்கர்கள், “ஆர்ட்டமிஸ்” என்றும் அழைகின்றனர். சந்திரனில் மிக மெலிதான வளிமண்டலம் உள்ளது. இதன் பகல் பொழுதின் வெப்பநிலை 100  டிகிரி செல்சியஸ். இரவுநேர வெப்பநிலை 173 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

கிரகங்களின் வரிசைப்படி  சூரியன், பூமி,  சந்திரன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி, என்கிற வரிசைப்படி அடுத்தடுத்து கிரகங்கள் நிற்கின்றன. இதில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும், பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் கிரகணம் ஏற்படுகிறது. அதாவது சூரியனின் ஒளி பூமியின் மேல் விழ, பூமியின் நிழல், சந்திரனின் மேல் விழ கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிலை ஏற்பட சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும், ஒரே நேர்கோட்டில் வரவேண்டும். அப்போது தான் முழுச் சந்திரக் கிரகணம் ஏற்படும். இல்லையென்றால், பாதி, அல்லது கால்பங்கு சந்திரக் கிரகணம் ஏற்படும்.

வளர்பிறை நிலவும், தேய்பிறை நிலவும் நிலவின் இயக்கத்தைப் பொறுத்தே நடக்கிறது. இயற்கை விதிப்படி வளர்பிறை நிலவைக் காண, மாலைவேலையில் மேலைவானத்தில் காணலாம். அதே போல் அதிகாலையில் கீழை வானத்தில் தேய்பிறை நிலவைக் காணலாம்.

சூரியனிடமிருந்து சந்திரன் ஒளியைப் பெறுகிறது. அந்த ஒளிக்கதிர்கள் பிறையின் முனைகளைச் சேர்க்கும். அந்த நேர்கோட்டு செங்குத்தாகவே இருக்கும். ஆனால், நாம் நேர் கோட்டை பார்க்கவில்லை. நாம் வளைவு கோட்டையே பார்க்கிறோம்.

காலபுருடனின் நான்காம் ராசியாக கடகம் உள்ளது. இது சந்திரனின் வீடாகும்.இது நீர் ராசியாகவும், சரராசியாகவும் உள்ளது. சரராசிக்குப் பதினோராம் வீடான ரிடபமே, சந்திரனின் உச்ச வீடாகவும் உள்ளது. இந்த வீட்டில் தான் ரோகிணி நட்சத்திரம் உள்ளது. ஆனாலும், சந்திரனுக்கு பாதகத்தைத் தரும் வீடாக ரிடபம் உள்ளதாகவும் கூறலாம். இந்த வீடே சந்திரனுக்கு மூலத்திரிகோண வீடாகவும் உள்ளது. கடகத்தை லக்கினமாகப் பெற்றவர்களுக்கு ரிடப அதிபதியான சுக்கிரன் கடும்பாதகத்தையே செய்வான்.

காலபுருடனின் மாரகத்தைக் கூறுமிடமாக ரிடபம் வருவதாலும், ரிடபத்தில் இருக்கும் கார்த்திகை, மிருகசீரிட நட்சத்திரமும் இறப்பு தோஷ நட்சத்திரமாகவே வருவதால், இவர்களுக்கு இடையில் உள்ள ரோகிணியும் இறப்பு தோஷ நட்சத்திரமாகக் கருதப்படுகிறது.  

என்னதான் விஞ்ஞான விளக்கமும் ஜோதிட விளக்கமும் தந்தாலும், புராண விளக்கங்களுக்கு இணையாக வேறு எந்த விளக்கமும் வராது.

தட்ஜாபிரஜாபதி எனும் மன்னனுக்கு 60 பெண்மகவுகள் இருந்தனர். தந்தையின் அனுமதி பெறாமல் மூத்தவள் தாட்சாயிணி, உலகைப் படைத்தவனான சிவபெருமானை மணந்து கொள்கிறாள். காசியபர் 13 பெண்களை மணந்து கொள்கிறார். ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிட்டுள்ள அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரப் பெண்களை பேரழகு மிக்க சந்திரன் மணந்து கொள்கிறான்.

இவர்களோடு வாழ்ந்து வரும் சந்திரன், தன் அழகுக்கு இணையான ரோகிணியுடன் அதிகமான நேசபாசத்துடன் மையல் கொண்டு அவளுடன் மட்டுமே கூடி சுகித்து வாழ்ந்து வந்தான். தங்கள் எல்லோரையும் மணந்து எல்லோரிடமும் சரிசமமாக வாழ வேண்டிய, தங்கள் கணவன், ரோகிணியிடம் மட்டும் கூடிவாழ்வதைக் கண்டு மனம்வெதும்பிய மற்ற 26 நட்சத்திரப் பெண்களும் தங்கள் தந்தையான தட்ஜா பிரஜாபதியிடம் முறையிட்டனர். எங்கள் எல்லோருக்கும் கணவனான சந்திரன் எங்களோடு வாழாமல், எங்கள் உடன் பிறந்தவளான ரோகிணியிடம் மட்டும் வாழ்ந்து இன்பம் துய்த்து, எங்களை இன்னும் கன்னியாகவே வைத்துள்ளான். இவனுடன் இங்கு இருப்பதை விட, பிறந்த வீட்டிலே வாழ்ந்து மடிந்து விடுகிறோம் எனக் கூட்டாக்கூறி, கண்கள் கலங்கி அழுவதைக்கண்ட தட்ஜாபிரஜாபதிக்கு கண்கள்  சிவக்க, மீசைத் துடிக்க, சந்திரனை காணப் புறப்பட்டார். சந்திரனின் தவறான வாழ்க்கை முறையினை எடுத்துக் கூறி, தன் மகள்கள் அனைவரிடமும் சமமாக வாழும் படி வேண்டினார்.

அதற்கு சந்திரன் மிக அலட்சியமாக, தன் மாமனார் தட்ஜா பிரஜாபதியிடம், “ என் அழகுக்கு நிகரானவ்ள் ரோகிணி ஒருத்தியே. அதனால் அவளோடு மட்டுமே வாழ்வேன். மற்ற 26 நட்சத்திரப் பெண்களுடன் இணைந்து வாழ என்னால் முடியாது”. என்றான். சந்திரனின் எடுத்தெறிந்து பேசியதைக் கேட்ட தட்ஜா பிரஜாபதிக்கு கோபம் தலைக்கு ஏறியது. உலகைக் காக்கும் சிவப்பெருமானுக்கே சவால் விட்டவராச்சே. உன் அபரிதமான அழகுதானே, தன் மகள்களின் வாழ்வை சீரழித்துவிட்டது. அந்த அழகே இல்லாமல் செய்து விட்டால், சந்திரனின் ஆணவமும் அழியும் என்று நினைத்தவர், “ நிரந்தரமில்லா அழகின் மாயத்தில் சிக்கியுள்ள சந்திரா, உன் அழகு நாள் ஒன்றுக்கு ஒரு கலை வீதம் குறையக் கடவது” என சாபம் தருகிறார்.

அதுவரை எப்போதும் நிறைமதியாக இருந்தவன், இந்த சாபத்தால், ஒரு நாள் கழிந்ததும், ஒரு கலைவீதம் இழக்க, சந்திரனின் தேஜஸ் தேய ஆரம்பித்தது. கொஞ்சம், கொஞ்சம் கருத்து வரும் சந்திரன், தன் அழகையெல்லாம் இழக்கப்போகும் கடைசி நாளில், தன் மூத்த சகலையும், தட்ஜாபிரஜாபதியால் மருமகன் என அங்கிகரிக்கப் படாத, முக்கண்ணனான சிவபெருமானையும், தாட்ஜாயினையையும் சந்தித்தான். அவனின் கருத்த உருவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது வரை நடந்த விபரம் அத்தனையும் ஒன்று விடாமல் சந்திரன் ஒப்புவித்தான்.

அதன்பின் சந்திரன் மேல் இருந்த சாபத்தை நீக்கி, சிவபெருமான் அருள்பாலித்தார். அன்று முதல் நாமொன்றுக்கு ஒரு கலைவீதம் வளர ஆரம்பித்தான். இப்படி தேய்ந்து வரும் காலம், தெய்பிறை காலமாகவும், வளர்ந்து வரும் கால வளர்பிறைக் காலமாகவும் ஆனது.

என்றுமே முழுமதியாக இருந்தவன், ரோகிணியின் மேல் இருந்த தீராத மையலால் தேய்ந்து போகலானான். இப்படி தேய்ந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொருத்  திதியாகவும் கூறப்பட்டது. அதேபோல், வளர்ந்த ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திதியாகவும் கூறப்பட்டது. இதுவே திதிகள் உருவானக் கதையாகும்.

இப்படிதிதிகள் உருவாக ரோகிணி எனும் நட்சத்திரம் காரணமாக இருந்ததால், கிழக்கு திசைகளின் அதிபதிகளான சூரியன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்களின் நட்சத்திரங்களோடு சந்திரனின் காரக நட்சத்திரமான ரோகிணியும் இணைந்து, இவைகளில் யார் இறந்தாலும், கடுமையான தோஷம் தரும்.

இப்படி சந்திரனுக்கு ஏற்பட்ட சாபத்தை நீக்கி மீண்டும் சந்திரனுக்கு உயிர் கொடுத்தார் சிவப்பெருமான். அதனால் பிறைச்சந்திரனை தன் தலையில் சூடிக்கொள்கிறார். இதனால் தான் சிவனுக்கு , “சந்திர மெளலீசுவர்” எனும் பெயர் ஏற்படக் காரணமாகியது.

சிவபெருமான் 26 நட்சத்திரப் பெண்களுக்கு வாழ்வளித்ததும், திதிகள் உருவாகக் காரணமாக அமைந்ததும், இரவுகாலத்தில் நிலவற்ற வானத்தைக் காண்பதற்கும், தனக்குக் கிரீடமாக சந்திரனைச் சூடிக் கொள்வதும், அமாவாசை, பெளர்ணமி எனும் அதீத ஈர்ப்புச் சக்தியை வெளிப்படுத்துவதன் மூலம் ப்லகீனமான உயிர்களை கவர்வதன் மூலம் வினைகளைச் செய்கிறான்.

சந்திரனின் மனைவி ரோகிணி, சிவபெருமானின் மனைவி தாட்சாயினிக்கு தங்கையாக இருப்பதால் சிவபெருமானுக்கு கொளுந்தியாளாக ஆகிறாள். அவளுக்கு சிவன் மாமனாகிறார்   அல்லவா?சந்திரனின் சாபத்தை நீக்கி, தன் தலையில் சூடிக்கொண்டதாலும், அதுவரை ரோகிணிக்கு கிடைத்து வந்த முழுமையான இன்பத்தை, கிடைக்கவிடாமல் செய்ததாலும், சிவபெருமான் சந்திரனை எச்சரித்து, மற்ற 26 நட்சத்திரப் பெண்களுடன் வாழவேண்டும் என அறிவுரை வழங்கி, அதன்படி சந்திரனை செயல்பட வைத்ததாலும், தன் சகலையின் சொல்படி, சந்திரனும் மற்ற நட்சத்திரப் பெண்களுடன் வாழ்ந்து வரலானான். தன் மடியே கதியென்று கிடந்த சந்திரன் எல்லா மனைவியரிடமும், ஒருநாள் தங்கிச் செல்வதைப் போல, தன்னிடமும் தங்கிச் செல்வதைக் கண்ட ரோகிணியால், தன் மாமன் சிவபெருமான் மேல் ஆத்திரம் ஏற்பட்டது. தன் கோபத்தால், எந்த விளைவுகளும் ஏற்பட்டுவிடாது என்பதை அறிந்த ரோகிணி, பூமியில் தன் நட்சத்திர சாரத்தில் பிறக்கும், அதாவது ரோகிணியில் பிறக்கும் ஆண்பெண் இருபாலரின் மாமன்மார்களுக்குக் கண்டத்தைத் தந்து விடுகிறது.

ஆய்வு.
முத்துப்பிள்ளை
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு.
ஆத்தூர். 624 701       
        ஆத்துர். வட்டம்.       
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி. 91501 06069. 8754873378