இன்று சந்திரனைப்பற்றி அறிந்து கொள்வோம். உங்கள் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் நிலையில், என்ன பலன் நிகழும் என்பதை இப்போது காண்போம். அதன்படி பரிகாரம் செய்து பலன்பெறுவோம்.
ஒரு நாளின் இருபகுதியில், ஒருபாதியை ஆள்பவன் சூரியன், மறுபாதியை ஆள்பவன் சந்திரன். சூரியக்கதிர்களால் உயிர்கள் உருவாகத் துவங்கின. சூரியனின் கிரணங்களை தாங்கி பூமிக்கு வழங்கும் சந்திரன், உயிர்களை தாங்கும் உடல்களை உருவாக்க தனது கதிர்களைத் தந்தது. அதனால், நமக்கு உயிராகிய இலக்கினம் சூரியனில் இருந்து கணிக்கப்பட்டது. உடலாகிய இராசி சந்திரன் இருக்கும் இடமாக இருந்தது.
சூரியன் தந்தையாக இருந்து, பூமிக்கு கதிர்களைத் தருகிறான். அதேபோல, சூரியனின் கதிர்களை வாங்கி, இரவில் நமக்கு சந்திரன் தருவதால் தாயாகிறாள்.
மனதின் காரகன் சந்திரன். எல்லா மானுட ஜீவன்களுக்கும் மனதைக்குறிப்பவன். இவன் பெண் தன்மையையும், சாத்வீகக் குணத்தையும் கொண்டவன். ஈய உலோகத்தையும், அவருடைய ரத்தினங்களாக முத்தையும் கொண்டவன். இவன் சூடிக்கொள்ளும் மலர் வெள்ளை அல்லியென்பதால், இவன் நிறம் வெள்ளையாகும்.
உயிராகிய சூரியன், தன்னுயிரை பதிக்குமிடமான இலக்கினத்தின் அதிபதி, சூரியனுக்கு 6,8,12ல் மறையக் கூடாது. உடலாகிய சந்திரன் தன்னுடலை நிலைநிறுத்தும் இடமான இராசியின் அதிபதியும், சந்திரனுக்கு 6,8,12ல் மறையக் கூடாது. மேலும், உயிரின் அதிபதியும், உடலின் அதிபதியும் ஒருவருக்கு ஒருவர் 6,8,12ல் மறையக்கூடாது. இந்த அமைப்புகளை உடைய ஜாதகர்கள் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும்.
இதேபோல, இராசியின் அதிபதியும், சூரியனும் 6,8,12ல் மறையக்கூடாது. குறிப்பாக, சூரியனும், சந்திரனும் 6,8,12ல் மறையக்கூடாது.
பொதுவாக, சந்திரன் 3,6,8,12ல் மறையக்கூடாது. காரணம் என்னவென்றால், மூன்றாமிடம் தைரிய, வீரிய ஜெயத்தில், மனம் இருப்பது, அதைரியத்தையும், வீரிய இழப்பையும், வெற்றிப்பாதிப்பையும் தந்துவிடும். கடன் நோயைக் குறிக்கும் ஆறாமிடமிடத்தில் மனம் இருப்பது கலக்கத்தைத் தரும். எட்டாமிடம் ஆயுளில் மனமிருப்பது, பயத்தைத் தரும். விரையமான பனிரெண்டில் மனமிருப்பது, மனவிரையத்தைத் தரும்.
சந்திரனின் கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10ல் குரு இருந்தால், அது கஜகேசரியோகம் என்பார்கள். கஜம் என்றால், யானையைக் குறிக்கும். கேசரி என்றால், சிங்கத்தைக் குறிக்கும். சிங்கத்தைக் கண்ட, யானைபோல் ஜாதகத்திலுள்ள தோஷங்கள் எல்லாம் சிதறியோடிவிடும் என்பார்கள். 1, 7 ல் குரு, சந்திரன் இருந்தால் , சமசப்தமத்தில் பார்த்துக்கொள்வார்கள். குருவும், சந்திரனும் இணைந்தாலோ, சமசப்தமாய் பார்த்துக்கொண்டாலோ, அது குரு, சந்திரயோகம் தான். குருவும், சந்திரனும் நான்கு, பத்தில் ஒருவருக்கொருவர் மாறி அமர்ந்தால் மட்டுமே கஜகேசரி யோகமாகும். குருவும், சந்திரனும் கூடுவது அல்லது பார்த்துக்கொள்வது மட்டுமே குரு, சந்திர யோகமாகும். இது ஒரு அவயோக அமைப்பேயாகும்.ஏழாமிடத்தில் குருவும், சந்திரனும் கூடும்போது, என்ன பலன் நிகழுமோ, அதே பலன் ஏழாமிடத்தில் பார்வையால் சந்தித்துக்கொள்ளும் போதும் நிகழும். 1, 7 ல் கூடினாலோ,பார்த்துக் கொண்டாலோ, திருமணமில்லை, செந்திருமாலும் தேவியும் விலகி இருப்பார்கள்: குமரியவள் இல்லாமல் குலமும் நாசம் ஆகும். இதை புலிப்பாணி சொல்கிறார்.
சந்திரன், சனியுடன் கூடுவதை “புனர்பூ” என்பார்கள். இதற்கு விளக்கம் தருவதாக இருந்தால், மனமெனும் சந்திரன், கர்மாவெனும் சனியின் பிடியில் சிக்கும் அமைப்பு எனலாம். தன் மனமும், உடலும் எதை விரும்புகிறதோ, அதைப் பெறுவதில் பிடிவாதமாக இருப்பார் எனலாம்.
சந்திரன், சூரியனுடன் கூடுவதை “அமாவாசையோகம்” என்பார்கள். ஆன்மாவும், மனமும் இணையலாம். மனதை ஆன்மாவுடன் இணைக்காத எவனும், மறுமையில் வாழப்போவதில்லை. சூரியனின் சாரத்தைப்பெறும் சந்திரன், மனதும், ஆன்மாவும் இணையும் நிலையைப்பெறுவார்கள். எழுத்துத்துறையில் பிரபலமடைந்து உலகப்புகழ் பெற்று, கவிதை, காவியம் என்பதெல்லாம் பிரமாதமாக எழுதி அசத்துவார்கள்.சந்திரனுக்கு முன்னும், பின்னும் (அதாவது 12 மிடம், 2 மிடம்) இராகு எனும் நிழல் கிரகம் இருக்கக் கூடாது. இருந்தால், எட்டாமதிபதி என்னகெடுபலனைத் தருவாரோ, அந்த பலனையும் சேர்த்து, இந்த பிறவியில் மொத்தமாய் அனுபவிக்க வேண்டும்.
சூரியன், சந்திரனுக்கு இடையில் பூமி ஒரு நேர்கோட்டில் வரும்போது, சூரியன் ஒளி பூமியின் மேல்பட்டு, பூமியின் நிழல் சந்திரனின் மேல் முழுவதுமாக விழ, சந்திரன் மறைக்கப்படும் நிகழ்வே சந்திர கிரகணமாகும்.
சூரியன்,இராகு,_ சந்திரன், கேது இடையில் பூமி வந்தால், சந்திரன் மறைபடும். இது சந்திர கிரகணமாகும். இன்னும், சூரியன், கேது_ சந்திரன், இராகு இடையில் பூமி வந்தால், சந்திரனுக்கு அருகில் எந்த கிரகம் உள்ளதோ, அந்த கிரகணமாகும்.
சந்திரனும், கேதுவும் கூட, வாழ்க்கையில் துயரமான நிகழ்வுகளே நடக்கும்.
சந்திரன் பலம்குறைந்தவனாய் தன் தசாவையோ, புக்தியையோ, அந்தரத்தையோ நடத்தும் காலத்தில், கெடுபலன்கள் நடக்கத் துவங்கும். மேலும், சந்திரனுடன் இணைந்த கிரகங்களின் தசா, புக்தியிலும், இந்த பலன்களை செய்யும். அதனால், சந்திரன் தொடர்புடைய தசாபுக்தி நடப்பில் உள்ளவர்களும் இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.
தங்கள் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருப்பவர்கள் மட்டுமல்ல. சந்திரன் வலுவாக உள்ள ஜாதகர்களும், இந்த பரிகாரத்தை செய்யலாம். சந்திரபலம் உள்ளவர்களுக்கு, இன்னும் பலம் கூடும் என்பது திண்ணம்.
சந்திரபகவான்
வீடு வாசலை சுத்தம் செய்தபின், குளித்து முடித்து திங்கட் கிழமை காலையில் 6.00 மணிமுதல் 7.00 வரை சந்திரனுக்குரிய ஓரையான சந்திரன் ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும். ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும்.( செவ்வாய்கிழமை என்றால் செவ்வாய் ஓரை) யாருடைய ஜாதகத்தில் வலு குறைந்த சந்திரன் உள்ளாரோ அவர் மட்டும், பூஜைநேரத்தில் வெள்ளை நிற வேட்டியோ, சேலையோ, அணிந்து கொண்டு, ஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய், பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டு, பஞ்சமுக குத்துவிளக்கை எரியவிட வேண்டும். சார்ட் அட்டையில் சந்திரனுக்காக வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின் மேல் அரிசி மாவினால் பூஜையறையிலோ, வழிபாட்டுத்தளத்திலோ, கால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும்.
மேலும்,வெண்கலத் தகட்டில் , முத்து விமானம் போல் வரைந்து மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும். தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்து, அதில் இடுவதற்காக சாம்பிராணியை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் சூடு ஆறிய பால்பாயாசத்தை, நாம் இதுவரை புலங்காத, பயன்படுத்தாத தட்டில் நிவேதனப்படையலாக வைக்கவும். சந்திரனின் அதி தேவதையான ஈஸ்வரன் படத்தையும், அதனருகில் முருக்கம் பூவையும் மந்திரக்கோலமருகில் வைக்கவும்.
சந்திரன்.
தண்ணென் நிலவாகி சராசரத்துக் கின்புதவிக்
கண்ணெகிழும் பூங்குவளை கட்டவிழ்த்து விண்ணவர்கள்
ஆரமுதம் உண்ண அருளோ டொளிபரப்பிச்
சீருறுவான் திங்கட்புத் தேள்.
சந்திர துதி.
அலைகடல் அதனில் நின்றும் அன்று வந்து உதித்தபொதும்
கலைவளர் தீபங்களாகிக் கடவுளர் எவரும் ஏத்தும்
சிலைமுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப் பிறைவாய் மேரு
மலைவலமாய் வந்த மதியமே போற்றி!
அபிராமி அந்தாதி.
திங்கட் பகவின் மணநாறுஞ் சீறடி சென்னிவைக்க
எங்கட்கொரு தவம்எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவமெய்துமோ? தரங்கக் கடலும்
வெங்கட் பணியணை மேல் துயில் கூரும் விழுப் பொருளே! 35 பாடல்.
புண்ணியம் செய்தனமே மனமே புது பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணியிங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே!
47 பாடல்.
இப்போது மனமுறுகி மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல், பார்த்துக் கொண்டே, எத்தனையோ பிறவிகளாய் தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய் சந்திர பகவானே! என சந்திரனின் துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்க, பனிபோல் பிறவித்துன்பம் விலகும். சந்திரனால் அதிகார பலமிழந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அனைவருக்கும் நன்மையே கிட்டும்.
திங்கட்கிழமையன்று ஒருவேளை சற்று சமைக்க உப்புசுவையுடன் கூடிய உணவையும், மறுவேளை அரிசி உணவையும், தங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.
உங்களின் ஜென்ம நட்சத்திரம் சந்திரசாரம் பெற்றிருந்தால், அதாவது ரோகிணி, அஸ்தம், திருவோணம் என இந்த மூன்றில் ஒரு நட்சத்திரம், உங்கள் ஜென்ம நட்சத்திரமாக இருந்தால், அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும்.
சந்திர கிரககோலம்.
அது ரோகிணியில் பிறந்திருந்தால் நாவல் மரத்தையும், அஸ்தத்தில் பிறந்திருந்தால் வேலமரத்தையும், திருவோணத்தில் பிறந்திருந்தால், எருக்கம்செடியையும் நட்டு, பராமரித்து வந்தால், சந்திரனால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெறும்.
இலக்கினத்திற்கு எந்தெந்த இடங்களில் சந்திரன் இருந்தால், பாதிப்பான நிலையில் கெடுபலன்களைத் தரும் என்பதை கண்டோம். இது மட்டுமல்ல . சந்திரன் விருச்சிகத்தில் நீசம் பெற்றிருந்த அமைப்பையுடையவர்களும், இலக்கினத்துக்கு 3, 6, 8, 12ல் சந்திரன் மறைந்துள்ளவர்களும், இலக்கினாதிபதிக்கு 3, 6, 8, 12ல் சந்திரன் மறைந்துள்ளவர்களும், பாவிகளான , குரு, சனி, இராகு, கேது முதலிய கிரகங்களுடன் கூடிய சந்திரன், எவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களும், இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது. சந்திர தசை, சந்திர புக்தி, அல்லது சந்திர அந்தரம், இந்த மூன்றும் நடப்பில் இருப்பவர்களும், சந்திர தசையோ, சந்திர புக்தியோ நடப்பில் இருப்பவர்களோ, அல்லது மூன்றில் ஏதோவொன்று நடப்பில் உள்ளவர்களும், இங்கே குறிப்பிடப்பட்டுள்ளபடி மந்திரக்கோலத்தையும், சுலோகங்களையும் பயன்படுத்தி வளம்பெற வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். அஞ்சல்.624 701
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069.
சந்திர கஓலம என்று கூறும் விபரக்குறிப்பு தேவை
ReplyDelete