இன்று சனியைப்பற்றி அறிந்து கொள்வோம். உங்கள் ஜாதகத்தில் சனி இருக்கும் நிலையில், என்ன பலன் நிகழும் என்பதை இப்போது காண்போம். அதன்படி பரிகாரம் செய்து பலன்பெறுவோம்.
ஈஸ்வரப்பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனிதான். இந்த பெயரைக் கேட்டதும், நமக்குள் சின்ன அதிர்வு இருக்கத்தான் செய்கிறது. சூரியக் குடும்பத்தில் சூரியனிடமிருந்து ஆறாவது கோளாக அமைந்துள்ளது. சூரிய குடும்பத்தில் இரண்டாவதாகப் பெரியக்கோள் சனியாகும். இக்கிரகத்துள் எப்போதும் புயல் வீசிக்கொண்டே இருக்கும். அதனால் தான், ஜாதகத்தில் சனியால் கெடுபலன்கள் நடக்கத் துவங்கினால், “சனிப்புயல்” குடும்பத்தை சின்னாபின்னமாக்கிவிடும். மற்ற கிரகத்தைப்போல இல்லாமல், சனிக்கிரகம் பனித் துகள்களையும், பாறைத் துகள்களையும், தூசிகளையும், வானவெளியில் சிதறடித்து விடாமல், தன்னுடைய ஈர்ப்பினால், அவைகளையும் இழுத்துக்கொண்டு சுற்றி வருகிறது.
இது எப்படி இருக்கிறது என்றால், குடும்பத்தில் ஒருவருக்கு சனியால் பாதிப்பு ஏற்படுகிறது என்றாலும், ஒட்டுமொத்தக் குடும்பமே, அந்த வலியையும், வேதனையும் தாங்கமுடியாமல் திணறுவதைப்போல், தன் ஈர்ப்பில் சிக்கிய எதையும் தன்னைவிட்டு அகலாமல் இழுத்துச் செல்கிறது. குருவுக்கு 63 நிலவுகளும், சனிக்கு 61 நிலவுகள் உள்ளதாக அறிவியாலார்கள் தெரிவித்துள்ளனர். இதில் புதனைவிட பெரிய துணைக்கோள்களும் உள்ளன. சூரியனை விட்டு விலகி வெகுதூரத்தில் உள்ளதால், சூரியனின் கதிர்கள் சனியை தொடுவதுகூட இல்லை. அதனால்தான், ஜாதகத்தில் சூரியனுக்கு அடங்காத மகனாக சனியை சித்தரிக்கப் பட்டுள்ளார். சூரியனுக்கு சனி பகையாகவும், சனிக்கு சூரியன் பகையாகவும் சொல்லப்பட்டுள்ளது.
காலதாமதம், சோம்பேறிகள், ஊனமுற்றவர்கள், வயதான நபர்கள், இளமையில் கிழத்தோற்றம், ஆயுள், கரியநிறம், அடிமைகள், கடைநிலை ஊழியர்கள், வேலைக்காரர்கள், அழுக்கான சேரிகளில் வசிப்பவர். இருட்டு, சின்ன சின்ன திருட்டு, தொழில் காரகன், அதிகாரமற்ற சீருடை பணியாளர்கள், வலி, துக்கம், வேதனை, கருப்பு நிறம், இரும்பு, உடலிலுள்ள எல்லாகழிவுப்பொருட்கள், தோல், கரிய நிற முடி, ஆண்,பெண் மலட்டுத்தன்மை, இரவுவேலை, பொய், கஞ்சத்தனம், சில்லறை, வறுமை, ஊனம், ஏமாறுதல், ஏக்கம், அக்கம்பக்கம், அமைதியான வீட்டு விலங்குகள், பக்கவாதம், விடாமுயற்சி, விவேகம், இழப்பு, தத்துவம், ஆகிய காரகங்களைக் கொண்டதாகும்.
பொதுவாக சனிக்கிரகம் பாவத்தன்மை மிகுந்த கிரகமாகும். சனியின் பலன்கள் எல்லாம், துக்கம், வேதனை, வலி, அழுகை, பயம், இவற்றில் எல்லாம் நம்மை சிக்கவைத்தாலும், துன்பகாலங்களில் முடிவில், புடம்போட்ட தங்கமாய், நல்லவனாய், பொறுமைமிக்கவனாய், சாத்வீககுணம் நிரம்பியவனாய் மாற்றிவிடுகிறது. சனியின் ஆரம்ப பலன்கள் துன்பமாக இருந்தாலும், முடிவில் நல்லதாகவே முடியும்.
கலி என்கிற யுகம் உண்மைக்கும், நேர்மைக்கும் எதிரானதாகும். சிறு திருட்டை சனி குறிப்பது போல, பெரிய திருட்டை இராகு குறிக்கிறார். ஞானத்தையும், சந்நியாசத்தையும் தரும் கிரகம் கேதுவாகும். இந்த மூன்றுகிரகங்கள் தான் கலியுகத்தை ஆட்சி செய்கின்றன. இந்த யுகத்தில் கொள்ளையும், கொலையும், ஏமாற்றுதலும், ஞானமும், துறவும் படும்பாடு என்ன என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.
ஒவ்வொரு மதத்திலும் உள்ள மதவாதிகள் செய்த கொலையும், பாலியல் கொடுமையும், குற்றப்பிண்ணனியும், வன்கொடுமைகளும், துறவு மற்றும் ஞானத்தைப்பற்றிய புரிதலை நமக்கு காட்டுகின்றன. இந்த சனி, இராகு, கேதுவெனும் மூன்றுகிரகங்களும் கலியுகத்தை ஆட்சி செய்யும்வரை, இவை எதுவும் குறையாது.
ஒவ்வொரு மதத்திலும் உள்ள மதவாதிகள் செய்த கொலையும், பாலியல் கொடுமையும், குற்றப்பிண்ணனியும், வன்கொடுமைகளும், துறவு மற்றும் ஞானத்தைப்பற்றிய புரிதலை நமக்கு காட்டுகின்றன. இந்த சனி, இராகு, கேதுவெனும் மூன்றுகிரகங்களும் கலியுகத்தை ஆட்சி செய்யும்வரை, இவை எதுவும் குறையாது.
சனி என்கிற இருள் கிரகத்துக்கு, ஒளிக்கிரகமான சூரியனும், சந்திரனும் பகைக்கிரகங்களாகும். மந்தமாக செயல்படும் சனிக்கு, துரிதமாகவும், சிந்திக்காமலும் செயல்படும் செவ்வாயும் பகைக்கிரகமாகும்.
சூரியனிலிருந்து வெகுதொலைவில் இருப்பதால், சூரியனின் கதிர்கள் சனியை சென்றடைவதில்லை. அதனால், இருள் சூழ்ந்த கிரகமாகவே இருக்கிறது. இருட்டுக்குள் இருப்பவன் நல்லவனா? கெட்டவனா? என்பது தெரியாது. திருடனுக்கும், கொலைகாரனுக்கும், படுபாதகம் செய்பவனுக்கும், ஓடி ஒளிபவனுக்கும் எப்படி இருட்டு தான் ஏற்ற மறைவிடமாக இருக்கிறதோ, அதேபோல, எத்தனை பிறவியெடுத்தோம், எடுத்த அத்தனை பிறவிகளிலும் என்ன வினை செய்தோம் என்கிற நினைவே இல்லாமல், இந்தபிறவியில் மாட்டிக் கொண்ட நமக்கு, எந்த கர்மவினை எப்படித் தீர்க்கவேண்டும் என்கிற வித்தை தெரிந்த தர்மதேவன் சனிதான் நீதிபதி. இவன் தீர்ப்புக்கு பரிகாரமில்லை. வாய்தாவும் இல்லை. பல தொப்புள் கொடியின் தொடர்பைக் கண்டதுதான் கர்மா.
சூரியன், சனியுடன் கூடி, 1, 2, 4, 7, 8, 12 முதலிய இடங்களில் அமர, கெட்டபலன்களே நடக்கும். இதை சூரியனைப் பற்றிய கட்டுரையிலே கண்டுள்ளோம். இதன் காரணம் என்னவெனில், ஒன்றாமிடம் என்பது உயிர்ஸ்தானமாகும். இதில் சூரியன் இருக்க அசுபபலனே ஏற்படும். அதேபோல், சனியும் அங்கே இருந்தால், திருமணத்தால் கெட்டபெயரே ஏற்படும். அசுபபலனே தான் மிஞ்சும். இவை மட்டுமல்லாது, சந்திரனும் கூடி நின்றால், அது ஜென்ம சனியாகிவிடும். அப்படியானால், கொடுமைக்கு அளவு இல்லாமல் போய்விடும்.
இரண்டாமிடம் குடும்ப ஸ்தானமாகும். இதில் சூரியன், சனி கூட, மனைவியுடன் வாழாத நிலையைத் தருவார்கள். நான்காமிடம் சுகஸ்தானமாகும். இவர்கள் கூட சுகவாழ்வே இல்லாத நிலையையும், ஏழாமிடம் களத்திர ஸ்தானமாகும். திருமணவாழ்வு கோர்ட், கேஸ் என தள்ளாடும். எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானமாகும். தாலியை அறுத்தெறியும் நிலைக்கு ஆளாவர். பனிரெண்டாமிடம் படுக்கை ஸ்தானமாகும். சண்டை, சச்சரவில் தூக்கம் எங்கே வரும். இப்படி சூரியன், சனி கூடுவது குடும்ப வாழ்வுக்கு ஆகாது.
சனியும், சந்திரனும் கூடி, 1, 2, 4, 5, 6, 7, 8, 12 முதலிய வீடுகளில் அமர, அசுபபலனே நடக்கும். இதில்சூரியனை விட ஐந்தாமிட புத்திரஸ்தானமும், ஆறாமிடம் கடன் வழக்குகளைக் குறிக்கும். இதில் சூரியனைவிட சந்திரனே சனியுடன் கூடும்போது அசுபபலனை அதிகம் தருகிறது.
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களுடன் சனி கூடும் பலனை, ஒவ்வொரு கிரகத்துக்கான கட்டுரையிலும் காணலாம். இந்த கூட்டுகளும் குடும்பவாழ்வுக்கு ஆகாத நிலையைத்தான் தருகிறது.
திருமணத்திற்கும், சனிக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ஆய்வு செய்யும் போது, திருமணப்பிரச்சனைகள், மனைவி, களத்திரஸ்தானம் என்று ஏழாம்வீட்டுக் காரகத்தைத் தருவதாக ஜாதகபாரிஜாதம் எனும் நூல் கூறுகிறது.
எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் நாம் வாழும் வாழ்வு, இரண்டு வழிகளில் தான் பயணப்படும். ஒன்று இல்லறம். மற்றொன்று துறவறம். இப்படித்தான் பெரும்பாலும் அமைகிறது. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக தனிமரங்களும் தவித்து வருகின்றன. கர்மாவெனும் பிறவித் தொடுப்பால் தான், இல்லறமும், துறவறமும், தனிமரமும் ஏற்படுகிறது. இல்லற சோகங்களுக்கு சனியும், துறவற முடிவுகளுக்கு கேதுவும் பொறுப்பேற்கின்றன. இவைகளுக்குள் ஏற்படும் பாலியல் கொடுமைகளுக்கு இராகு எனும் போகக் காரகனான பெரும் திருடனே பொறுப்பு ஏற்கிறான்.
ஜென்மராசிக்கு (அதாவது சந்திரன் இருக்கும் வீட்டிற்கு) 12- 1-2 ம் ராசிகளை சனி கடக்கத் துவங்கும் காலங்களில், அந்த ஜாதகர்க்கு ,“ஏழரை நாட்டு சனி” துவங்குகிறது.
ஜென்மராசிக்கு, 4ம் வீட்டில் சனி சஞ்சரிக்கத் துவங்கும் காலங்களில், அந்த ஜாதகர்க்கு, “அர்த்தாஷ்டமச் சனி” துவங்குகிறது.
ஜென்மராசிக்கு, 7ம் வீட்டில் சனி சஞ்சரிக்கத் துவங்கும் காலங்களில், அந்த ஜாதகர்க்கு, “கண்டச்சனி” துவங்குகிறது.
ஜென்மராசிக்கு, 8ம் வீட்டில் சனி சஞ்சரிக்கத் துவங்கும் காலங்களில், அந்த ஜாதகர்க்கு, “அஷ்டமச்சனி” துவங்குகிறது.
அர்த்தாஷ்டமச்சனி, கண்டச்சனி, அஷ்டமச்சனி இந்த மூன்றும், ஏறத்தாழ ஒரேவிதமான கெட்டபலன்களைத் தரும். ஏழரைச்சனியில் முதல் சுற்று, மங்குசனி என்பர். இது கஷ்ட நஷ்டத்தை தரும். இரண்டாம் சுற்றை, பொங்கு சனி என்பர். இது சிரமத்தைத் தரும். ஆனால், வாழ்வில் திருப்புமுனையை தரும். மூன்றாம் சுற்றை, மரணச்சனி என்பர். உடல்நலக் கோளாறும், மரணமும் இதில் ஏற்படும்.
இந்த மூன்றுவிதமான (4, 7, 8) சனியில் 7 ½ ஆண்டுகளும், ஏழரைச்சனியில் (12,1,2) 7 ½ ஆண்டுகள் என 15 ஆண்டுகளும், மிகமோசமான பலன்களைத் தந்துவிடும். மேலும்,
5 மிடம் புத்திர சோகத்தையும், பிறரை நிந்தித்து, போட்டி, பொறாமையுடன் வாழ்வார். 9 மிடம் சகோதரரால் கஷ்டநஷ்டம், தகப்பன் தோஷம், மக்களின் வெறுப்புடன் வாழ்க்கை முதலிய பலன்களும், 10 மிடத்தில் சுமாரான பலன்களும் ஏற்படும்.
மீதம் இருக்கும் 3, 6, 11 மிடம் மட்டுமே சனியால் நல்லபலன்களை தந்துவிடமுடியும். இந்த 3,6,11 மிடத்தில் இருக்கும் சனியும், பிறப்புகாலத்தில் வலுவுடன் இருந்தால்தான் நல்லபலன்களைத் தரமுடியும். மாறாக, அஸ்தங்கமோ, வக்கிரமோ, சூரிய, சந்திர, செவ்வாய் தொடர்போ, அட்டமாதிபதியுடனான இணைவோ இருந்தால் கெட்டபலன்களே நடக்கும். ஞானக்காரகன் கேதுவும், கர்மக்காரகன் சனியும் கூட, முன் ஜென்ம வினைப்பயனால், இல்லறவாழ்வில் இழுபறி ஏற்படும்.
ஜாதகர்க்கு சனிதசையோ, சனிபுக்தியோ, சனி அந்தரமோ நடப்பில் இருந்து, சனியால் பெருங்கொடுமையை சந்திப்பவராக இருந்தால், அவர்கள் சனிக்கிரகத்துக்கு சாந்தி செய்வதுகொள்வது நல்லது. தன் வீட்டிலோ, சனியின் திருத்தலங்களான, திருநள்ளாறு, குச்சனூரிலோ, தன் சொந்த ஊரில் சிவத்தலத்திலோ சின்னசின்ன பரிகாரங்களை செய்யலாம்.
இரவு நேரத்தில் கைப்பிடி எள்ளை கருப்புத்துளியில் சுற்றி தலையணைக்கு கீழ் வைத்து படுத்துறங்க வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததும், வடித்த சாதத்துடன் எள்ளை கலந்து காகத்துக்கு வைத்துவர, சனியால் நடக்கும் கெடுபலன்கள் குறையத் துவங்கும்.
குச்சனூரிலோ, திருநள்ளாறிலோ இரவு தங்கியிருந்து, காலையில் நள தீர்த்தத்தில் நீராடி விட்டு, சனீஸ்வரனை வழிபட கெடுபலன்கள் குறையும்.
வளர்பிறை, தேய்பிறை காலங்களில் வரும் திரயோதசி திதியில் சிவத்தலங்களில் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும். அந்த திரயோதசி திதியும், சனிக்கிழமையும் கூடிவரும் நாளே சனிப்பிரதோஷ நாளாகும். இந்த தினம் மிகவும் விசேடமானதாகும். அன்று வழிபாடு செய்தால், சனியால் நடக்கும் கெடுபலன்கள் குறையும்.
சனியுடன் இணைந்த கிரகங்களைப்பற்றியும், யோகத்தைத் தரும் கிரகங்களைப் பற்றியும், சனியைப்பற்றி அடிப்படை விடயங்களை தெரிந்திருப்பிர்கள். இந்த பொதுவான விபரங்களை அறிந்தாலே, உங்கள் ஜாதகத்தில் சனி எங்கே உள்ளது என்பதை அறிந்து, இங்கு குறிப்பிடப்போகும் மந்திரக்கோலத்தையும், கிரக துதிப்பாடலையும் பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுங்கள்.
வீடு வாசலை சுத்தம் செய்தபின், குளித்து முடித்து சனிக் கிழமை காலையில் 6.00மணிமுதல் 7.00வரை சனிக்குரிய ஓரையான சனி ஓரையில் இந்த பரிகாரத்தை செய்ய துவங்கவேண்டும். ஒவ்வொரு தினத்தின் முதல் ஓரை அந்த தின அதிபதியின் ஓரையாகும். யாருடைய ஜாதகத்தில் வலுக்குறைந்த சனி உள்ளாரோ அவர் மட்டும், பூஜைநேரத்தில் கருப்புநிற வேட்டியோ, சேலையோ, அணிந்து கொண்டு, ஆமணக்கு எண்ணெய்(விளக்கு எண்ணெய்), தூய நல்லெண்ணெய், பசும்நெய் இந்த மூன்றையும் சரிசமமாக கலந்து ஒன்றாக்கி பஞ்சமுக விளக்கில் நிறைவாய் இட்டு, பஞ்சமுக குத்துவிளக்கை எரியவிட வேண்டும். சார்ட் அட்டையில் சனிக்காக வரைந்து வைத்துள்ள கிரக கோலத்தின்மேல் எள்ளை பொடிசெய்த தூளினால் பூஜையறையிலோ, வழிபாட்டுத்தளத்திலோ, கால்மிதிபடாத இடத்தில் இந்த மந்திரக்கோலத்தை வைத்து வரையவேண்டும். மேலும், இரும்புத்தகட்டில் காகம் போல் வரைந்து மந்திரக்கோலத்திற்கு அருகில் வைக்கவேண்டும். தூபக்கரண்டியில் தீக்கங்குகளை வைத்து, அதில் இடுவதற்காக கருங்காலிப்பொடியை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் எள்சாதத்தை, நாம் இதுவரை புலங்காத, பயன்படுத்தாத தட்டில் நிவேதனப்படையலாக வைக்கவும்.
சனியின் அதிதேவதையான யமனின் படத்தையும், அதனருகில் வன்னி இலையையும் மந்திரக் கோலம் அருகில் வைக்கவும்.
சனியின் அதிதேவதையான யமனின் படத்தையும், அதனருகில் வன்னி இலையையும் மந்திரக் கோலம் அருகில் வைக்கவும்.
சனிக்கிழமையன்று ஒருவேளை உணவாக எள் சாதத்தையும், மறுவேளை எள்சீடை, எள்ளுருண்டை, எள்முருக்கு உணவாக்கிக் கொள்ள, தங்கள் சாப்பாட்டு பட்டியலில் சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது மனமுறுகி மந்திரக்கோலத்தை இமை கொட்டாமல், பார்த்துக் கொண்டே, எத்தனையோ பிறவிகளாய் புத்தியில் அறிவிக்கப்பட்டு தொடுத்துவரும் கர்மப்பலனை இப்பிறவியில் தீர்த்து பேரருள் புரிவாய் சனி பகவானே! என சனியின் துதிப்பாடலை மனமுறுகி ஒன்பதுமுறை மனதுக்குள் துதிக்க, பனிபோல் பிறவித்துன்பம் விலகும்.
சனி.
வெய்யசுட ரோன்சாயை மேவுமகன் குற்கரத்தான்
பைய நடக்கின்ற பங்கு, கரு_ மெய்யன்
இனியன் அருளுங்கால், இன்றேல் கொடியேன்
சனியன் அவன்சீற்றம் தவிர்.
சனி துதி.
முனிவர்கள் தேவரேரும் மூர்த்திகள் முதலினோர்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டா?
கனிவுள தெய்வம் நீயே கதிர்செயே காகம் ஏறுஞ்
தமியனேற்கு அருள் செய்வாயோ!!!
அபிராமி அந்தாதி
வவ்விய பாகத் திறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியும் நீர்த்தென்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என் மேல்வரும் போது வெளி நிற்கவே 18.
இழைக்கும் வினைவழியே எடுங்காலன் என்னநடுங்க
அழைக்கும் பொழுது வந்தஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே!
உழைக்கும் பொழுதுன்னையே அன்னையே! என்பன் ஓடிவந்தே. 33.
உங்களின் ஜென்ம நட்சத்திரம் சனிசாரம் பெற்றிருந்தால், அதாவது பூசம், அனுஷம், உத்ரட்டாதி, என இந்த மூன்றில் ஒன்று, ஜென்ம நட்சத்திரமாக இருந்தால், அவர்கள் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது ஒரு மரத்தை நட்டுவிடவேண்டும். அது பூசத்தில் பிறந்திருந்தால் அரச மரத்தையும், அனுஷத்தில் பிறந்திருந்தால், மகிழ மரத்தையும், உத்திரட்டாதியில் பிறந்திருந்தால், வேப்பைமரத்தையும், நட்டு, பராமரித்துவந்தால், சனியால் நிகழ்ந்த பலக்குறைவு நிவர்த்தியாகி பலம்பெறும்.
இலக்கினத்திற்கு எந்தெந்த இடங்களில் சனி இருந்தால், பாதிப்பான நிலையில் கெடுபலன்களைத் தரும் என்பதை கண்டோம். இது மட்டுமல்ல. சனி மேடத்தில் நீசம் பெற்ற அமைப்பையுடையவர்களும், இலக்கினத்துக்கு 8, 12 ல் சனி மறைந்துள்ளவர்களும், இலக்கினாதிபதிக்கு 8, 12 ல் சனி மறைந்து உள்ளவர்களும், பாவியான, சூரியன், சந்திரன், செவ்வாயுடன் கூடிய, சனி எவர் ஜாதகத்தில் இருந்தாலும் அவர்களும், இந்த எளிய பரிகாரத்தை செய்வது நல்லது.
சனிதசை, சனிபுக்தி,அல்லது சனி அந்தரம், இந்த மூன்றும் நடப்பில் இருப்பவர்களும், சனி தசையோ, சனி புக்தியோ நடப்பில் இருப்பவர்களோ, அல்லது மூன்றில் ஏதோவொன்று நடப்பில் உள்ளவர்களும், இங்கே குறிப்பிடப்பட்டுள்ளபடி மந்திரக்கோலத்தையும், சுலோகங்களையும் பயன்படுத்தி வளம்பெற வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை,
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். அஞ்சல்.624 701
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069.
.
No comments:
Post a Comment