இந்த சூரிய மண்டலத்தை 360 பாகையாக
12 இராசிமண்டலமாக, 27 நட்சத்திரத் தொகுதிகளை உள்ளடக்கி, 108 பாதங்களாகவும், அதில் ஒன்பது
கோள்கள் உலாவும் வரவைத்து, இந்த பூமிப்பந்தில் உள்ள எல்லா உயிரினங்களையும், கண்டங்களின்
வேறுபாடுகள் இன்றி இயக்கி வரும் சக்திக்கு கடவுள் என்று பெயரிட்டாலும் சரி, அல்லது
நமக்கும் மேலே, “ஏதோ” வொன்று என்று மீறிய சக்தியாகப் பாவித்தாலும் சரி. இங்கே இயக்கம்
என்பதும் உறுதி, அதனால் இயங்குகிறோம் என்பதும் உறுதி தானே.
மேற்கூறிய நீள்வட்டப்பாதைக்குள்
தான், இந்த ஒன்பது கோள்களும், துணைக் கோள்கள்
இருந்தால் அவைகளும் இயங்கி வந்தாக வேண்டும். அப்படியானால், இக்கோள்கள்களுக்குள் நல்லன,
கெட்டன என்று தீர்மானித்தது யார்? எந்தவிதமான அளவுகோலைப் பயன்படுத்தினார்கள்.
ஒரு கோளகத்தால் மனிதவர்க்கத்துள்
நிகழும் நல்ல, கெட்ட பலன்களின் காரகத்தைக் கணக்கிட்டே நல்லக்கோள், கெட்டகோள் என்று
பிரித்துள்ளனர். அதனால் கெட்ட கோள்கள் என்று பிரித்தவைகள் எப்போதும் கெட்டப்பலன்களே
செய்யும் என்று கூறிவிட முடியாது. அதேபோல், நல்லகோள்கள் என்று சொன்னவைகள் நல்லப்பலனையே
செய்யும் என்றும் எண்ணிவிடக்கூடாது.
இலக்கினம் என்கிற தலையில் இருந்து,
உள்ளங்கால் எனும் பனிரெண்டாமிடம் வரை எல்லா நல்ல, கெட்டகோள்கள் தான் அமர்ந்து, உடல்
உறுப்புகளை இயக்கும். இதில் உறுப்புகளின் செயல்பாட்டில் கோளாறுகளும், பழுதும், நீக்குதலும்
ஏற்பட வாய்ப்புண்டு. இதேபோல்தான் வாழ்க்கையின் ஒவ்வொரு கோணங்களும் இந்த கோளகங்களால்
மாற்றம் அடைகின்றன.
நம்முடைய ஜாதகத்தில் இலக்கினத்திற்கு
நான்கில் சந்திரனும், ஐந்தில் குருவையும்,
மற்றும் ஏழில் சுக்கிரன் இருப்பதையும் யாராவது விடயம் தெரிந்தவர்கள் விரும்புவார்களா?
விரும்பமாட்டார்கள் அல்லவா? அப்படி அமைந்த ஜாதகத்திற்கு தீர்வு என்ன? இதுதான் இக்கட்டுரையின்
நோக்கம்.
தாயின் வெறுப்பையும், தாயை வெறுப்பதையும்
உளவியல்ரீதியாகத்தான் தீர்க்கமுடியும். அதேபோல, ஐந்தில் இருக்கும் குரு ஜீவ அணுக்களை
வலுவிழக்க செய்வார் என்பதனை முன்கூட்டியே அறியும் நாம், அதற்கான மருத்தவமுறைக்கு பரிந்துரைக்கலாம்.
மேலும், எழில் இருக்கும் சுக்கிரன் அதீத காமக் களியாட்டங்களைத் தூண்டிவிடக் கூடாது
என்பதற்காக, இளம் பருவத்திலே ஞானமார்க்கத்தின் நன்னெறிகளை ஊட்டி வளர்க்கலாம் அல்லவா?
இதுபோல, எதுவெது எதிர்மறை பலனாக நடக்கிறதோ, அந்த பலன்களுக்கான எதிர்பலன்களை ஜாதகருக்கு
உளவியல் ரீதியாக சொல்லலாம்.
அன்புடன். முத்துப்பிள்ளை.
No comments:
Post a Comment